Skip to main content

பாஜகவுக்கு ஆறுதல் பரிசு! 

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

kerala

 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் தடம் பதிக்க வேண்டும் என்கிற நோக்கில் தேர்தலைச் சந்தித்த பாஜகவுக்கு தற்போது வெளியான தேர்தல் முடிவுகள் ஒரு ஏமாற்றமே. கடந்த 2015 -ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், கிராமப் பஞ்சாயத்தில் 14 இடங்களைப் பெற்றிருந்த பா.ஜ.க, இந்தமுறை 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இம்முறை எந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளிலும் முன்னிலை வகிக்கவில்லை பா.ஜ.க. கடந்த தேர்தலில் 21 ஊராட்சி ஒன்றியத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. நகராட்சி தேர்தலில் 320 டிவிஷன்களில் தனது இருப்பை உறுதி செய்திருக்கிறது. கடந்தமுறை 236 டிவிஷன். மாநகராட்சி தேர்தலிலும் இம்முறை தனது இருப்பை காட்டி முன்னேற்றப் பாதையில்தான் உள்ளது பாஜக.

 

கடந்த முறை பாலக்காடு நகராட்சியில் வெற்றி கண்ட பாஜக, இந்தமுறை பாலக்காடு மட்டுமின்றி பந்தளம் நகராட்சியுடன் சேர்த்து இரு நகராட்சிகளிலும் வென்றிருக்கிறது. சபரிமலை விவகாரத்தின்போது பந்தளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதிகளில்தான் பாஜகவும் சில இந்து அமைப்புகளும் சேர்ந்துகொண்டு சபரிமலைக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். அதனுடைய வெளிப்பாடாகத்தான் கடந்தமுறை இடதுசாரிகள் வென்ற பந்தளத்தில் இம்முறை பாஜக வென்றுள்ளது. மேலும், பத்தனம்திட்டா பகுதிகளில் சில வார்டுகளிலும் பாஜக வென்றிருப்பது, சபரிமலை விவகாரம் எனப் புரியவைக்கிறது. 

 

பாஜக இரண்டு நகராட்சிகளில் மட்டும் வென்றிருந்தாலும், அது ஒருசில நகராட்சிகளில் மற்ற கூட்டணிகளுக்குக் கடுமையான போட்டி கொடுத்திருக்கிறது. இடதுசாரிகளின் கோட்டை என்று சொல்லப்படும் ஒட்டப்பாளம், ஷொர்னூர் ஆகிய நகராட்சிகளில் பாஜக நிறைய வாக்குகளைப் பெற்றுள்ளது. கன்னூர் நகராட்சியில் காங்கிரஸை வென்றிருக்கிறது பாஜக. அதேபோல நிலம்பூர் நகராட்சி மற்றும் அங்காமளி நகராட்சியில் தலா ஒரு சீட்டை பாஜக வென்றிருக்கிறது. 

 

திருவனந்தபுர மாநகராட்சியை இம்முறை வெல்வதை இலட்சியமாகக் கொண்டு இறங்கியது பாஜக. காரணம் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவே ஆச்சர்யப்படும் அளவிற்கு, 35 சீட்டுகளை வென்று காங்கிரஸை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியது. இதனைத் தொடர்ந்து இந்தமுறை இங்கு கவனம் செலுத்தினால், மாநகராட்சி நம் கையில் வந்துவிடும் என்கிற எண்ணத்தில்தான் ஒருவருடமாக பா.ஜ.க இங்கு பணியாற்றியது. ஆனால், இந்தமுறை 34 சீட்டுகளையே வென்றுள்ளது. காங்கிரஸ் 10 சீட்டுகளைத்தான் பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் 2016ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் திருவனந்தபுர தொகுதி ஒன்றை பாஜக வென்றதில், இம்முறை மாநகராட்சி நமக்குத்தான் என மிகவும் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சியாக மட்டுமே ஆக முடிந்தாலும் அங்கு தனது இருப்பை நிரூபித்துள்ளது பாஜக. 

 

cnc

 

இதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பாராத ஒரு மூவாக 600க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர்களை உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. 112 இஸ்லாமியர்கள் மற்றும் 500 கிறிஸ்துவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் பாஜக கட்சி சிறுபான்மை மக்களின் வாக்குகளை நோக்கியுள்ளது. மேலும், அவர்கள் மீது வைக்கப்படும் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு இதன்மூலம் பதில் சொல்லிக்கொள்ளலாம் என்கிற மூவாகதான் இது பார்க்கப்படுகிறது. இதை வைத்து அடுத்து ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலிலும் பலனை எதிர்பார்க்கிறது பாஜக. இதுமட்டுமல்லாமல் ஏ.கே. ஆண்டனி, உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா போன்ற மூத்த தலைவர்களின் தொகுதிகளில் பாஜகவின் வாக்குகள் கனிசமான அளவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இதனை எல்லாம் பார்க்கும்போது பாஜகவுக்கு இந்த கேரள உள்ளாட்சித் தேர்தல் கடும் தோல்வி என்பதைவிட ஆறுதல் பரிசு எனலாம்...

 

 


 

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.