Skip to main content

"எடப்பாடி பழனிசாமிக்கு எழுத படிக்க தெரிந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டார்.." - மனுஷ்யபுத்திரன் விமர்சனம்

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

dfg

 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக கொடுத்திருந்த நிலையில், நான்கைந்து வாக்குறுதிகளை மட்டுமே தற்போதுவரை நிறைவேற்றியுள்ளது" என குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எல்லா பிரச்சாரங்களிலும் கூறிவருகிறார். இதுதொடர்பாக திமுக செய்தித்தொடர்பாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரது அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தற்போது தொடங்கியுள்ளது. அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரச்சாரத்தில் பேசும் அவர், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், தற்போது நான்கைந்து வாக்குறுதிகளை மட்டுமே அது நிறைவேற்றியுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை அனைத்து பிரச்சாரங்களிலும் தொடர்ந்து கூறிவருகிறாரே? 

 

நியாயமான கேள்விகளை எழுப்பு வேண்டியது ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அதற்குப் பதில் சொல்ல ஆளும் கட்சியும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி எழுப்பும் கேள்வி முறையானதா என்று பார்க்க வேண்டும். பொய் கூறுவதே அவரின் தொடர் வேலையாக இருந்துவருகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி என்னை கொடநாடு வழக்கில் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்கான ஆதாரத்தைக் கேட்டபோது எதையும் கூற முடியாமல் அமைதியானார். ஒன்பது மாவட்டங்களில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிச்சயம் படுதோல்வி அடையப்போகிறது. 

 

எனவே, அவ்வாறு நடைபெற்றால் அது அவரின் தலைமைக்கு மிகப் பெரிய பிரச்சனையாக முடியும் என்பதால் இத்தகைய பொய்களைக் கட்டவிழ்த்துவிடுகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொடுக்க முடியாத ஒரு ஆட்சியை தளபதி கொடுத்துவருகிறார். அதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவர்களால் முடிந்த அளவுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பது அவருக்குத் தெரியவில்லை என்றால், அவர் வாக்குறுதிகளை எண்ணத் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது எழுதப் படிக்க தெரியாதவராக இருக்க வேண்டும். இவர்கள் ஆட்சியில் இருந்ததைப் போல் வாக்குறுதிகளை நாங்கள் காற்றில் பறக்கவிட மாட்டோம். 

 

நீங்கள் ஆதாரப்பூர்வமாக பேச வேண்டும். திமுக இந்த வாக்குறுதி எல்லாம் தந்துள்ளது, ஆனால் நிறைவேற்றவில்லை. நாங்கள் கடந்த ஆட்சியில் இந்த வாக்குறுதிகளை தேர்தலின்போது கொடுத்தோம், இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளோம் என பேசுங்கள். அதை விட்டுவிட்டு வாயில் வரும் பொய்களை எல்லாம் அவிழ்த்துவிடுவது என்பது எந்த விதத்தில் நியாயம். வாட்சப் வதந்தி பரப்புபவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது. தன்னுடைய இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி முழித்துக்கொண்டிருக்கிறார். தான் ஒரு பொய்யர் என்பதை எடப்பாடி பழனிசாமி தற்போது நிரூபித்துவருகிறார் என்பது மட்டுமே உண்மை. கொடுத்த வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், இன்னும் 5 ஆண்டுகாலம் ஆட்சி இருக்கிறது, அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றால், இல்லை எங்களுக்கு மிச்சம் இருக்கிற வாக்குறுதிகள்தான் முக்கியம் என்று கேட்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை  நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

 

நகைக்கடன் தள்ளுபடியில் நிறைய கண்டிஷன் போடுகிறார்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இப்படி கண்டிஷன் போடுவோம் என்று சொன்னார்களா?  ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு மாற்றி பேசுவது ஏன் என்று அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்படுவதைப் பற்றி?

 

இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று ஆட்சிக்கு வந்த பிறகுதானே தெரியவந்துள்ளது. ஒரே நபர் 50 பேருக்கு கடன் வாங்குவது, கவரிங் நகைகளை வைத்துக் கடன் பெறுவது, குடும்பத்தில் அனைவருக்கும் கடன் வாங்குவது என பல்வேறு முறைகேடுகள் அங்கு நடைபெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்து ஆய்வு செய்ததில்தானே அதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகள் முறையான விசாரணை செய்துவருகிறார்கள். அதே நேரத்தில் சரியான முறையில் நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தை ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாக இவர்களின் பேச்சுக்கள் இருக்கிறது. இவர்களும் அதில் கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள்தானே? அதனால் அவர்களின் போக்கு அரசை ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இதில் வியப்பேதுமில்லை. 

 

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வம் அறிக்கைக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை பற்றி? 

 

ஒரு ரவுடி நான்கு மாதங்களில் டெவலப் ஆகிவிட முடியுமா? திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கு மாதங்களில் இத்தனை ரவுடிகள் உருவாகிவிட்டார்களா? கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் யார், அவர்கள் ஆட்சியில் உருவானவர்கள்தானே இவர்கள் அனைவரும். அதிமுக ஆட்சியில் உருவான, உருவாக்கப்பட்ட ரவுடிகளை நாங்கள் கைது செய்துவருகிறோம். இதற்கு யாரும் காரணமில்லை. சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.