Skip to main content

ஊரடங்கு காலத்தில் தேர்ச்சி! வச்சி செய்யும் விஜய்சேதுபதியின் அரசியல் தர்பார்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

Vijay Sethupathi

 

மக்களுக்கு விரோதமாக எந்தக் காரியம் நடந்தாலும் அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அதற்காக ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.

 

அதேபோல் 'மண்டி' என்கிற ஆன்லைன் விளம்பரத்தில் நடித்ததற்காக சிறு குறு வியாபாரிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, தயங்காமல் மன்னிப்புக் கேட்டுவிட்டு, விளம்பரத்திற்கும் தடை போட்டவர் விஜய்சேதுபதி. அப்படிப்பட்ட விஜய்சேதுபதியின் கைகளில் இப்போது 'லாபம்', 'க/பெ.ரணசிங்கம்', 'துக்ளக் தர்பார்'’ உட்பட 5 படங்கள் உள்ளன.

 

'லாபம்'’ படத்தின் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், கம்யூனிச சித்தாந்தத்தின் மீது பற்றுள்ளவர் என்பதால், 'லாபம்- பகல் கொள்ளை' என சப்-டைட்டில் வைத்துள்ளார். முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல் பேசும் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிதான். எஸ்.பி. ஜனநாதனின் 'புறம்போக்கு' படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி. அந்தப் புறம்போக்கிற்கு உண்மையான அர்த்தத்தைச் சொன்னவர் எஸ்.பி.ஜனநாதன்.

 

'க/பெ.ரணசிங்கம்' படம் மணல் மாஃபியாக்களையும் குடிநீர் கொள்ளையர்களையும் பற்றிய கதையுடன் வருகிறது.

 

'துக்ளக் தர்பார்'’ படத்தில்தான் செம அரசியல் தர்பார் நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இப்படத்தை விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் எஸ்.லலித் தயாரிக்க, டெல்லி பிரசாத், தீனதயாளன் என்ற புதியவர் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துள்ளது.

 

முடிந்துள்ள அந்தப் பாதியிலும் பண மதிப்பிழப்பால் மக்கள் அல்லாடியது, ஜி.எஸ்.டி. வரி, தினசரி ஏறும் பெட்ரோல் விலை என எல்லா பிரச்சினைகளையும் தங்களால் முடிந்த அளவுக்கு போட்டுத் தாக்கியுள்ளதாம் படக்குழு.

 

இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் திரைக்கதை எழுதுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார் விஜய்சேதுபதி. அந்த அனுபவத்தை வைத்து 'துக்ளர் தர்பார்' படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் குறித்து டைரக்டர் டெல்லி பிரசாத்திடம் ஆலோசித்தாராம் விஜய்சேதுபதி.

 

அதன்படி இந்த லாக்டவுன் காலத்தில் கைதட்டச் சொன்னது, மணி அடிக்கச் சொன்னது, இங்கே ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடையைத் திறந்தது, 28 நாளில் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் எனச் சொன்னது, 20 லட்சம் கோடி எங்கே போச்சு, என்ன ஆச்சு என சகலத்தையும் துக்ளக் தர்பாரின் மீதிப் பாதியில் பிரித்து மேயப் போகிறார்களாம்.

 

‘நையாண்டி கிங்’ ரா.பார்த்திபன் இருப்பது படத்திற்குக் கூடுதல் சிறப்பு.

 

 

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

பற்றி எரியும் 10 வருட புகை; கழகத்தில் இணைந்த விஜய்! 

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
tamilaga vetri kazhagam vijay political strategic

தமிழ்நாட்டிலிருந்தும் தமிழ் மக்களிடமிருந்தும் பிரிக்கவே முடியாத இரு விஷயங்கள் அரசியலும் சினிமாவும். காலத்திற்கேற்ப அரசியலில் கொள்கைகளும் சினிமாவில் தொழில்நுட்பங்களும் மாறியிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் தொடரும் சில விஷயங்களும் உள்ளன. அதில் ஒன்று மூன்றெழுத்து செண்டிமெண்ட். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தனுஷ், சிம்பு வரை திரையுலகில் ஆளுமை செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கிற மூன்றெழுத்துக்காரர்கள் ஏராளம். இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் செய்த சில சம்பவங்கள் சினிமாவை தாண்டி அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்படி முந்தைய தலைமுறை உச்ச நட்சத்திரங்கள் அக்கால சினிமாவிலும் அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் இக்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறவர் விஜய். 

பொதுவாக கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்றால் கோடம்பாக்கத்தின் உதவி தேவை என்ற பேச்சு தமிழக அரசியலில் காலங்காலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு சொல்லாடல். அந்த வகையில் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் நடிகர் விஜய்யும் கோட்டை வாசலை மிதிக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனை ரசிகர்கள் விரும்புவதை விட விஜய்யுமே விரும்புகிறார். இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, இந்த இயக்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என அறிவித்தார் விஜய். இதற்கேற்றார் போல 2010க்கு பிறகு வெளியான விஜய்யின் பல படங்களில் அரசியல் வசனங்கள் ஆங்காங்கே அனல் பறக்கத் தொடங்கின. இது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்தது. இந்த காலகட்டம் தான் தற்போது விஜய் செய்யும் சம்பவங்களுக்கான ஆரம்பப்புள்ளி எனலாம்.

தலையாய் மாறிய தலைவா

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானது. பொதுவாக விஜய் படம் வெளியாகும் போது அவ்வப்போது சிறுசிறு சர்ச்சைகள் வருவது வழக்கம் என்றாலும், 'தலைவா' வுக்கு படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை வந்தது. 'டைம் டு லீட்' என்ற டேக் லைனுடன் வெளியான தலைவா படத்தின் டைட்டில் அப்போது மிகப்பெரிய பேசுபொருளானது. இந்த டேக் லைன் விஜய்யின் அரசியல் வருகைக்கான முடிவை உறுதி செய்துள்ளது என ரசிகர்கள் பேசத் தொடங்கினர். இந்த பேச்சு பெரிதாகவே, அப்போது இருந்த அதிமுக ஆட்சியால் படத்திற்கும் விஜய்க்கும் சில குடைச்சல்கள் கொடுக்கப்பட்டன. அதன்பின் அந்த டேக் லைன் நீக்கப்பட்டு, சில காட்சிகள் கத்தரிக்கப்பட்டு படம் வெளியானது. இந்த பிரச்சனையின் போது ரசிகர்களிடம் இருந்து விஜய்க்குக் கிடைத்த ஆதரவு பிற்காலங்களில் அவர் செய்யப்போகும் சம்பவங்களுக்குத் தலையாய் அமைந்தது என்றுகூடச் சொல்லலாம்.

அதிமுகவைத் தொடர்ந்து திமுக

அதிமுகவுடன் ஏற்பட்ட சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்திருந்த சூழலில், அதற்கடுத்த ஆண்டே கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசியிருப்பார். மேலும், இப்படத்தில் 2ஜி வழக்குகள் குறித்தும் விஜய் வசனங்கள் பேசியிருப்பார். இது திமுக தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் படத்தைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள், மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு பரிசளித்தனர்.

பான் இந்தியா பிரச்சனை

அதுவரை தமிழகத்தில் மட்டுமே சம்பவம் செய்து கொண்டிருந்த விஜய் மெர்சல் திரைப்படம் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டானார். மருத்துவத் துறையில் நடைபெறும்  ஊழலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ஜி.எஸ்.டி க்கு எதிராக வசனம் பேசி மத்திய அரசைக் கண் சிவக்க வைத்தார். இது அன்றைக்கு மத்தியில் ஆளும் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதற்கு எல்லாம் ஒருபடி மேலே சென்ற எச். ராஜா விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என்பதைக் குறிப்பிட்டு அவர் மீது மத ரீதியிலான சாயத்தைப் பூசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் மெர்சல் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார். இவ்விவகாரத்தில் ஸ்டாலின் தொடங்கி ராகுல் காந்தி வரை விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

சர்க்காரும் முதல்வரும்

மெர்சலை தொடர்ந்து நடிகர் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே மீண்டும் வெடித்தது ஒரு அரசியல் சர்ச்சை. அதற்கு காரணம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துக்கள் தான். ஆம், இந்த விழாவில், "எல்லாரும் கட்சி தொடங்கி, பிரச்சாரம் செய்துதான் தேர்தலில் நிப்பாங்க , ஆனால் நான் சர்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறேன். சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்" என்று பேசினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது மட்டுமல்லாமல் படத்தில் வில்லியாக வரும் வரலட்சுமிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்ததற்காக அதிமுகவினர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இப்படி ரீலிலும், ரியலிலும் நிகழ்கால அரசியலையும் எதிர்கால திட்டங்களையும் கூறி அரசியல்வாதிகளை அதிரவைத்தார் சர்கார் விஜய். 

பிகில் மேடைப் பேச்சு

அடுத்ததாக மீண்டும் அட்லீயுடன் இணைந்த விஜய் பிகில் படத்தில் நடித்திருந்தார். வழக்கம் போல இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சுக்கள் அடுத்தநாளே பெரும் பேசுபொருளானது. அந்த விழாவில், "யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, மக்கள் அவர்களை அங்குதான் உட்கார வைக்க வேண்டும்" என்று கூறினார். அத்துடன் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானதைச் சுட்டிக்காட்டிய விஜய், "சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர்கள் மீது பழி போடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள்" என்றார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு அப்போது தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே வெளியான இப்படம் பெரும் ஹிட்டடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

ஊமையாக இருந்த விஜய்

கொரோனா அலை சற்று ஓய்ந்த நேரம் என்பதால், தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசைவெளியிட்டு விழா ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் பிரபலங்கள் மட்டும் பங்கேற்க நடந்த நிகழ்ச்சியில் விஜய் பேசினார். முன்பு நடந்த விழாவில் எல்லாம் அதிமுக, திமுக, பாஜக என ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை சம்பவம் செய்த விஜய் இந்த முறை யார் உடன் மல்லுக்கட்ட போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் மைக்கை பிடித்த விஜய், அவரது ஸ்டெயிலில் நடனம் ஆடி முடித்துவிட்டு, பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு ‘உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாக இருக்க வேண்டியதாக இருக்கு..’ என்று மட்டும் சொல்லி பேச்சை முடித்தார். 


இப்படி விஜய் பேசியதற்கு காரணம் இல்லாமலில்லை, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்துகொண்டிருக்கும் போது விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை நடந்துவந்த அதே சமயத்தில் மற்றொரு குழு நெய்வேலிக்கு சென்று படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியது. இறுதியாக நடைபெற்ற விசாரணையில் விஜய் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நெய்வேலியில் நடந்த படிப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் ஒன்றாகக் கூடினர். இதைப் பார்த்த விஜய் அவர்களுடன் அங்கிருந்த வேன் ஒன்றில் ஏறி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் இந்திய அளவில் வைரலானது. இந்த சம்பவத்தை மனதில் வைத்துதான் விஜய் அவ்வாறாக பேசினார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

கப்பு முக்கியம் பிகிலு

லியோ படத்தின்  இசைவெளீயிட்டு விழாவிற்காக எல்லாம் தயாராகிவிட்டது; டிக்கெட்டுகள் கூட விற்பனையாகி விட்டது. ஆனால், இடப் பற்றாக்குறையால் லியோ இசை வெளியிட்டு விழா ரத்தானது. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விழா ரத்தானதாக பேசப்பட்டாலும், படக்குழு இதனை அறவே மறுத்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வெற்றிவிழா நடைபெற்றது. பரபரப்பான சூழலில் அரசியல் குறித்து விஜய் என்ன பேசப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தொகுப்பாளர் தமிழ்நாட்டை பற்றி என்று கேட்டதற்கு 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறினார்.  

இவற்றிற்கு மத்தியில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சைக்கிளில் சென்று வாக்களித்தார். இதனை விஜய் டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்களிக்க சைக்கிளில் சென்றதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். இன்னும் சிலர் அவரது மாஸ்க் கலரில் குறியீடு இருப்பதாகக் கூறி அதனை டீகோடிங் செய்து கொண்டிருந்தனர். விஜய்யின் இந்த செயல் உள்ளூர் மீடியாவையும் தாண்டி நேஷனல் மீடியாவிலும் தலைப்பு செய்தியாக மாறிப் போனது. இப்படி விஜய் செய்யும் சிறு சிறு செயல்கள் கூட சினிமாவையும் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி பல சம்பவங்களைச் செய்து எப்போதும் லைம் லைட்டில் இருக்கும் விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். 

பொதுவாக எங்கு ஒரு அரசியல் கட்சி பிரவேசித்தாலும் ‘மாற்று’ என்பதும் தொத்தி வரும், அந்த வகையில் பார்க்கும்போது, ‘தமிழக வெற்றி கழக’ தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில உரிமை, சமத்துவக் கொள்கைப் பற்று உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பது, அவர் தமிழகத்தின் பாரம்பரிய கழக ஆட்சிகளை பின்பற்றுவாரா இல்லை வேறு ஏதேனும் கொள்கைகளை முன்னிறுத்துவாரா என்று காலம் தான் பதில் சொல்லும்.