Skip to main content

இன்று எல்லோரும் காதலையே பாடுகிறார்கள்! - கவிஞர் மதிபாலா நூல் வெளியீட்டு விழாவில் ஆதங்கக் குரல்

Published on 11/02/2020 | Edited on 11/02/2020
b


விஞர் இரா.மதிபாலாவின் ’அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்’என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா, திருவான்மியூர் பனுவல் அரங்கில் அமர்க்களமாய் அரங்கேறியது. நிகழ்ச்சியை கவிஞர் அனுராதா இனிமையாகத் தொகுத்து வழங்க,  தேநீர் பதிப்பகத்தின் சார்பில் எழுத்தாளர் கோகிலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

b


விழாவிற்கு ஆரூர் தமிழ்நாடன் தலைமை தாங்க, கவிதை நூலை கவிஞர் மானா.பாஸ்கரன் வெளியிட்டார். நூலின் சிறப்புப் படியை கவிஞர் வதிலை பிரபா பெற்றுக்கொண்டார். கவிஞர்  நூலை அறிமுகப்படுத்திப் பேசிய கவிஞர் சுசித்ரா மாரன் “மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் இருக்கும் அகம் சார்ந்த உணர்வுகள், மதிபாலாவின் எல்லாக் கவிதைகளிலும் அடிநாதமாக ஒலிக்கிறது. பெரும்பாலான கவிதைகளில் கவிஞரின் இளம் எண்ணங்கள் ததும்புகின்றன” என்று நூல் குறித்த  ஆர்வத்தை ஏற்படுத்தினார். 

 

b


தலைமை உரையாற்றிய ஆரூர் தமிழ்நாடன் ‘உடலை சிறந்த உணவுகள் மூலம்  நாம் வளர்த்துக் கொள்வது போல், நாம் நம் உள்ளத்தை சிறந்த நூல்கள் மூலம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆழமான மனதில் இருந்துதான் உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்,. அந்த வகையில் மனதின் ஆழத்தை ஆழப்படுத்தும் ஆழமான கவிதைகளை கவிஞர் மதிபாலா எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.  நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றிய மானா.பாஸ்கரன், ‘தேநீர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல், வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் சிறந்து விளங்குகிறது. கவிஞர் மதிபாலா அன்பானவர். அந்த அன்பே அவரது எல்லாக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. உவமைக்கவிஞர் சுரதாவைப் போல், கவிஞர் மதிபாலா, உருவக்கவிஞர் என்று பாராட்டும் வகையில், தன் கவிதைகளில் உருவகத் திருவிழாவையே நடத்தியிருக்கிறார்” என்று பாராட்டினார்.

 

b


நூலின் முதல படியைப் பெற்றுக்கொண்ட கவிஞர் வதிலை பிரபா “தலைமைச் செயலகத்தில் பணியாற்றியபடியே தமிழ்ப் பணி ஆற்றியவர் மதிபாலா. அவரது கவிதைகள் சிறப்பானவை. தமிழ் கவிதை உலகம் எப்படி வானம்பாடி இயக்கத்தை மறந்துவிட முடியாதோ, அதேபோல் இன்று தலைமைச் செயலகத் தமிழ்மன்றமும் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்து வருகிறது. மதிபாலாவின் மிகச்சிறந்த கவிதையாக அவரது புன்னகை அவர் முகத்தில் எப்போதும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது’ என்றார் உற்சாகமாக.

 

b


விழாவில் திடீர் விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன் ‘இன்று,  சிறந்த கவிதை நூல்கள் அதிகம் வெளிவருவதும், அவை சிறந்த வடிவமைப்பில்  நம் கைகளில்  தவழ்வதும், கவிதையுலகம் செழிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கவிதையும் பாடல்களும் மக்களின் வாழ்வைப் பேசவேண்டும். இதுவரை தமிழில் வெளியான திரைப்பாடல்களில், 90 சதப் பாடல்கள் காதலைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இன்று எல்லோரும் வெறும் காதலையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் ஏனைய பகுதிகளையும், மக்களின் உணர்வையும், தகிக்கும் பிரச்சினைகளையும் சொல்லும் பாடல்கள் இங்கே குறைவு. இந்த நிலை மாறவேண்டும்’ என்று சுட்டிக்காட்டியதோடு, நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று, தனது பெண்ணியக் கவிதைகள் சிலவற்றையும் எடுத்துவைத்து, அரங்கத்தைக் கலகலப்பாக்கினார்.

 

மேலும், கவிஞர்கள் மயிலாடுதுறை இளையபாரதி, வணவை துரிகா, துபாய் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சுகம் முருகேசன், இளம்பரிதி பார்த்தி, மு.எ.பிரபாகரன், போல்ஸ்விக், ப.தேவபிரான், கு.விநாயகமூர்த்தி, கவிதா சரவணன், வை. இளம்வழுதி, இரா.கவியரசு ஆகியோரும்  கவிதை நூலைப் பாராட்டி, கவிஞரை வாழ்த்தினர். நிறைவாக கவிஞர் மதிபாலா, உணர்ச்சி பொங்க ஏற்புரையாற்றினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

டி.ஆர். பாலுவிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி; கைதட்டி ரசித்த டி.ஆர்.பி.ராஜா

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
DR. Minister Udayanidhi made a request to Balu; D. R. P. Raja enjoyed the hand clapping

சென்னை, அண்ணா அறிவாலயத்தின், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர். பாலு அவர்கள் எழுதிய உரிமைக்குரல், தி மேன் அண்ட் மேசேஜ் (The Man and Message), மை வாய்ஸ் பார் தி வாய்ஸ்லெஸ் (My voice for the voiceless), பாதை மாறாப் பயணம் (பாகம்-3) ஆகிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.1.2024)வெளியிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாழ்த்திய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் பேசியது, அரங்கத்தில் இருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியில், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள்  மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தி இந்து நாளிதழ் குழுமத் தலைவர் என். ராம், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க. சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் மூலம்  59 கோடி ரூபாய் மாநாட்டிற்கு நிதி கொடுத்தார்கள். அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ரூ. 25 லட்சம் கொடுத்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பரவாயில்லை, இளைஞர் அணி மாநாட்டுக்குத்தான் நிதி கொடுக்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதே வேண்டுகோளை திமுக தலைவரிடம் இளைஞர் அணி மாநாட்டில் வைத்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அனுபவம் முக்கியம் தான். இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்காவது வாய்ப்பு கொடுங்கள்” என டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கைதட்டி புன்னகையுடன் ரசித்தது குறிப்பிடத்தக்கது.