Skip to main content

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 1

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

1948, பிப்ரவரி 24 கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள மாண்டியா மாவட்டத்தில் மெலுகோட் என்னும் ஊரில் ஜெயராமன் அய்யங்கார்-வேதவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ஜெ. இவருக்கு ஒரே ஒரு அண்ணன், பெயர் ஜெயக்குமார்.  
ஜெயலலிதாவின் தாத்தாவும் அப்பாவும் மைசூர் மகாராஜா அரண்மனையில் பொறுப்பில் இருந்தனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது தந்தை ஜெயராமன் இறந்துவிட மகன் ஜெயக்குமாரையும் மகள் ஜெயலலிதாவையும் அழைத்துக் கொண்டு, பெங்களூர் நகரில் குடியேறுகிறார் வேதவதி. 
அங்கேயும் வாழ்க்கை வண்டி ஓட சிரமப்பட்டதால் பிள்ளைகளுடன் சென்னையில் குடியேறுகிறார் வேதவதி. ஆரம்பக் கல்வியை பிஷப் காட்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியிலும், மெட்ரிகுலேஷன் படிப்பை சர்ச் பார்க்கான் வென்ட்டிலும் 1964-ல்  முடிக்கிறார் ஜெயலலிதா. 
குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும் வாழ்க்கைச் செலவுக்காகவும் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கிறார் வேதவதி. நடிகையானதும் "சந்தியா' என பெயர் மாறுகிறது. 
பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதக், மணிப்புரி ஆட்டங்களை மகள் ஜெயலலிதாவுக்கு கற்றுக் கொடுக்கிறார் சந்தியா. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த சந்தியா தனது மகளையும் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார். 

 

t

 

 

1961 முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் தயாரித்த ‘எபிஸ்டில்’(ஊடஒநபகஊ) என்னும் ஆங்கில சினிமாதான் திரைத்துறையில் விசிட்டிங் கார்டு. தாயாரைப் போலவே சின்னச்சின்ன வேடங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் ஜெயலலிதா. 
1964 பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலு "சின்னாட கொம்பே' தெலுங்குப் படத்தில் ஜெய லலிதாவை ஹீரோயினாக அறிமுகம் செய்கிறார்.  
1965 "வெண்ணிற ஆடை'’படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்கிறார் இயக்குனர் ஸ்ரீதர். 
1966 "மனுஷிலு மமதலு'’என்னும் தெலுங் குப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1965-ல் முதல் முறையாக  எம்.ஜி.ஆருடன் "ஆயிரத்தில் ஒருவன்'’படத்தில் ஹீரோயினாக நடித்தார். வரிசையாக எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களில் அவருடன் ஜோடியாக நடித்தார். ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். "அம்மு'’என செல்லமாக அழைப்பார். 

 


1980-ல் வெளியான "நதியைத் தேடி வந்த கடல்'தான் ஜெயலலிதா நடித்த கடைசித் திரைப் படம். 
அதன்பின் சில வருடங்கள் தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் வாழ்க்கை நடத்தினார். இந்த வாழ்க்கை குறித்து ஒரு வாரப் பத்திரிகையில் தொடர் எழுத ஆரம்பித்த ஜெயலலிதா, அதில்  எம்.ஜி.ஆருக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து எழுதப் போவதாக அறிவித்ததும் திடீரென தொடர் நிறுத்தப்பட்டது.  
1982 எம்.ஜி.ஆரின் அழைப்பின்பேரில் அ.தி.மு.க.வில் உறுப்பினரானார். அதே ஆண்டில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் "பெண்ணின் பெருமை'’எனும் தலைப்பில் பேசி எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றார். 
1983 அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது நடந்த திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார். அதன் பின் தமிழகம் முழுக்க கட்சியினர் ஜெயலலிதாவை அழைத்து பொதுக்கூட்டங்கள்போட ஆரம்பித்தனர். 
ஜெயலலிதா எழுதிய "நெஞ்சிலே ஒரு கனல்' என்ற தொடர்கதை லட்சக்கணக்கான பெண் வாசகர்களை ஈர்த்தது.
1984 எம்.ஜி.ஆரால் ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டார். அதே ஆண்டில் சத்துணவுத் திட்ட ஆலோசனைக்குழுத் தலைவர் என்ற அரசுப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதே ஆண்டு அக்டோபரில் எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இப்போது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனையில்தான் எம்.ஜி.ஆரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
சிகிச்சைபெறும் எம்.ஜி.ஆருக்கு உதவியாக அவரது மனைவி ஜானகி அம்மையார் இருந்தார். ஜெயலலிதா தானும் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்கா விற்குச் செல்ல முயற்சி செய்து, தன்னுடன் வருமாறு, அப்போது அவருக்கு மேடைப் பேச்சு எழுதிக் கொண்டிருந்த பத்திரிகையாளர் சோலையை வற்புறுத்த மறுத்துவிட்டார் சோலை. 
அதன்பின் ராஜீவ்காந்தியைச் சந்தித்து அவர் மூலம் அமெரிக்கா செல்லும் முயற்சியாக சோலையுடன் டெல்லி செல்கிறார் ஜெயலலிதா. அவருக்கும் முன்பாகவே ஆர்.எம்.வீரப்பனும் பண்ருட்டி ராமச்சந்திரனும் டெல்லியில் முகாமிட்டு, ஜெயலலிதாவின் அமெரிக்கப் பயணத்திற்கு தடை போடுகின்றனர். 

 

 

tt

 

1984 -அக்டோபர் 31 தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார் பிரதமர் இந்திராகாந்தி. முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் சிகிச்சை தொடர்கிறது. 
கட்சியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி உருவாகத் தொடங்கியது. எம்.ஜி.ஆரின் பேரன்பைப் பெற்ற திருநாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சர்களே மறைமுகமாக ஜெ.வின் வளர்ச்சிக்கு உதவ ஆரம்பித்தனர். 
அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில்  வென்று  பிரதமராகிறார் ராஜீவ்காந்தி. 
1985 -பிப்ரவரி 05ஆம் தேதி தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். 10-ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்.  
""எம்.ஜி.ஆரால் பேச முடியவில்லை, செயல்பட முடியவில்லை, அதனால் என்னை முதலமைச்சராக்குங்கள்'' என பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா.  பிரதமர் ராஜீவ்காந்தி சென்னைக்கு வந்து கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்க்க எம்.ஜி.ஆர். செல்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே அங்கு ஜெயலலிதா சென்றுவிட்டார்.
அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டிய எம்.ஜி.ஆர்., அம்மு (ஜெயலலிதா)வுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என வாய்மொழி உத்தரவிடுகிறார். 
1984 -டிசம்பர் 20ஆம் தேதி கட்சியிலிருந்து ஜெயலலிதாவை நிரந்தரமாக நீக்கிய அறிவிப்பை கட்சிப் பத்திரிகையான "அண்ணா'வில் வெளியிடுமாறு, அதன் ஆசிரியராக இருந்த சோலைக்கு உத்தரவிடுகிறார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அதனை வெளியிடாதபடி கேட்டுக் கொண்டனர்.. 
1987 -டிச.24 எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆரின் உடல்  வைக்கப்பட்டிருந்த அவரது தலைமாட்டில் ஜெ. இருந்தார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியும் ஒருபக்கம் நின்றுகொண்டிருந்தார். 
எம்.ஜி.ஆரின் உடலைச் சுமந்து பீரங்கி வண்டி இறுதி ஊர்வலம் கிளம்பியபோது, அந்த வண்டியில் ஏற முயற்சித்த தன்னை, எ.வ.வேலுவும் கே.பி.ராமலிங்கமும் கீழே தள்ளிவிட்டதாகவும் எம்ஜி.ஆருடன் உடன்கட்டை ஏற தான் நினைத்ததாகவும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஜெயலலிதா. 

 

அடுத்தப் பகுதி :

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 2

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.