Skip to main content

என் ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சி... கதறிய தாய்..! - உயிருக்கு தீ வைத்த ஃபேஸ்புக் காதல்! -மூடி மறைக்கும் போலீஸ்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

dddd

 

முகநூலில் ஏற்பட்ட காதல், மண விழாவில் முடியாமல் மரணத்தில் முடிந்துள்ளது. சென்னை எம்.கே.பி. நகரில் வசித்துவருவர் ரோசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது பள்ளிப் பருவம் முதலே முகநூலைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். போலீசான மகேஷ். சென்னை புழல் சிறையில் சூப்பிரண்டென்ட் செந்தில்குமாரிடம் கன்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

 

முகநூல் மூலமாக மகேஷ் பேச ஆரம்பித்ததும் ரோசியும் பேச ஆரம்பித்துள்ளார். "எனக்கும் போலீஸ் ஆகணும் என்பதுதான் ஆசை'' என்று சொல்லியுள்ளார். மகேஷும் "உங்களை ஐ.பி.எஸ். ஆகவே ஆக்கிவிடலாம்'' என்று சொல்ல... தொடர்ந்த உரையாடல் காதலானது. திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து காமத்தில் முடிந்து, கரு வளர்ந்துள்ளது. மாத்திரைகளால் கரு கலைக்கப்படவே, அடுத்தடுத்து இன்ப விளையாட்டுகள் தொடர்ந்து, மீண்டும் கரு உருவானது. இந்தமுறையும் கலைக்கச் சொல்லி மகேஷ் வலியுறுத்தியபோதுதான் ரோசிக்கு சந்தேகம் வந்தது. சண்டையும் வலுத்தது.

 

அக்டோபர் மாதம் புளியந்தோப்பு டி.சி. ராஜேஷ்கண்ணன் அவர்களைச் சந்தித்து புகார் கொடுக்கவே, அவர் எம்.கே.பி. நகர் ஆல் வுமன் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மலர் செல்வியிடம் புகாரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். 16 வயது பெண்ணை ஏமாற்றியது பற்றி விசாரிக்க வேண்டிய காவல்துறை, இருவரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து மட்டுமே செய்தது.

 

மனம் நொந்துபோன ரோசி, நவம்பர் 19-ம் தேதி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற முடியாமல் 22-ம் தேதி இறந்துபோனார். தன் மகள் இறப்புக்குக் காரணமான மகேஷை கைதுசெய்யச் சொன்ன தாயை, காவல்துறையே பேரம் பேசி மிரட்டி அனுப்பியுள்ளது. பணமும், புழல் சிறை அதிகாரியின் பின்புலமுமே மகேஷை காப்பாற்றியுள்ளது.

 

dddd

 

புழல் சிறையில் மகேஷ் பற்றி விசாரித்தபோது, "அதிகாரியின் பெயரைச் சொல்லி அவன் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமில்லை. விதிகளை மீறிச் செல்ஃபோன் எடுத்து வருவான், கேட்டா சார் பெயரைச் சொல்லி மாஸ் காட்டுவான்'' என்றார்கள்.

 

இதுதொடர்பாக ரோசியின் தாயார் எலிசெபத் கூறுகையில், "பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, கரோனா காலம் என்பதால் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தாள். சில நாட்களாவே கோபமாகவும், சோறு, தண்ணிகூட உண்ணாமல் கிடந்தாள். நான் கேட்டபோதுகூட எதையும் சொல்லாமலே இருந்து வந்தாள். திடீரென ஒருநாள் இரவு தீவைத்துக்கொண்டு என் பின்னாடி வந்து நின்றாள். என் ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சி. அதன்பிறகு அவள் ஆஸ்பிட்டலில் சொன்ன வாக்குமூலத்திற்குப் பிறகுதான் இந்த விஷயங்கள் எனக்கே தெரிய வந்தது. அதன்பிறகு எம்.கே.பி. நகர் போலீஸ் ஸ்டேசனில் என் பெண்ணின் சாவுக்குக் காரணமாக இருந்த அந்தப் பையனைக் கைது செய்யுங்க என்று 15 நாள் போராட்டத்திற்குப் பிறகே, இன்ஸ்பெக்டர் ரமேஷ் எங்களை அழைத்து ‘நடந்தது நடந்து போச்சு... என்று ஒரு லட்சம் கொடுக்கிறாங்களாம். அதை வாங்கிட்டு பொழப்பை பாரு' என்று சொன்னாரு. நானும் "2 லட்சம் தருகிறேன், அந்த பையனை இங்கே கொளுத்திக்கச் சொல்லுங்க'' என்று சொன்னேன். அதற்கு இன்ஸ்பெக்டர் "இந்தாம்மா எங்களால் வழக்கையே மாத்திப் போட முடியும், கிளம்பு என மிரட்டி அனுப்பிவிட்டார்'' என்றார்.

 

இதுதொடர்பாக பேசிய இன்ஸ்பெக்டர் ரமேஷ், "இந்த வழக்கை சந்தேக மரணம் எனப் பதிவு செய்துள்ளோம். மேலும் செக்சன் 305, தற்கொலைக்குத் தூண்டுதல் என மாற்ற முடியுமா என்று பார்த்து வருகிறோம். அந்தப் பையன் காதலித்தது உண்மைதான். ஆனால் கருவைக் கலைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கிடைத்தால் நிச்சயம் கைது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் பாலா... "இவர்கள் வெறுமனே தற்கொலை வழக்காக (செக்சன் 174) பதிவு செய்துள்ளனர். 16 வயது சிறுமியைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக பொய்யாகப் பேசி, தன் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஏமாற்றியதால்தான் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலம் இருக்கிறது. ஏன் இவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லை என, என்னிடமே ஆதாரத்தைக் கேட்டபோது, நானே அனைத்து ஆதாரத்தையும் கொடுத்தும்... எந்த வழக்கும் பதிவு செய்யவே இல்லை, முழுக்க மூடி மறைக்க நினைக்கிறார்கள்'' என்றார்.

 

இது தொடர்பாக மகேஷிடம் கேட்ட போது, பேச மறுத்துவிட்டார்.

அநீதியைக் கண்டு அதிர்ந்து போகாமல், அவர்களுக்குச் சாதகமாக செயல்படும் காவல் துறையை யார் தட்டிக்கேட்பது.

 

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.