Skip to main content

சூழ்ச்சியால் இறந்த ஜல்லிக்கட்டு வீரன்.. ஐந்து தலைமுறைகளுக்கு முன் நடந்த திமிலாட்டம்!

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Madurai district vikkiramangkal mela soukkaanpatti jallikattu

 

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள விக்கிரமங்கலம், மேலசௌரிக்கான்பட்டியில் ஒரு மாடுபிடி வீரருக்கு கோயில் கட்டி அப்பகுதி மக்கள் இன்று வரை வணங்கி வருகிறார்கள். இந்த விவரம் அறிந்து நாம் நேரடியாகக் களத்திற்குச் சென்று அந்தக் கோயில் எதற்காகக் கட்டப்பட்டது? அந்த மாடுபிடி வீரனின் வீரம் எத்தகையது? என்று விசாரித்தோம். அந்தக் கோயில் பூசாரி நமக்கு அந்தக் கதையை விளக்கினார்.

 

“இது ஐந்து தலைமுறைக்கு முன்பு நடந்த கதை. கருத்தமாயித்தேவரின் மகன் அழகத்தேவர். இந்த அழகத்தேவர்தான் முதல் ஜல்லிக்கட்டு வீரன். கருத்தமாயித்தேவர்தான் இந்த ஊர உருவாக்கினாரு. கருத்தமாயிக்கு நாலு ஆம்பள புள்ளைங்க. இதுல கடைசி ஆள்தான் அழகத்தேவன். மத்த மூணு பேரும் விவசாயம் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அழகத்தேவர் மாடு பிடிக்கிறதுல கில்லாடி. இன்னிக்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்னுலாம் சொல்றாங்க. ஆனா, அஞ்சு தலைமுறைக்கு முன்ன தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டுக்கு பேர் போனது விக்கிரமங்கலம்.

 

Madurai district vikkiramangkal mela soukkaanpatti jallikattu

 

அழகத்தேவன் எல்லா மாட்டையும் புடிக்க மாட்டாரு. பறசாட்றது; சாட்டிவிட்றது; காளைய அடக்குனா பரிசுத் தறேன்; புள்ளையக் கட்டித்தறேன்; சொத்து பங்கு போட்டுத்தறேனு சாட்டிவிட்றத மட்டும் புடிப்பாரு. இவருக்கு சமயன்னு ஒரு நண்பன். அவரு மாட்ட அடக்குனா இவரு வால புடிச்சு தப்படிப்பாரு.

 

எங்க விக்கிரமங்கலம் பக்கத்துல கீழக்குடி கிராமத்துல எங்களுக்கு நிகரா இருந்தவங்க, “அழகத்தேவன் இருந்தா நாம ஜெயிக்க முடியாது. அழகத்தேவன கொல்லணும்”னு கன்னுல இருந்தே ஒரு மாட்ட பழக்கியிருக்காங்க. ஜல்லிக்கட்டு மாடு வலதுபக்கம்தான் முட்டும். எந்த ஜல்லிக்கட்டு மாடும் இடதுபக்கம் முட்டாது. ஆனா, அந்த மாட்ட ரெண்டு பக்கமும் முட்ற மாரி தயார் பண்ணாங்க. அந்த மாடு பருவத்துக்கு வர நேரத்துல கீழக்குடியில பறசாட்டி ஜல்லிக்கட்டு நடத்தினாங்க. அழகத்தேவனும், சமயனும் போய் மாட்ட அடக்கிட்டாங்க. ஆனா, மாடு குத்தி அழகனுக்கு குடல் வெளிய தள்ளிடுச்சு. உடனே சமயன் துண்ட எடுத்து குடல உள்ள தள்ளிக் கட்டிட்டான். 

 

Madurai district vikkiramangkal mela soukkaanpatti jallikattu

 

அப்புறம், அழகன தூக்கிக்கிட்டு சமயன் மேலக்குடிக்கு வந்துட்டு இருக்கும்போது அழகன் குடிக்க தண்ணி கேட்டிருக்காரு. சமயன் அவர கீழ இறக்கிட்டு பக்கத்துல இருந்த குளத்துல துண்ட நனைச்சுக் கொண்டு வந்து வாயில தண்ணி விட்டிருக்காரு. அவன இறக்கி வச்ச இடத்துல இன்னிக்கும் யார் போனாலும் ஒரு கல்ல எடுத்துப் போட்டுட்டுப் போறது வழக்கம். அப்புறம் ஊருக்கு வந்து பொழச்சிக்கிட்டான்.

 

இத தெரிஞ்சுக்கிட்ட அவங்க, “இவன் பொழச்சிக்கிட்டான். நாம சொன்ன மாரி அவனுக்கு பங்கு கட்டி விடணும்”னு பழைய ஆறாத புண்ணு, தீராத நோய் எல்லாம் சரி பண்ற மாரி ஒரு வைத்தியன செட் பண்ணி இங்க அனுப்புனாங்க. அந்த வைத்தியன் இங்க வந்தபோது கருத்தமாயி உழுதுக்கிட்டு இருந்திருக்காரு. அப்ப இந்த வைத்தியன பாத்துட்டு, “என் மகனுக்கு மாடு குத்தி ஒரு சின்ன காயம் இருக்கு”னு சொல்ல, அவரு பாத்துட்டு, “இப்ப ஒரு  கட்டு கட்றேன். அடுத்த வாரம் வந்து ஒரு கட்டு கட்றேன். ரெண்டு கட்டுல புண்ணு ஆறிடும்”னு சொல்ல, இவங்க நம்பி கட்ட கட்டிட்டாங்க. ஆனா, அந்த கட்டுல கள்ளி கொழுந்த வச்சு கட்டிட்டாங்க. அதுல தான் அவர் இறந்தாரு.

 

அழகன் மாடு குத்தி ஜல்லிக்கட்டுல இறக்கல. ரொம்ப நாள் கழிச்சு இந்த வைத்திய சூழ்ச்சில இங்கத்தான் இறந்தாரு. எங்க வம்சத்த சேர்ந்தவங்க இதுவரைக்கும் அந்த ஊர்ல தண்ணிக்கூட குடிச்சதில்ல. சம்மந்தமும் பண்ணதில்ல. அது பண்ணினாலும் விளங்காது. அந்தக் குடும்பமும் நல்லாவும் இல்ல; வம்சமும் கெட்டுப்போச்சு.

 

அழகத்தேவர் சாவப்போறோம்னு தெரிஞ்சு, “நான் செத்தா சிலை அடிச்சு வைங்கப்பா”னு சொல்லிட்டு செத்தாரு. அந்த ஞாபகமா தான் நாங்க சிலை அடிச்சு சிவராத்திரி அன்னிக்கு திருவிழா கொண்டாடுவோம். சிவராத்திரிக்கு மூணு நாளு கெடா வெட்டி அன்னதானம் போட்டு விழா எடுப்போம். சுத்தி முப்பது மைல் தூரத்துல எங்க ஜல்லிக்கட்டு நடந்தாலும் மாடும் மாடுபிடி வீரர்களும் இங்க வந்து வணங்கிட்டு போவாங்க. அப்படிப் போனவங்க இதுவர தோத்ததே இல்ல” என்றார். 

 

 

 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.