Skip to main content

உருளுசேவா விழாவுக்கு எடியூரப்பா வழங்கும் அனுமதி...

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

கர்நாடகாவில் தட்சண கர்நாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் குக்கு என்கிற பகுதியில் சுப்ரமணியசுவாமி என்கிற கோயில் உள்ளது. இந்த கோயிலில் 500 ஆண்டுகளாக உருளுசேவா ஜாத்ரா என்ற பெயரில் ஒரு விழா நடக்கும். கன்னடத்தில் மட்டி ஸ்நானா. இந்த விழாவில் உணவு பறிமாறப்படும். அதனை பார்ப்பனர்கள் அமர்ந்து உண்பார்கள். அவர்கள் உணவு சாப்பிட்டு எழுந்தபின் அந்த எச்சில் இலைகள் மீது பார்ப்பனர் அல்லாதவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என்கிற பாகுபாடுயில்லாமல் மேலாடையில்லாமல் படுத்து உருளுவார்கள். ( 50 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தினர் மட்டும் அப்படி படுத்து உருண்டுள்ளார்கள், பின்னர் அனைவரும் உருளலாம் எனச்சொல்லி மாற்றியுள்ளார்கள். ) உருண்டபின், அந்த இலைகளை எடுத்து தங்களது தலைமேல் வைத்து எடுத்து சென்று ஆற்றில் விட்டுவிட்டு குளித்துவிட்டு வரவேண்டும்.
 

Made Snana permission


இப்படி செய்வதன் மூலமாக, தங்களது உடலில் உள்ள நோய்கள் தீரும், தீய சக்திகள் விலகும் என்பது கோயில் வரலாற்றில் எழுதப்பட்டுள்ள வரலாறு எனச்சொல்லப்படுகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் அந்த உருளுசேவா விழாவில் கூடி பார்ப்பனர்கள் சாப்பிட்ட இலை மீது படுத்து உருளுவார்கள்.

இந்த கோயிலில் மட்டும்மல்ல, இதுப்போல் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 3 கோயில்களில் இந்த விழா நடத்தப்படுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி உருளுசேவாவில் கலந்துக்கொள்கின்றனர். இது பகுத்தறிவுக்கு விரோதமானது, அறிவியலுக்கு எதிரானது. உணவு உண்ட இலை மீது படுத்து புரண்டால் நோய்கள் குணமாகிவிடாது, நோய்கள் தான் வரும் என முற்போக்குவாதிகள் பல வருடங்களாக கண்டனம் தெரிவித்துவந்தனர்.
 

Made Snana permission


2014ல் கர்நாடகா முதல்வராக இருந்த காங்கிரஸ் சித்தராமையா, அந்த விழாவை தடை செய்து அறிவித்தார். இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் சார்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.

கர்நாடகா அரசு செய்தது சரிதான் எனச்சொல்லி கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தடைக்கு தடை விதித்தது. 500 ஆண்டு பழக்கம் அதனை தடை செய்யக்கூடாது பார்ப்பனர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் சொன்னபோது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், தீண்டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? எனக்கேட்டு அந்த விழாவுக்கு தடை விதித்தது.

சில ஆண்டுகளாக நீடித்துவந்த அந்த தடையை தற்போது கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாஜகவின் எடியூரப்பா அரசாங்கம் நீக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மீண்டும் உருளுசேவாவை நடத்த அரசாங்கம்மே திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
New information about the Bengaluru incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல  வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.