Skip to main content

பணபலத்தால் வெற்றியைத் தடுக்க முடியாது! தீர்ப்பை மக்கள் எழுதிவிட்டார்கள்! - மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!

Published on 31/03/2021 | Edited on 01/04/2021
ddd

 

"ஸ்டாலின்தான் வாராரு... விடியல்தரப் போறாரு...' என்ற பாடலுடன் முதல்வர் வேட்பாளராக தமிழகம் முழுவதும் பயணித்து பரப்புரை செய்துவருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். சவாலான இந்த தேர்தல் களத்தில் அவரிடம் நக்கீரன் முன்வைத்த கேள்விகள்...

 

உங்கள் பரப்புரையில் மக்கள் கூட்டமும் எழுச்சியான ஆரவாரமும் புதிதல்ல. ஆனால் 2016-ல் தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய தேர்தல் களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அ.தி.மு.க.வை நிராகரிக்க -முதலமைச்சர் பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப "நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா' என்பதுபோல் மக்கள் போகுமிட மெல்லாம் ஆர்ப்பரித்து அலை அலையாக வருகிறார்கள். பத்தாண்டுகள் தமிழகத்தைப் பாழ்படுத்தி -கடைசி நான்கு ஆண்டுகள் ஊழலில் மூழ்கி -பொய் ஒன்றையே மூலதனமாக வைத்துப் பிரச்சாரம் செய்துவந்த அ.தி.மு.க.வின் அமைச்சர்களுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் காட்சிகள் தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்கு வேட்டுவைத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. தமிழக மக்களின் உரிமைகளை மத்திய பா.ஜ.க.விடம் அடமானம் வைத்தது அ.தி.மு.க. ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எங்கும் எதிலும் ஊழல். எல்லாவற்றிலும் கமிஷன் என்பது மட்டுமே இந்த நான்கு வருடத்தில் பழனிச்சாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் செய்த காரியம். கொள்ளையடித்ததில் கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள், அ.தி.மு.க.விற்கு விடை கொடுக்கும் தீர்ப்பை எழுதிவிட்டார்கள். அதை தங்கள் வாக்குரிமை மூலம் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் ஆளுங்கட்சி மீது அதிருப்தி இல்லை -எதிர்ப்பலை வீசவில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கும் கருத்தை தி.மு.க. எப்படி எதிர்கொள்கிறது?

 

அது பொய்ப் பிரச்சாரம். "அதிருப்தி' எதிர்ப்பு அலையாக இல்லை, சுனாமியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.-பா.ஜ.க. ஆகிய இரு கட்சி ஆட்சிகளுமே தமிழக மக்களை வஞ்சிக்கின்றன. அ.தி.மு.க.வின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் பா.ஜ.க. அரசு உள்நோக்கத்துடன் அமைதி காக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடத்திய ரெய்டு, அமைச்சர்கள் வீடுகளில் நடத்திய ரெய்டு உள்ளிட்ட பல்வேறு சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை நடவடிக்கைகளை மூட்டைகட்டி மூலையில் வைத்து -தங்களின் மதவெறி அஜெண்டாவை செயல்படுத்த, அண்ணாவின் பெயரில் உள்ள அ.தி.மு.க.வைப் பயன் படுத்துகிறது பா.ஜ.க. இப்போது ஏறக்குறைய அ.தி.மு.க.வும்- பா.ஜ.க.வும் ஒரே கட்சி -ஒரே மாதிரி ஆடைகளை உடுத்தியிருக்கும் கட்சிகள் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆகவே பாராளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் -அதாவது "234 அவுட் ஆப் 234' என்று தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றிபெறும்.

 

மத்திய ஆளுங்கட்சி -மாநில ஆளுங்கட்சி இரண்டும் சேர்ந்த கூட்டணி என்பது அதிகார பலம் மிக்கது. நீங்கள் ஏற்கனவே கூறியுள்ளதுபோல, "தி.மு.கவை எளிதாக வெற்றிபெற விடமாட்டார்கள்' என்ற நிலையில், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க.வின் கூட்டணியின் வெற்றியை எப்படி உறுதி செய்வீர்கள்?

 

சிங்கிள் டீ குடித்துவிட்டு பிரச்சாரம் செய்யும் தொண்டர்படை தி.மு.க.விடம் இருக்கிறது. தி.மு.க.வுடன் கொள்கைரீதியாக இணைந்துள்ள கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் இருக்கிறார்கள். எங்களை ஆதரிக்க தமிழக மக்கள் இருக்கிறார்கள். ஆகவே எந்த அதிகார பலத்தையும் சந்தித்து தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றிபெறும். அந்த வெற்றியைத் தடுக்க முடியாது. ஏனென்றால் இது தேர்தல் நடத்தை அமலில் உள்ள காலம். ஆகவே தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை ஜனநாயக பேரியக்கமான தி.மு.க.விற்கு இருக்கிறது.

 

முந்தைய தேர்தல்களைவிட இப்போது பெண்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு அதிகரித்திருக்கிறது. அதனை வாக்குகளாக மாற்றும் வகையில் தி.மு.க.விடம் பெண்களுக்கான அமைப்புகள் பலமாக இருக்கின்றனவா?

 

தி.மு.க.விற்கு தாய்மார்களின் ஆதரவும் -அனைத்துத் தரப்பு வாக்காளர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது. அறுவடை செய்யும்போது சிந்தாமல் சிதறாமல், தேவையான பாதுகாப்புடன், நெல்மணிகளை வீடு கொண்டுவந்து சேர்ப்பதுபோல் -தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் வாக்குச்சாவடிக்கு கொண்டுவந்து சேர்க் கும் பலம் தி.மு.க.வின் மகளிர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் இருக்கிறது.

 

வாரிசு அரசியல், தி.மு.க. நிர்வாகிகளின் அத்துமீறிய செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆளுந்தரப்பு செய்யும் தேர்தல் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை எதிர்கொள்ள என்னசெய்யப் போகிறீர்கள்?

 

பத்து வருடம் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க. அப்போது நக்கீரன் தாக்கப்பட்டது, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசியது, இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்று தாக்கியது, வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிக்கு ஆபாச நடனம் போட்டு வரவேற்பு கொடுத்து அவரைத் தாக்க முயற்சித்தது, நேர்மையான உயர்நீதிமன்ற நீதியரசர் சீனிவாசன் வீட்டில் மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தது, வேளாண் கல்லூரியைச் சார்ந்த மூன்று மாணவிகளை தருமபுரியில் உயிரோடு கொளுத்தியது இவை எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியின் வன்முறை வெறியாட்டங்கள். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி... ""அண்ணா விட்டுருங்க'' என்று கதறினார்களே -அந்தக் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டது யார்? அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்தானே! ஆகவே தங்களின் வன்முறையை -அராஜகத்தை -கொடநாட்டுக் கொலை கொள்ளைகளை மறைக்க தி.மு.க. மீது ஒரு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள். வன்முறை வெறியாட்டங்களின் ஒட்டுமொத்த உருவம் அ.தி.மு.க. ஆட்சிதான். அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்பவில்லை. வெற்று விளம்பரங்களும் மக்களிடம் எடுபடாது.

 

ஆட்சியாளர்கள் கஜானாவைக் காலி செய்துவிட்டார்கள் -கடன் சுமையை ஏற்றிவிட்டார்கள் என்று நீங்கள் குற்றம்சாட்டும் நிலையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்?

 

"கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷனுக்கு' முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகள், படிப்படியாக -காலநிரல்படி நிறைவேற்றப்படும். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை ஒரு புனிதநூலாகப் பார்க்கிறது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த நேரங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதியை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நிறைவேற்றி யிருக்கிறார்கள். அவர்களின் வழியில் வந்துள்ள நான், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

 

மேற்குவங்கத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளின் செல்வாக்குச் சரிவினால், அங்கே பா.ஜ.க. தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டது. தமிழகத்தில் அ.தி.மு.க. பலவீனமடைந்தால், அரசியலில் அதற்குரிய இடத்தை மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதே?

 

என்னைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க.- அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் ஒரே கட்சியாகத்தான் பார்க்கிறேன். ஓருயிர் ஈருடல் போல்தான் முதலமைச்சர் பழனிசாமி இந்த நான்காண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறார். ஆகவே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்பதே இப்போதுள்ள முதல் இலக்கு; தமிழக மக்கள் அதில் பேரார்வம் காட்டுகிறார்கள். ஆகவே அண்ணா பெயரில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த, அ.தி.மு.க.வைப் பற்றி அக்கட்சியின் தொண்டர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

 

எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றத்தை தி.மு.க. விரும்புகிறதா? அது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா?

 

சட்டமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள கட்சி தி.மு.க. ""தன்னந்தனியாக சட்டமன்றத்தில் நின்று உரையாற்றினேன்'' என்று மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களே பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு முழு சுதந்திரமும் வாய்ப்பும் வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் வந்துள்ள நான் நிச்சயமாக, எதிர்க்கட்சிகள் இருக்கவேண்டும்; அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொல்லவேண் டும் என்றுதான் விரும்புவேன். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல -ஆளுங்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி பொறுப்புள்ள அரசாக செயல்படுவதற்கும் ஏற்றவகையில் அமையும். சிறிய கட்சிகள் குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை கூறியதுபோல், ""எங்களை வழிநடத்திச் செல்ல அவர்களும் வந்திருக்கிறார்கள்'' என்று கருதி -அவர்களுக்கு முழு வாய்ப்பு கொடுத்து -அ.தி.மு.க. ஆட்சியில் "கடுகு'போல் சிறுத்துப்போன சட்டமன்ற ஜனநாயகத்தை மீட்டெடுப்பேன். அதனால்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிக நாட்கள் சட்டமன்றக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் -சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

 

200+தொகுதிகள் இலக்கு என்றால், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும் வகையில் தி.மு.க.வினரின் களப்பணிகளை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

 

தி.மு.க.வினரும், கூட்டணிக் கட்சியினரும் நகமும் சதையும்போல் தேர்தல் களத்தில் இணைந்து நிற்கிறார்கள். ஊழல் அ.தி.மு.க. ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதிலும், மதவெறி பா.ஜ.க., ஊழல் அ.தி.மு.க.வின் தோளில் அமர்ந்து தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்பதிலும் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் ஒருமுகமாக நின்று தீர்மானமாகப் போராடிவருகின்றன.

 

கருத்துக்கணிப்புகளைக் கடந்து, கடைசிநேர பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடியவை. அதனை எதிர்கொள்ள தி.மு.க.வின் திட்டம் என்ன?

 

தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் பண விநியோகத்தையும் உன்னிப்புடன் கவனிக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவிற்கு மாநில அரசு அதிகாரிகள் யாரும் துணை போகமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்போதே பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்னுடன் பேசி, "நாங்கள் நடுநிலையாகச் செயல்படுவோம்; அ.தி.மு.க.வின் பண விநியோகத்திற்கு துணை போகமாட்டோம்' என்று உறுதி கூறிவருகிறார்கள். அ.தி.மு.க.வின் பண விநியோகப் புகார்களை -தி.மு.க.வினர் களத்தில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவித்து வருகிறார்கள். இனிவரும் நாட் களில் இன்னும் அதிகமாக விழிப்புணர்வுடன் இருப்போம்; தேர்தல் களத்தில் மிகச்சிறப்பாக வெல்வோம்.

 

கலைஞர் இல்லாத தேர்தல் களத்தில் முதலமைச்சர் வேட்பாளராகப் பயணிப்பது சுமையா? சுகமா?

 

கலைஞர் இல்லாத தேர்தல் களம் எப்படி சுகமாக இருக்கமுடியும்? ஆனால் அனைத்து துறையிலும் அ.தி.மு.க.வால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தைக் காணும்போது, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து -சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்ற வெறியோடு மத்திய அரசு என்ற அதிகாரத்தை பா.ஜ.க. பயன் படுத்துவதைப் பார்க்கும்போது - என் கண்முன்னால் தமிழ்நாடும் -தமிழ்நாட்டு மக்களும்தான் தெரிகிறார்கள். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ்மொழியின் சிறப்பு, சமூக நீதி, தமிழ்நாட்டின் நலன் -ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் காப்பாற்றும் கடமையை நிறைவேற்ற எத்தகைய சவால்களையும் -சோதனைகளையும் -சுமையையும் நான் ஒரு தனிச் சுகமாகவே கருதுகிறேன். அதுதான் தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணாவிற்கு, முத்தமிழறிஞர் கலைஞருக்கு நான் செலுத்தும் காணிக்கையாக இருக்கமுடியும். ஆகவே, தமிழக மக்களுக்காக தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நடைபெறும் இந்த சட்டமன்றத் தேர்தல்களத்தை நான் ஒரு சுமையாக அல்ல -சுகமான கடமையாக, பொறுப்பாகக் கருதுகிறேன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.