Skip to main content

கமலுக்காக சினேகன் எழுதிய 'இது நம்மவர் படை' பாடல்கள்...

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடுநிலை என்ற கொள்கையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். அந்தக் கட்சி தனது 125 நாளில் வெளியிட்ட பாடல் தொகுப்புதான் ‘இது நம்மவர் படை’.

 

makkal needhi maiam



 

 


மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ‘இது நம்மவர் படை’ என்ற பெயரில் நேற்று கட்சிப் பாடல்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் ஆறு பாடல்கள் வெளியிடப்பட்டன. இதற்கு இசை தாஜ் நூர், பாடல்வரிகள் சினேகன். படை படை படை இது நம்மவர் படை, தமிழ்நாட்டு தலையெழுத்து, மய்யம் மக்கள் நீதி மய்யம், ஆளவந்தான் ஆளவாரான், எனக்குள் ஒருவன், நாட்டு நடப்பு சரியில்லடா இப்படியாக தொடங்குகிறது பாடல்கள். இந்த ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் கமலை மையப்படுத்தியே உள்ளது.  ட்ரெண்ட் மியூசிக்கில் பாடல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 


தான் பேசும் அனைத்து கூட்டங்களிலும் ஊழல், தேசியம், வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது போன்றவற்றை மறக்காமல் பேசுவார். அதுபோலவே இந்த பாடல்களிலும் ஊழல், தேசியம், பகுத்தறிவு, அகிம்சை, மக்களாட்சி, சமய வேறுபாடுகளை கலையவேண்டும், அரசியல்வாதிகளின் செயல்முறை போன்றவற்றை பற்றி பேசியிருக்கிறது. மேலும் காந்தி, சுபாஸ் சந்திர போஸ், விவேகானந்தர், பாரதியார், எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களையும் இப்பாடல்கள் பேசியிருக்கின்றன. தான் நடித்த படங்களின் தலைப்புகளை வைத்து பல வரிகள் வருகின்றன.

 

 

 


பாழடைந்த பகுத்தறிவை பழுதுநீக்கும் மய்யம் என வரிகள் அமைந்திருப்பது சிறப்பானது என்றாலும், அந்தப் பகுத்தறிவின் அடையாளமாக இன்றும் திகழும் பெரியாரை பாடல்களில் எங்கும் குறிப்பிடாதது ஏன் என்பது மக்கள் நீதி மய்யத்திற்குதான் தெரியும். கட்சி தொடங்கி 100 நாட்கள் முடிவடைவதற்குள் கட்சியின் கொள்கைகள் புத்தகமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டும் வெளிவரவில்லை என்பதும், இன்னும் அதிகாரப்பூர்வ கட்சியாக அறிவிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.