Skip to main content

"சளி பிடிச்சிருந்தால் போதும் கரோனாவென்று சொல்லி ஆஸ்பத்திரியில் போட்டுவிடுகிறார்கள்" - மன்சூர் அலிகான் பேச்சு!

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

g


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு, 
 

கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. விரைவில் கரோனா கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து வருகின்றது. மேலும் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளையும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்கள். இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

மத்திய அரசு இந்த லாக் டவுன் விஷயத்தில் பெரிய தவறு செய்துள்ளது. மிகப்பெரிய ஆற்றல் படைத்தவர்களை எல்லாம் வீட்டில் இரு என்று கூறியுள்ளது. நான் லாக் டவுன் வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் எப்போது அவர்கள் இதைக் கொண்டு வருகிறார்கள். ட்ரம்ப் இந்தியாவிற்கு 10 ஆயிரம் பேருடன் வந்தார். அவரை வைத்து லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, இரண்டு நாட்களுக்குக் கூட்டம் நடத்தினார்கள். பிறகு, இந்த ஈஷா யோகா மையம் நடத்திய கூட்டங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். அதை எல்லாம் இவர்கள் விட்டுவிட்டார்கள். அதையும் தாண்டி பிப்ரவரி மாதம் பல்வேறு கோயில் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் எனப் பல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை எல்லாம் தடுக்கவில்லை. அப்போதே நூற்றுக்கணக்கான நாடுகளில் கரோனா பரவி இருந்தது. கரோனா விவகாரத்தில் பிரதமர் மாபெரும் தவறு செய்துள்ளார். இந்தியாவின் தட்ப வெப்ப நிலையே வேறு. நீங்கள் இந்தியாவில் கரோனா பரவி விட்டதே என்று கேட்கிறீர்கள். இதில் பெரிய அளவில் அரசியல் செய்கிறார்கள். மோடி இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 
 

http://onelink.to/nknapp


தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை என்று தமிழக அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதற்கான வாப்பு என்பது கிடையாது. உலக சுகாதார நிறுவனம் பேச்சை நாம் கேட்கக்கூடாது. அவர்கள் முட்டாள் தனமாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்திய நாடு எவ்வளவு பெரிய வல்லரசு நாடாக வேண்டியது. பொருளாதாரத்தில் எங்கோ இருக்க வேண்டிய நாடு லாக் டவுனில் சிக்கித் தவிக்கின்றது. அவர்கள் மட்டும் அனுமதித்திருந்தால் 10 லட்சம் கோடிக்கு மேல் மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு தமிழர்கள் இருந்திருப்பார்கள். தமிழகத்தின் பொருளாதாரத்தை எங்கோ கொண்டு சென்றிருக்கலாம். சளி பிடிச்சிருந்தா கரோனானு சொல்லி ஆஸ்பத்திரியில் போட்டுவிடுகிறார்கள். பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து நீ குணமடைந்து விட்டாய் எனச் சொல்லி வெளியில் விட்டுவிடுகிறார்கள். இதற்கு லாக் டவுன் எதற்கு? எதையாவது பேசினால் அமெரிக்காவைப் பற்றி பேசுகிறீர்கள். அமெரிக்காவின் தட்ப வெப்ப நிலை என்பது வேறு, இந்தியாவின் தட்பவெப்ப நிலை என்பது வேறு. அதையும் இதையும்  ஒன்றாக்க வேண்டிய தேவையில்லை. உலக சுகாதார நிறுவனம் நம்மை தப்பா வழிநடத்துகிறார்கள் என்பதே என்னுடைய குற்றச்சாட்டு, என்றார்.

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“கட்டாயப்படுத்தி, ஜூஸ் குடுத்தாங்க” - மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை  கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.