Skip to main content

மெய்வழிச்சாலைக்கு ‘ஹெல்மெட்’ தேவையில்லை!- தலையைக் காக்கும் தலைப்பாகைகள்! 

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் காட்டும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டார்.

சிவகாசியிலும் அம்பேத்கர் சிலை அருகில் காவலர்கள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை ஹெல்மெட் அணியாத ஒருவர் ‘ஹாயாக’கடந்து கொண்டிருந்தார்.  தலையில் அவர் வெள்ளை டர்பன் அணிந்திருந்தார். அவரைப் பின்தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்தோம். 

“இந்திய சட்டத்தை மிகவும் மதிப்பவர்கள் நாங்கள். ஆனாலும், ஹெல்மெட் அணிய வேண்டியதில்லை. ஏனென்றால், ஹெல்மெட் அணிவதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2007-ல் தமிழ்நாடு அரசு விதிவிலக்கு ஆணை பிறப்பித்துவிட்டது. வாகன சோதனை நடத்தும்  காவல்துறையினர் ‘ஏன் ஹெல்மெட் அணியவில்லை?’என்று கேட்கும்போது, அந்த விதிவிலக்கு ஆணை நகலைக் காட்டுவதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்று தூய தமிழில் நம்மிடம் விளக்கினார்‘சாலை’பழனிசெல்வராஜ். 

meivazhi sabha helmet exempting tn government abstract


அது என்ன விதிவிலக்கு ஆணை?
 

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989-ல் வரைவு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மெய்வழி சபை அல்லது மெய்வழி சாலையைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்யும்போது தலைப்பாகை அணிந்துகொண்டு, பின் இருக்கையில் பெண் அல்லது குழந்தையுடன் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹெல்மெட் அணிவதிலிருந்து மெய்வழி சாலையைச் சேர்ந்தவர்கள்  விலக்கு பெற்றதன் பின்னணி இது – 
 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலுக்கு அருகிலுள்ள கிராமம்தான் மெய்வழிச்சாலை. இங்கிருப்பவர்கள், மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் என்ற  மத அடையாளத்துடனும், வித்தியாசமான பழக்க வழக்கங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மெய்வழி சபைகள் உள்ளன.  இந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்றும் பெண்கள் அனந்தகிகள் என்றும் புதிதாக இம்மதத்தைத் தழுவியவர்கள் நன்மனத்தவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். மத விதிமுறைப்படி, ஆண்கள் தலையில் முண்டாசு அணிகின்றனர். ஏற்கனவே தலைப்பாகை அணிந்திருப்பதால் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமில்லை என்று மெய்வழி சாலையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். அதனடிப்படையில்தான், அவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமில்லை என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  

meivazhi sabha helmet exempting tn government abstract


மெய்வழிச்சபையின் சபைக்கரசர் எனப்படும் மெய்வழி சாலை வர்க்கவான் என்பவர், 2015-ல் அனைத்து நிர்வாகிகளுக்கும், வேதம் ஓதும் பாடசாலை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையே அனுப்பியிருக்கிறார். அதில், இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் நம் குலமக்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விதிவிலக்கு ஆணையின் நகல் ஒன்றினை, தவறாமல் கைவசம் வைத்திருக்க வேண்டும். இது தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 

meivazhi sabha helmet exempting tn government abstract


மெய்வழிச்சாலை என்பது கடவுள் உண்டாக்கிய ஊர் என்றும், பூலோக கயிலாயம் என்றும், அறநெறி நீதி நகரம் என்றும், சாதி மதங்களை ஒன்று சேர்த்த சமரச வேதசாலை என்றும்,  பிறவிப் பெருங்கடல் கடந்து இறையடி சேர்க்கும் எல்லை என்றும், தேவ பூமியில் நடக்கும் பரிசுத்தப் பிரயாணம் என்றும் ஆருயிர்ப்பிறவியர் என்றும் தனித்தன்மையுடன் வாழ்ந்துவரும் அனந்தர்களும்,  அனந்தகிகளும், நன்மனத்தவரும் இந்த ஹெல்மெட் விதிவிலக்கு குறித்து அலட்டிக்கொள்வதில்லை. சாதாரணமாகவே கடந்து செல்கின்றனர். 



 

Next Story

புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 TDF Vasan in Puzhal Jail

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி நேற்று முன்தினம் (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கிச் சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வாகனம் அவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.

 

இதில், டி.டி.எஃப். வாசன் சாலையோரம் இருக்கும் புதரில் விழுந்து கிடந்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு எலும்பு முறிவுக்குக் கையில் கட்டுப் போடப்பட்டது.

 

அதே சமயம் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இதையடுத்து டி.டி.எஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது. கவனக் குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் டி.டி.எஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். டி.டி.எஃப். வாசனின் ஆபத்தான மற்றும் அதிவேகமான வாகன சாகசத்தினால், பல இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது புழல் சிறையில் டி.டி.எஃப் வாசன் அடைக்கப்பட்டுள்ளார்.   

 

 

Next Story

இப்போ விழுமோ எப்போ விழுமோ? - ஹெல்மெட்டுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

 'Now or when will it fall?'-Government employees working with helmets

 

அரசு அலுவலகக் கட்டடம் பாழடைந்து கிடக்கும் நிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றும் வினோத சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

 

தெலுங்கானாவில் ஜெகத்தியாலா மாவட்டம் பீர்பூர் நகரில் உள்ளது மண்டல பரிஷத் அலுவலகம். இந்த அலுவலகத்தின் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உள்ளனர். பலமுறை வேறு கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்றும்படி ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் அங்கே பணி செய்யத்தான் வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர். எப்பொழுது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே இந்த அலுவலகத்தின் சில இடங்கள் இரண்டு முறை இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.