Skip to main content

பெரியார் மொழி பேசும் போஸ் வெங்கட்!

Published on 26/02/2020 | Edited on 01/03/2020

'மெட்டி ஒலி' தொலைக்காட்சித் தொடர் மூலம் தமிழக இல்லங்களிலும் இதயங்களிலும் இடம் பிடித்த போஸ் வெங்கட், பின்னர் வெள்ளித்திரையிலும் ஜொலித்தார். நடிகராகத் தடம் பதித்த வெங்கட், தான் விரும்பிய சினிமாவில் இயக்குனராக அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். போஸ் வெங்கட் இயக்கிய படமென்றதும் நமக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? ஒரு குடும்பப்படம் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 'கன்னி மாடம்' என்ற தலைப்பை பார்த்ததும் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் மாறலாம். ஆனால், முதல் காட்சியிலிருந்தே ஆச்சரியம் தருகிறார் போஸ் வெங்கட்.


 

kanni madam auto stand



"என்னய்யா... உங்க ஆட்டோ ஸ்டாண்டு போர்டுல எல்லார் பேர்லயும் தலைவர்னு போட்டுருக்கு?" என்று ஒருவர் கேட்க "இது பெரியார் ஆட்டோ ஸ்டாண்டு, இங்க எல்லாரும் தலைவர்தான்" என்கிறார் ஆட்டோ ஓட்டுனர். தொடக்கத்திலிருந்து இறுதிவரை முற்போக்குக் கருத்துகளை, திராவிட சிந்தனையை, எளிய மக்களின் வாழ்க்கையை படமாக உருவாக்கியுள்ளார் போஸ் வெங்கட். இதிலென்ன ஸ்பெஷல் என்றால் எந்தக் கருத்தும் பிரச்சாரமாகவோ அலுப்பூட்டும் வசனங்களாகவோ, குறிப்பிட்ட சமூகங்களின் மீதான வன்மமாகவோ இல்லாமல் கதையாகவும் சுவாரசியமான காட்சிகளாகவும் இருப்பதுதான். 'இந்த காலத்திலயுமா சாதி பாக்குறாங்க?' என்று படத்திலேயே ஒரு பாத்திரம் கேட்க, அதற்கு பதிலாக தன் படத்தையே தந்திருக்கிறார் போஸ்.

"நம்ம உசந்த சாதின்னாலும் எண்ணிக்கையில கம்மியா இருக்கோம். அதுனால நாம ஒட்டி இருந்தாதான் நமக்கு நல்லது" என்று உறவினருக்கு அட்வைஸ் செய்யும் சாதிப் பற்றுடைய தந்தை, தங்கள் தொகுதி எம்.எல்.ஏவாகவே இருந்தாலும் தங்களை விட குறைவு என்று கருதப்படும் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது மகனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார். ஆனால் அவரது மகளோ எம்.எல்.ஏவின் சமூகத்தை சேர்ந்த இன்னொரு இளைஞனை காதலித்து, குடும்பத்துக்குத் தெரியாமல் வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ, குடும்பத்தில் பூகம்பம் உண்டாகிறது. அவளது தாய் தற்கொலைக்கு முயன்று கோமாவுக்கு செல்கிறார். கோபம், வெறியாக மாற தனது மகளையும் அவளது கணவனையும் கொலை செய்துவிட்டு சிறை செல்கிறார். குடும்பமே சிதைந்து போக, அவரது மகன் சென்னை வந்து ஆட்டோ ஓட்டுனராகிறான். 'பெரியார் ஆட்டோ ஸ்டாண்'டில் உறுப்பினராகி சாதியை விட சகமனிதனே மேல் என்னும் மனநிலையோடு வாழ்கிறான் நாயகன் அன்பு.

 

kanni maadam pair



அந்த சமயத்தில் மதுரை பக்கமிருந்து ஒரு பணக்கார இளைஞன், ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு எளிய பெண்ணை காதல் செய்து அவளுடன் வாழ்வதற்காக அழைத்துக்கொண்டு சென்னை வர, அவர்களுக்கு உதவியாக இருக்கிறான் அன்பு. திடீரென அவர்களை கொல்ல வேண்டுமென்ற வெறியோடு அந்த இளைஞனின் குடும்பத்தினர் தேட, இருவரும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர். காலம் அப்படியே செல்லுமா? திடீரென ஒரு விபத்தில் அந்த இளைஞன் உயிரிழக்க, அந்தப் பெண் தனித்து நிற்கிறாள். அவளுக்கு ஒரு கண்ணியமான துணையாகிறான் அன்பு. ஆனாலும் சாதி உணர்வு சும்மா இருக்குமா? சிறையில் இருந்து பரோலில் வரும் தந்தை மீண்டும் ஒரு வெறியாட்டம் ஆட 'சாதி மனிதனை சாக்கடையாக்கும்' கதை சொல்லி முடிகிறது படம். பொதுவாக ஆதிக்க சாதிப் பெண்ணை காதல் செய்யும் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞனை நம் திரைப்படங்கள் படமாக்கியுள்ளன. ஆனால், அது அப்படியே பால் மாற்றி நிகழ்ந்தாலும் சாதி, காதலை அணுகும் விதம் மாறாது என்பதை உணர்த்துகிறது 'கன்னி மாடம்'.

 

 

gajaraj



படத்தின் முக்கிய கதை இதுவென்றால், பல முற்போக்கான பாத்திரங்களையும் காட்சிகளையும் போகிற போக்கில் காட்டி மகிழ்விக்கிறார் போஸ் வெங்கட். ஆண்களோடு ஆண்களாக ஆட்டோ ஓட்டும் அந்தப் பெண், அவளுடனான சக ஆட்டோ ஓட்டுனர்களின் நட்பு, தன் மீது அன்பு கொண்டவரை அவரது தோற்றம் குறித்து கவலை கொள்ளாமல் திருமணம் செய்ய எடுக்கும் முடிவு, மத பேதம் இல்லாமல் ஒருவரின் தெய்வத்துக்கு இன்னொருவர் தரும் மதிப்பு என ஒரு சின்ன கனவு சமூகத்தை கண் முன் நிறுத்தியிருக்கிறார் போஸ். பணம், போட்டி, சாதி என எதையும் தூக்கி சுமக்காமல் சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தும் எளிய மனிதர்களின் வாழ்க்கை நம்மை மகிழ்விக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது கருத்து சொல்லி 'போர்' அடிக்கும் படமா என்று எண்ண வேண்டாம். அடிக்கடி நம்மை சிரிக்க வைக்கின்றன 'ஆடுகளம்' முருகதாஸின் ஆரோக்கியமான காமெடிகள், சுவாரசியம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை.

படத்தின் காட்சிகள் நடக்கும் ஒவ்வொரு இடமும் உண்மையான இடங்கள், அங்கு நிகழ்பவை நிதர்சனமான சம்பவங்கள்... எதுவுமே செயற்கையாகத் தெரியாத ஒரு நிஜ வாழ்வை படமாக்கிய வகையில் ஒரு இயக்குனராக முழு வெற்றியடைந்திருக்கிறார் போஸ் வெங்கட். நாம் பார்க்கும் நிஜமான சென்னை, ஒரு சின்ன அறைக்குள் அத்தனை அழகான கோணங்கள், வித விதமான காட்சிகள் என காட்சிப்படுத்தியதில் தொழில்நுட்ப ரீதியிலும் படம் வலுவாகவே இருக்கிறது. பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கும் நாயகன், திராவிட அழகியாக ஈர்க்கும் நாயகி, உள்ளே சாதி வெறியை மறைத்து வைத்திருக்கும் மௌன மிருகமாக கஜராஜ் என நடிகர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

 

bosevenkat



மிகப்பெரும் போராட்டத்திற்குப் பிறகு நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இன்று இயக்குனராகவும் அதே போராட்டம் இருந்திருக்கும். அப்படி பெற்ற ஒரு வாய்ப்பை, முற்போக்குக் கருத்துகளை, பெரியாரின் சிந்தனையை, மக்கள் ரசிக்கும்படி சொல்லப் பயன்படுத்திய போஸ் வெங்கட்டுக்கு ஒரு சல்யூட். படத்தின் முடிவில் 'சாதி மனிதனை சாக்கடையாக்கும், மதம் மனிதனை மிருகமாக்கும்' என பெரியாரின் வார்த்தைகள் சொல்லி முடிக்கிறார். அந்த வார்த்தைகளுக்கான இரண்டு மணிநேர சுவாரசியமான, உயிர்ப்பான ஒரு கதை விளக்கமாக நடந்து நிறைவடைகிறது 'கன்னி மாடம்'.


 

 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.