ADVERTISEMENT

மே 1 -உரிமைக் குரலுக்கான நாள்..

03:43 PM May 01, 2018 | vasanthbalakrishnan

மாடர்ன் உலகத்தில் ஐடி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, கொத்தனார் வேலையாக இருந்தாலும் சரி காலையில் வேலைக்கு சென்றால் மாலை வேலை முடிந்து வீடு திரும்பி விடுவர், தனக்கு வேண்டிய விடுமுறைகளை எடுத்துக்கொள்ளலாம். அப்படி அதில் ஏதும் சிக்கல் ஏற்பட்டால் அதற்காக சட்ட ரீதியாகக் கூட போராடமுடியும் என்கிற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது இந்த மே தின உழைப்பாளர்கள் நாள்தான். மனிதன் என்பதை மறந்து மெஷினாக ஒரு காலத்தில், ஓயாது உழைத்து கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால், உழைப்பதற்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. கூலி கிடைத்தால் நிம்மதியான உறக்கம் இல்லை. நீ வேலை பார்த்துக்கொண்டே இரு, அந்த வேலையை பார்க்கும் போதே நீ மடிந்தால் உனக்கு உறக்கம் எல்லாம் முழுவதுமாக கிடைத்துவிடும் என்று அக்கால முதலாளி முதலைகள் நினைத்தார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் உலகமெங்கும் தொழிற் வளர்ச்சி ஏற்படுகிறது. நாட்டை வல்லரசாக்குகிறேன் என்ற பெயரில் தன் வேலையாட்களை வைத்து மிக அதிக வேலை வாங்கி அதில் லாபம் சம்பாதித்து, தன்னை பணக்காரனாக வெளியே காட்டிக்கொள்வதில் மும்முரமாக தொழிற்சாலை முதலாளிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உழைக்கின்ற மக்களோ வேலை பார்த்தால் தான் சாப்பாடு, வாழ்க்கை என்று வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் சுமார் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை இருந்தது. 24 மணி நேரம் என்று முதலாளிகள் சொல்லியிருந்தால் கூட, அதை செய்யும் நிலையில் தான் தொழிலாளர்கள் வர்க்கம் இருந்தது. அவர்களுக்கு என்று யாரும் யோசிக்கவில்லை, அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. அப்படி தொழிலாளர்கள் எதிர்த்தால் கூட அடக்குமுறை என்ற ஒன்றை வைத்து அடக்கினர். இவ்வாறு உழைப்பாளிகளின் வாழ்கை ஒரு கேள்விக்குறியாக இருந்தபோதுதான் வெடித்துக்கொண்டு வெளியே வந்தார்கள் உழைப்பாளர்கள்.

1840ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் பத்து மணிநேர வேலை என்கிற வெற்றியை போராடி பெற்றனர். அதற்கு பிறகு எட்டு மணிநேர வேலை தான் சரியானது என்கிற முடிவை எடுத்து அதற்காக ஆயத்தமாகினர். தொழிலாளர்களின் குரல்," எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர உறக்கம், எட்டு மணிநேர ஓய்வு", என்று போராட தொடங்கினர். அதனைத்தொடர்ந்து பல போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் எல்லாம் நடந்தது. 1884 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் நடந்த தொழிற்சங்க மாநாடு ஒன்றில் 1886 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதியை எட்டு மணிநேர வேலைக்காக கெடுவாக வைத்தனர். தொழிலாளர்கள் 1886 ஆம் ஆண்டு மே ஒன்றைத் தொட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 3 ஆம் தேதி அமெரிக்கா சிகாகோ நகரிலுள்ள உள்ள ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த 3000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளிகளை அடக்க, ஆளும் வர்க்கத்தின் பிடியில் இருந்த காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் ஆறு தொழிலாளிகள் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அடுத்த நாள், இந்த சம்பவத்தை எதிர்த்து 'ஹே மார்க்கெட்' சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பால், சார்ஜன்ட் ஒருவர் இறந்துபோக, காவலர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் தொழிலார்கள் கூட்டத்தின் தலைவர்கள் ஏழு பேரை கைது செய்து, தூக்கிலிட ஆணை பிறப்பித்தனர். அடுத்த வருடம் நவம்பர் மாதம் அந்த ஏழு பேர்களில் நான்கு பேரை தூக்கிலிட்டனர். 1889 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த இரண்டாம் மாநாடு சிகாகோ சம்பவத்தை கண்டித்தது. மேலும் 1890 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் பாரிஸ் மாநாடு எட்டு மணிநேர வேலை நேரம் என்பதற்கான நினைவாக மே ஒன்றாம் தேதியைசர்வதேச நாளாக அறிவித்தது . மாநாட்டில் எண்ணியது போன்றே, 1890 மே 1 ஆம் தேதி உலகமெங்கும் எட்டு மணிநேரம் வேலை நேரமாக மாற்ற கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடைபெற்றது.

காலப்போக்கில் இது உழைப்பாளி மக்களின் உரிமை குரலுக்கான நாளாக மாறியது. மேலும் பல நாடுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மே 1 ஆம் தேதியில் எட்டு மணிநேர வேலை என்கிற தீர்மானத்தை கொண்டுவந்தனர். தொழிலாளர்களின் உரிமை குரலை வெளிக்கொண்டுவந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள்தான் மே தினமாக உழைக்கும் அனைவராலும் மூலம் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT