Skip to main content

சாதி தாண்டி காதல் திருமணமா? - நொறுக்கப்பட்ட வாழ்க்கை!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

ஹலோ... நாங்க கோபி செட்டிப்பாளையம் ஆல்வுமன் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசறோம். உங்க பொண்ணு சௌந்திர நாயகி, அசோக் என்கிற பையன கல்யாணம் பண்ணிட்டு. போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்திருக்கா. நீங்க ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போயிடுங்க.''

 

"இல்லைங்க... நாங்க யாரும் அந்த கேவலமானவளப் பார்க்கக்கூட மாட்டோம்'' -ஃபோனை கட் பண்ணி விட்டனர். இது நடந்தது செப்டம்பர் 16ல்!

 

அடுத்த சில நாட்களில்...

 

"ஹலோ... சௌந்திரா... நான் அம்மா பேசறேன்மா. நீ கண்ணுக்குள்ளயே இருக்கறேம்மா. அப்பா யார் கூடயும் பேசவே மாட்டேங்கறாரு. நீயும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு விருந்துக்கு வாங்க.''

 

"சரிம்மா...'' கண்ணீர் கசிய ஃபோனை கட் செய்தார் சௌந்திர நாயகி.

 

"நான் சொன்னேன் இல்லைங்க... எங்க வீட்ல நம்ம கல்யாணத்தை ஏத்துக்குவாங்கன்னு. இப்ப நம்பறீங்களா இல்லையா?''

 

"ஆமாம் சௌந்திரா... என்னால இப்பக்கூட நம்பவே முடியல. நம்பாம இருக்கவும் முடியல...'' என அசோக் சொல்லி முடித்த அடுத்த நிமிடத்தில்... நைனாம் பாளையத்தில் உள்ள சௌந்திர நாயகியின் பெற்றோர் வீட்டில் கார் நிறுத்தப் பட்டது.

 

தடபுடலாய் ஆட்டுக் கறி, சிக்கன் விருந்துகள் மணமக்களுக்கு கொடுக்கப்பட்டு சௌந்திர நாயகி, அசோக் தம்பதியினரை குதூகலப்படுத்தி அனுப்பி வைத்தனர் சௌந்திராவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்.

 

அக்டோபர் 2.

 

"ஹலோ... அம்மா சௌந்திரா... நான் அம்மா பேசறேன்மா. அப்பாக்கு ஒடம்பு சரியில்லாம போயிருச்சும்மா. ஒன்னப் பாக்கணும்னு அழுகுறாரும்மா. ஒரு எட்டு அப்பாவ மாப்பிள்ளையோடு வந்து பாத்துட்டு போயிடும்மா.''

 

"உடனே வர்றேன்மா...'' என அழுகையோடு ஃபோனை கட் செய்துவிட்டு... "என்னங்க...'' என கணவன் அசோக்கிடம் ஓடினார் சௌந்திரா.

 

அந்த கார் கிளம்பிற்று. காரினுள்... சௌந்திர நாயகி, அசோக், அசோக்கின் தம்பி பரணிதரன், அசோக்கின் நண்பன் சூர்யா... என நால்வர் இருந்தார்கள்.

 

கரோனோ காலம் என்பதால் அப்பாவை நினைத்து கலங்கிய சௌந்திராவுக்கு ஆறுதல் சொன்னார் அசோக்.

 

"அம்மா... அப்பாக்கு என்னம்மா ஆச்சு?'' என காரிலிருந்து கேட்டபடியே ஒரு சிட்டுக் குருவியைப் போல வீட்டிற்குள் பறந்தார் சௌந்திரா.

 

"வாங்க மாப்ளே... இந்த ரூம்ல மூணு பேரும் ஒக்காருங்க. இந்தாங்க டீ...'' என அசோக்குடன் சென்ற இரண்டு பேருக்கும் சேர்த்து டீ கொடுக்கப்பட்டது.

 

அவ்வளவுதான்... உள் ரூமிலிருந்து பத்து பேர் அரிவாள், கிரிக்கெட் ஸ்டெம்புகளோடு மூன்று பேரையும் நையப் புடைக்க ஆரம்பித்து விட்டனர்.

 

எவ்வளவோ தடுத்தும்... முடியாத அசோக்கிடம்... "ஏண்டா கீழ் சாதி நாய்களா? உங்களுக்கு எங்க பொண்ணுக கேட்குதோ?'' என அடித்து ஒரு ரூமிற்குள் மூன்று பேரையும் அடைத்து விட்டனர்.

 

"காரை அடிச்சு ஒடைச்சுட்டோம்டா... எங்க ஆளுக 150 பேருக்கும் மேலா இங்க திரண்டு வந்துட்டு இருக்காங்க. அவுங்க கையிலதான் உங்களுக்கு மட்டுமல்ல... உங்க கீழ் சாதி புத்திக்கே சாவடி கெடைக்கப் போகுது...''ன்னு சொல்ல... பயந்து போன மூவரும் பின் வாசல் வழியாக தப்பித்து வெளியேறி... காரினுள் ஏறி கோபி போலீஸாருக்கு தகவல் சொல்லிவிட்டு கோபி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள்.

 

அக்டோபர் 3.

 

போலீஸ் வந்தது. "சார்... என் பேரு அசோக். சாதியின் பெயரால என் மனைவி சௌந்திர நாயகியை என்னிடமிருந்து தந்திரமா பிரிச்சுட்டாங்க. என்னையும், என் தம்பி, என் நண்பனையும் கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. அதிலிருந்து தப்பிச்சு வந்தோம்...'' என சொல்லி விட்டு சட்டைகளைக் கழற்றிக் காட்ட... உடலெங்கும் கிரிக்கெட் ஸ்டெம்புகள் நடப்பட்டிருந்தன.

 

Ad

 

மீடியாக்களிடம் பேசிய அசோக்... "என் மனைவி சௌந்திர நாயகியை போலீஸார் மீட்டுத் தர வேண்டும். எங்கள் மீது சாதி வெறியோடு கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்றார் பரிதாபக் குரலில்.

 

கோபி போலீஸாரிடம் நாம் பேசியபோது... "சார்... இதோ அந்த புகார் சம்பந்தமாகத்தான் விசாரித்து... இப்போது சௌந்திர நாயகியின் அண்ணன் மற்றும் அவனது உறவினர்கள் மீது ஃஎப்.ஐ.ஆர் போட்டுள்ளோம். கூடிய சீக்கிரம் அந்தப் பெண்ணை மீட்டு அசோக்குடன் சேர்த்து வைப்போம்...'' என்கிறார்கள் உறுதியான குரலில்.

 

காதல் திரைப்படத்தைப் போலவே நடந்திருக்கும் இந்தச் சம்பவம் கோபியை அதிர வைத்திருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.