Skip to main content

மம்தா தர்ணாவும்...இந்தியாவின் மிகப் பெரிய நிதி நிறுவன மோசடியும்...பின்னணி இதுதான்

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
mamta


கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சாரதா நிதி மோசடி வழக்கிலும் ரோஸ் வேலி மோசடியிலும் விசாரிக்க சிபிஐ குழு சென்றதை தடுத்து, பின்னர் தர்ணாவில் இறங்கினார் மம்தா பானர்ஜி. எதிர்க்கட்சிகள் பல மம்தாவின் தர்ணாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். பாஜக, ஊழலை மறைக்க திரிணாமுல் காங்கிரஸ் இதுபோன்ற நாடகத்தை நடத்துகிறது அதற்கு மற்ற எதிர் கட்சிகளும் துணை போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியோ, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இதில் நாடகமாடுகிறார்கள். மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸை தூக்குவதே எங்களின் லட்சியம், இந்த மோசடி குறித்து ஞாயிற்றுக்கிழமை கம்யூனிஸ்ட் நடத்திய மாபெரும் பேரணியை மறைக்கதான் இதுபோல நாடகமாடுகிறார் மம்தா என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.  மம்தாவோ நான் என்னுடைய உயிரை தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். ஆனால், சமரசமாக செல்ல மாட்டேன். முதலில் இந்த குற்றச்சாட்டில் பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை சீண்டினார்கள் நான் அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், இப்போது கொல்கத்தாவின் தலைமை காவல் ஆணையரையே சீண்டுகிறார்கள். அவர் ஒரு அரசாங்க அமைப்பின் தலைவர். இனி இதை பொருத்துக்கொள்ள மாட்டேன் என்று நேற்று தர்ணாவில் போராட்டம் குறித்து பேசினார் மம்தா.
 

என்னதான் இதற்குள் பல அரசியல்கள் இருந்தாலும், சாரதா நிதி மோசடி பற்றியும் ரோஸ் வேலி நிதி மோசடி பற்றியும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய மோசடிகளில் இவை இரண்டுமே வரும். பல ஆயிரம் கோடிகளை சுறுட்டிக்கொண்டு, இந்த நிதி நிறுவனத்தில் பணம் போட்டவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிட்டு சென்றன.
 

சாரதா நிதி மோசடி இந்தியாவின் மிகப்பெரிய மோசடியில் ஒன்று, 17 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டிருந்த சாரதா நிதி குழுமம் சுமார் 1500 கோடியை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் சில ஆவணங்களில் 4000 கோடி வரை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2013ல் இந்த நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது.
 

இந்த சிட் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்த சுதிப்தா சென்னும் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் நட்புறவில் இருந்தனர். இந்த நட்புறவினால் நிறுவனத்திற்கு நிறைய வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் சேர்ந்தனர். திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி குணால் கோஷ் சாரதா நிறுவனத்தின் ஊடக துறையை தலைமை தாங்கினார். சாரதா நிறுவனத்தின் புரோமோஷனுக்கு அப்போது திரிணாமுல் காங்கிரஸில் இருந்த ஷதாப்தி ராய் உதவினார் என்று பல குற்றச்சாட்டுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகாரர்கள் மீது வைக்கப்படுகிறது. மம்தாவே இரண்டு சாரதா நிறுவன அலுவலகங்களை திறந்து வைத்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
 

இந்த குழுமம் பல விதங்களில் அரசாங்கத்தின் உதவியுடன் தங்களது நிறுவனத்தை மக்களிடம் விளம்பரப்படுத்தியிருக்கிறது. கால்பந்து சங்கங்களில் தொடங்கி மேற்கு வங்கத்தில் கோலாகலமாக நடக்கும் துர்கா பூஜைகள் வரை இவர்கள் விளம்பரங்கள் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சாரதா குழுமத்திடம் லஞ்சம் பெற்றிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளும் இவர்களால் பயனடைந்திருக்கிறார்கள். சாரதா நிதி மோசடியால் மேற்குவங்கம், ஒடிஷா, அஸ்ஸாம், ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 

சர்வதேச அளவில் பணம் சுறுட்டப்பட்டதை அடுத்தும், பல அரசியல் நெருக்கடிகளை அடுத்தும் இந்த வழக்கு சிபிஐக்கு உச்சநீதிமன்றத்தால் மாற்றப்பட்டது. சாரதா நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் நிதி நிறுவனம் திவாலானவுடன் மாயமானார். ஏப்ரல்13 2013ல் இருந்து அவரை யாராலும் தொடர்புக்கொள்ள முடியவில்லை, நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் பவுன்ஸாகின. பல நாட்கள் கழித்து சென்னுடைய வலது கை என்று சொல்லப்பட்ட பெண், ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையை கடக்கும்போது மாட்டிக்கொண்டார்.
 

சாரதா நிதி மோசடியை விட பெரிய மோசடி என்றால் ரோஸ் வேலி நிதி மோசடிதான். அமலாக்கத்துறை சார்பில் சுமார் 15,000 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. மேற்குவங்கம், பிஹார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பல வாடிக்கையளார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால் இவர்களின் நிதி நிறுவனம் எந்தவித கெடுபிடியும் இல்லாமல் நடந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய பணம் நமக்கு திரும்பி வரும் என்று மனக்கோட்டையை கட்டிக்கொண்டு பணம் செலுத்தியவர்களை ஏமாற்றியது ரோஸ் வேலி.
 

சாரதா நிறுவனம் மோசடியை அடுத்து, மக்கள் அனைவரும் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதனையடுத்து ரோஸ்வேலி நிறுவனம் செய்தித்தாள்களில் ‘மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்’ என்று விளம்பரப்படுத்தியது. சாரதா நிறுவனம் ஊடக துறையில் எவ்வளவு வலுவாக இருந்ததோ அதைபோலவே ரோஸ்வேலி நிறுவனமும் நான்கு டிவி சேனல்களை வைத்திருந்தது.
 

saradha group


ரோஸ்வேலி நிறுவனத்தில் பணம் செலுத்துவோருக்கு திரும்பி தரப்படும் பணம் கண்டிப்பாக 8-28 சதவீதம் வரை அதிகமாக கிடைக்கும் என்று ஸ்கீம்கள் வைத்திருந்ததாக  அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. தங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை பணம் செலுத்த வைத்ததும் மட்டுமன்றி மேலும் அந்த நிறுவனத்தின் கீழுள்ள சிறிய நிதி நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களை பணம் செலுத்த வைத்துள்ளது. இது போல சட்டத்தை மீறி பல மோசடிகளை செய்ததால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு வழக்கு தொடங்குவதற்கு முன்பே செபி இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
 

அமலாக்கத்துறை இந்த நிறுவனத்தின் மீது எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தது. 2014ஆம் ஆண்டில் ரோஸ் வேலி தலைவர் மேலும் மற்ற நிர்வாகிகள் மேலும் பிஎம்எல்ஏ கீழ் வழக்கு தொடரப்பட்டது. கௌதம் குன்டு கடந்த 2015ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை இவர் மீது கொல்கத்தாவிலும் புவனேஷ்வரிலும் பல வழக்குகள் பதிவு செய்துள்ளது.
 

கிழக்கு இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்த ஷ்ரிகாந்த் மோஹ்தா   ரோஸ்வேலி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ரோஸ் வேலி குழுமத்தின் பணத்தை வைத்து பல படங்களை இவர் தயாரித்திருக்கிறார். கௌதம் குன்டு பெற்ற பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு இவர் அரசியல்வாதிகளை வைத்து மிரட்டியிருக்கிறார்.
 

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு முன்பே சாரதா சிட் ஃபண்ட் மற்றும் ரோஸ் வேலி ஆகிய நிதி  மோசடிகளில் ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு உள்ளான ஆவணக் கோப்புகளை ராஜீவ் குமார் அழித்து வருகிறார் என்று சிபிஐ சொல்கிறது. இதனை அடுத்துதான் மம்தா பானர்ஜி விசாரிக்க வந்த சிபிஐயை தடுத்து, தர்ணாவில் இறங்கினார்.


இந்த நிறுவனம் முதலீடாக பெற்ற பணத்தை காலக்கெடு முடிந்ததால் ஏராளமானோர் திருப்பி தருமாறு கேட்டனர். அப்போதுதான் இந்த நிறுவனம் தடுமாற தொடங்கியது. ஒரு கட்டத்தில் பணம் இப்போது இல்லை என்று கூற தொடங்கியது. இதனால் பொது மக்களும் பணியாற்றிய ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து இந்த நிறுவனம் மூடப்பட்டது. முதலீடு செய்த பணம் பறிப்போய்விட்டதே என்ற ஏக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி சிபிஐ விசாரணைக்கு பயந்து பல அதிகாரிகளும் தற்கொலை செய்தனர். சாரதா நிதி நிறுவனத்தால் அரசின் கணக்குபடி 210 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மிக குறைவு என்றும் கூறுகின்றனர்.

 

 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.