Skip to main content

குறைந்த விலையில் கொலு பொம்மை, ஆடைகள், சாப்பாடு... அசத்தும் மகளிர் சுய உதவிக் குழு (படங்கள்)

Published on 30/09/2019 | Edited on 30/09/2019
magalir suya uthavi kulu - Valluvar Kottam




ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கிடைக்கக்கூடிய அரிய பொருட்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மண் பானை, டம்ளர், ஜக் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள், இயற்கை தானியங்கள், அழகு பொருட்கள், பொம்மைகள், மரச்செக்கு எண்ணெய், நாட்டு சக்கரை, தேன், செக்கு எண்ணெய், அச்சு முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், ஓவியங்கள், பெண்களுக்கான ஆபரணங்கள், அணிகலன்கள், அழகு சாதனப்பொருட்கள், நவராத்தி விழாவில் வைக்க வேண்டிய கொலு பொம்மைகள், கையால் நெய்யப்பட்ட பைகள், கைப்பைகள், பாய்கள், தலையணை, போர்வை, பருத்தி ஆடைகள், புடவை, சுடிதார், துண்டு, போர்வை என ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கிடைக்கக்கூடிய பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 


 

 

magalir suya uthavi kulu - Valluvar Kottam



சமையலுக்கு பயன்படுத்தும் மண் சட்டி உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் அகமகிழ் என்பவர் நம்மிடம் பேசியபோது, கடந்த இரண்டு வருடங்களாக இந்த கண்காட்சியில் விற்பனை செய்து வருகிறோம். மண்ணால் ஆன குழம்பு வைக்கும் சட்டி, தண்ணீர் ஜக், டம்ளர், காபி குடிக்கும் கப், குழந்தைகளுக்கான விசில், குழந்தைகள் விளையாடுவதற்காக மண்ணால் ஆன அடுப்பு உள்ளிட்டவை செட்டாக விற்பனைக்கு உள்ளது. எங்களிடம் மற்ற இடங்களை விட குறைவான விலையில் கிடைக்கும். எந்தவித ரசாயனமும் இல்லாமல் இதனை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இந்த மண் சட்டிகளை கேஸ் அடுப்பில் வைத்தும் சமைக்கலாம் விரிசல் விழாது என்றார். 

 

magalir suya uthavi kulu - Valluvar Kottam


சென்னையைச் சேர்ந்த கமலா என்பவர் நம்மிடம், 65 வகையான பொருட்களைக்கொண்டு கைகளாலேயே பல்வேறு ஓவியங்களை செய்வேன். விநாயகர், மயில், சங்கு மற்றும் பாரதியார், எம்.ஜி.ஆர். கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களையும் ஓவியங்களாக வரைந்து விற்பனைக்கு வைத்திருக்கிறேன். நீங்கள் எந்த மாதிரி வேண்டும் என்று என்னிடம் போட்டோ கொடுத்தால் அதைப்போலவே ஓவியம் வரைந்து கொடுப்பேன் என்றார். 

 

magalir suya uthavi kulu - Valluvar Kottam

கண்காட்சியை சுற்றி வரும்போது அங்கு உணவகமும் உள்ளது. உணவகத்தின் உள்ளே நுழைத்து அங்கே உள்ளவர்களிடம் நீங்க எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்றதும், சிவகங்கையில் இருந்து வந்துள்ளோம் என்றார் இந்திரா. 

 

magalir suya uthavi kulu



அவர் நம்மிடம், காளி பிளவர் பக்கோடா, வாழைப் பூ வடை, போண்டா, கொள்ளு வடை, ராகி அடை, சோள அடை உள்பட சிறுதானிய உணவு வகைகளை செய்வோம். மேலும் வரகு, திணை பாயாசம், பருத்தி பால் உள்ளிட்டவையும் கிடைக்கும். சாம்பார், ரசம், காரக்குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம் ரூபாய் 50க்கு அன்லிமிடெட் சாப்பாடு மதியத்திற்கு தயாராகும். புளி சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் ரூபாய் 40க்கும், தயிர் சாதம் ரூபாய் 30க்கும் கிடைக்கும். காலையில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, வடை, இடியாப்பம் கிடைக்கும். மாலையில் ஸ்னாக்ஸ், டீ, காபியும் கிடைக்கும் என்றார். 


 

 

magalir suya uthavi kulu



வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த கண்காட்சி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. 



 

 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.