Skip to main content

வாஜ்பாய்க்கு இருந்த சலுகை மன்மோகன் சிங்-க்கு இல்லையா... எஸ்பிஜி பாதுகாப்பில் அரசியல்..?

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

ஒவ்வொரு நாட்டின் அதிபர்கள், பிரதமர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படைகளை அனைத்து நாடுகளும் தன்னகத்தே வைத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் பிரதமர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு குழுவை (Special Protection Group) கடந்த 1988 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். அதற்கு மிக முக்கிய அரசியல் காரணமும் உண்டு. 1984 ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை பாதுகாப்பு அதிகாரிகளே சுட்டுக் கொன்றதால், பிரதமரின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானது. கமாண்டோ அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பில் அரசியல் நுழைக்கப்பட்டதால், இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு அடுத்த சில மாதங்கள் பிரதமர் ராஜூவின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றது.

 

c



இந்திய சுதந்திர வரலாற்றில் பிரதமரின் பாதுகாப்பை ராணுவம் ஏற்றது அப்போதுதான் முதல்முறை. சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு பிரதமர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை பாதுகாக்க எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட குழுக்களை அமைக்கலாம் என்ற விவாதம் எழுந்த நிலையில், பிரதமர் ராஜூவ் காந்தி அதற்கான குழு ஒன்றை அமைத்தார். அவர்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உற்றுநோக்கி, நாட்டின் சிறந்த அதிகாரிகளை அனைத்து காவல் துறை பிரிவிலும் இருந்தும் எடுத்து ஒரு பாதுகாப்பு குழுவை அமைக்க பரிந்துரை செய்தார்கள். அவர்களின் பரிந்துரையின் படி அமைக்கப்பட்டதுதான் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு. இந்த குழுவினர்தான் இன்றைய நாள் வரைக்கும் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாத்து வருகிறார்கள். 1991 ஆம் ஆண்டு ராஜூவ் காந்தி பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே கொல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் எஸ்பிஜி வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள். இந்த எஸ்பிஜி பிரிவில் 100க்கும் மேற்பட்ட  சிறப்பு அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு என்றே தனி நிதி வருடாவருடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
 

 

m



அதன்படி இன்றைய தேதியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய நால்வருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு இனி எஸ்பிஜி பாதுகாப்புக்கு பதில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். பிரதமர்கள் பதவியில் இருந்து ஒருவர் விலகிய பிறகு ஓராண்டுக்கு எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்தால் அது நீட்டிக்க படும் என்பதே எஸ்பிஜி பாதுகாப்பு சொல்லும் விதியாக உள்ளது.

 

 

j



அந்த வகையில் 5  ஆண்டுகளுக்கு மேலாக மன்மோகன் அந்த பாதுகாப்பில் இருந்ததாகவும், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதுவும் இல்லை என்பதால் எஸ்பிஜி விலக்கப்படுவதாக அதிகாரிகள்  காரணம் அதற்கு சொல்கிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் என்றால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சாகும் வரையில் எஸ்பிஜி பாதுகாப்பில் இருந்தாரே, அவருக்கு என்ன அச்சுறுத்தல் இருந்தது என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் காங்கிரசார். மேலும், 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசியிலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் சில ஆண்டுகளில் படுத்த படுக்கையாகி போன பிறகும் அவருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்ற போது, தற்போது ராஜ்ய சாபா எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் செல்ல இருக்கும் மன்மோகனுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கொதிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள்.
 

Next Story

“அனைத்து எம்.பி.க்களுக்கும் மன்மோகன் சிங் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்” - பிரதமர் மோடி புகழாரம்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
PM Modi praises Manmohan Singh is a role model for all MPs

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மக்களவையில் கடந்த 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றினர். இதனையடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அதில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இந்த நிலையில், மாநிலங்களைவில் இன்று (08-02-24) பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளித்து பேசினார். அதில் பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்கள், இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து. இப்போது, டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவு கூற விரும்புகிறேன். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறு முறை இந்த அவையை அலங்கரித்துள்ளார். அவரது பங்களிப்பு மகத்தானது. இவ்வளவு காலமாக, இந்த நாடாளுமன்ற கட்டடத்தையும், நாட்டையும் மன்மோகன் சிங் வழிநடத்திய விதம் மூலம் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். 

அனைத்து எம்.பி.க்களும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்கிறார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புகளின் போது, உடல் குன்றியிருந்த போது கூட தனது சக்கர நாற்காலியில் வந்து அவர் வாக்களித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு உறுப்பினர் தனது கடமைகளில் விழிப்புடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது. ஓய்வு பெற இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்” என்று கூறினார். 

Next Story

“சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக மன்மோகன் சிங் ஆட்சி செய்தார்” - அமித்ஷா

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Amit Shah says Manmohan Singh ruled to appease minorities

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் கொடுத்து வருகின்றன.

 

இந்த நிலையில்,மத்தியப் பிரதேசம், மாண்ட்லா நகரில் பா.ஜ.கவின் ஜன ஆசீர்வாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அதன் பின்பு அந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஊழல் நிறைந்த ஆட்சியில் பயங்கரவாதிகள் நிறைய அட்டூழியங்கள் செய்தார்கள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நம் நாட்டு ராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்தார்கள். புல்வாமா தாக்குதல் கூட நடத்தி பல ராணுவ வீரர்களை நம்மிடம் இருந்து பிரித்தார்கள். அப்போது அவர்கள், மன்மோகன் சிங் ஆட்சி நடக்கிறது என்பதை நினைத்துக் கொண்டு அப்படி ஒரு பயங்கரவாத சதியை ஏற்படுத்தினார்கள். 

 

புல்வாமா தாக்குதல்; “யாரிடமும் சொல்லக்கூடாது” என்ற பிரதமர்; வெளியான அதிர்ச்சி தகவல் 
 

 

ஆனால், புல்வாமா தாக்குதல் நடந்த உடனே பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய எல்லையையும், இந்திய வீரர்களையும் தொடக்கூடாது என எதிரிகளுக்கு செய்திகள் அனுப்பப்பட்டது. சிறுபான்மையினர்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையையே மன்மோகன் சிங் ஆட்சியில் பின்பற்றினார். பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தான் பொருளாதாரத்தில் இந்தியா உலகில் 11வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது.

 

காங்கிரஸ் ஆட்சியில், பழங்குடியின சமூகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆண்டுக்கு வெறும் ரூ. 24 ஆயிரம் கோடி தான் இருந்தது. காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் பழங்குடியினத்திலிருந்து எந்தவொரு நபரையும் ஜனாதிபதி ஆக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி நாட்டின் பிரதமர் ஆனதும் ஏழைகள் மற்றும் பழங்குடியின சமூகத்தின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். ஒவ்வொரு பிரிவினருக்கும் பாதுகாப்பை பா.ஜ.க வழங்கி வருகிறது. மத்தியப் பிரதேசத்தை ஊழல் மிகுந்த மாநிலமாக காங்கிரஸ் மாற்றி வைத்து இருக்கிறது. திக்விஜய் சிங், கமல்நாத் ஆட்சியில் இந்த நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது” என்று கூறினார்.