Skip to main content

தனிமை போதும்... மரணம் வேண்டும்... - தன் இனத்தின் கடைசி ஆண்மகனின் கதை!   

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பு என ஒன்று  இருப்பதை போல இறப்பு என்ற ஒன்றும் உண்டு. ஆனால் அந்த இறப்பானது அந்த இனத்தின் கடைசி உயிராக இருந்தால் கண்டிப்பாக அது துயரமானது, பூமிக்கு ஏற்படும் இழப்பு. அப்படித்தான் அழிந்து நிற்கிறது வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருக இனம். கடந்த மார்ச் 20-ஆம் தேதி இறந்த 'சூடான்' எனும் காண்டாமிருகம்தான் கடைசி வெள்ளை ஆண்  காண்டாமிருகம்.

 

Sudan feeding



1975-ல் சூடானிலுள்ள ஷாம்பே வேட்டை காப்பிடத்தில் குட்டியாக பிடிக்கப்பட்ட இந்த காண்டாமிருகம், செக் குடியரசின் வனவிலங்கு காப்பகமொன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின், அந்த இன அழிவைத் தடுக்க கென்யாவின் ஓல்-பெஜெடா காப்பகத்தில் வளர்க்கப்பட்டது. சூடான், கென்யாவின் மண்ணில் கால் வைத்ததிலிருந்து இறந்த கடைசி நிமிடம் வரை துப்பாக்கி ஏந்திய காவலுடன் தான் சுற்றி வந்தது. அந்த அளவிற்கு இப்படி ஒரு பெரிய விலங்கான காண்டாமிருக இனம் பாதுகாக்கப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு காரணம் மனிதனே. ஏனெனில் காண்டாமிருகம் மட்டுமல்ல பல காட்டு விலங்குகள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. காரணம் சர்வதேச வேட்டையாடல். இதுவரை உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டா மிருகம், வெள்ளை காண்டாமிருகம் என ஐந்து வகை காண்டாமிருகங்கள் உள்ளன. அதில் வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் கடைசி ஆண் இனம் சூடானுடன் முற்று பெற்றுவிட்டது. சூடானுடைய மகள் நிஜினும்,பேத்தி பதுவும் தான் இப்போது மிஞ்சி இருக்கும் இரண்டே வடக்கு வெள்ளை பெண் காண்டாமிருகங்கள் ஆகும்.

பொதுவாக காண்டாமிருகங்களின் வாழ்நாள் காலம் 50 ஆண்டுகள்தான். சூடானுக்கு 45 வயது. கிட்டத்தட்ட தன் வாழ்நாளை வாழ்ந்து முடித்தது என்றாலும் அந்த இனம் இனி தொடர வழியில்லை என்பதே உலகமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1900களில் 5 லட்சமாக இருந்த காண்டாமிருகங்கள் எண்ணிக்கை 1970-களில் 70 ஆயிரம் என  குறைந்துவிட்டது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில்  கடந்த 2013 நிலவரப்படி காண்டாமிருகக் கொம்பு ஒரு கிலோவின் விலை சுமார் 60,000 அமெரிக்க டாலர்களாம் (சுமார் 36 லட்ச ரூபாய்). இந்த விலைக்காகத்தான் வேட்டைக்காரர்கள் இந்த இனத்தை அழித்துமுடித்திருக்கின்றனர். 

 

Sudan last



சூடான், தான் பிறந்த நாட்டின் பெயரால் அழைக்கப்பட்டது. கென்யாவுக்கு இது வந்த பொழுது இதன் நண்பனான சுனியும் உடனிருந்தது. சுனி கடந்த 2014ஆம் ஆண்டு மறைந்து விட, சூடான் உலகிலேயே தன் இனத்தின் ஒற்றை ஆண் ஆனது. அது கடும் தனிமையில் தவித்ததாக அதன் காப்பாளர்கள் கூறியுள்ளனர். அந்தத் தனிமையிலும் சூடான் மிகவும் தன்மையாகவும், தன் இனத்திற்கு மட்டுமல்லாது அழிந்து வரும் அதனை உயிரினங்களின் பிரதிநிதியாகவும் நடந்துகொண்டதாக காப்பகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். சூடான் போன்ற இன்னொரு ஆண் காண்டாமிருகத்தை செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் சூடானின் மகள் நிஜினும், பேத்தி பதுவும் இயற்கையாக கருவுருவதற்கான ஆற்றலை இழந்திருப்பதால் சோதனை குழாய் மூலம் கருத்தரிப்பை மேற்கொண்டு வாடகை தாய் முறையில் இந்த இனத்தைக் காக்க முயற்சித்து வருகிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால் இது கைகொடுக்குமா இல்லையா என்பது கேள்விக்குறிதான். 

இப்படி அழிவின் விளிம்பில் இருப்பது, உருவத்தில் பெரிய காண்டாமிருகங்கள் மட்டுமல்ல சிட்டுகுருவிகள் போன்ற சின்ன சின்ன உயிர்களும்தான். பல காட்டுவிலங்குகள் வேட்டையால் இன்று அழிவை சந்திக்கும் நிலையிலுள்ளன. அவற்றில் பனிக்கரடி, நீர்யானை, சிவிங்கிப்புலி, நீலமஞ்சள் பெருங்கிளி, டிங்கோ நாய், கடல் உயிரினங்களில் வெள்ளை திமிங்கலம், திமிங்கலச் சுறா போன்றவை அழியும் தருவாயிலுள்ள விலங்குகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட விலங்கினம் முற்றுப்பெறுவது என்பது, சமூக விலங்கான மனிதனையும் ஒருநாள் இன அழிவு தொடும் என்பதன் அறிகுறிதான். 

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.