Skip to main content

கொங்கு மண்டல தி.மு.க.வுக்கு முதல்வர் எடப்பாடி மீது பாசம்...? –குமுறும் உ.பி.க்கள்

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவினர் உற்சாகமடைந்த பகுதி என்றால் கொங்கு மண்டலம் தான். அதேபோல் திமுகவினர் உற்சாகம் இழந்த பகுதியும் இந்த கொங்கு மண்டலம்தான். காரணம் இங்கு நடைபெற்ற தேர்தலில் யூனியன் கவுன்சிலர்கள் முதல் மாவட்ட கவுன்சிலர்கள் வரை அதிமுகவினரே அதிகமாக வெற்றி பெற்றுள்ளனர். திமுக இங்கு பெரிய அளவில் தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இதுபற்றி கொங்கு மண்டலத்தில் உள்ள சீனியர் திமுக உடன் பிறப்புகள் வேதனையோடு தெரிவிப்பது என்னவென்றால்,
 

"எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்றுவரை கொங்கு மண்டலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினர் கூறிவந்தனர். இது மறைந்த ஜெயலலிதா காலம் வரை பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. திமுக இங்கு கொஞ்சம் பலவீனமான அமைப்பாகத்தான் இருந்தது. ஆனால் தலைவர் கலைஞர் மறைவிற்கு பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் கட்சி தலைமை பொறுப்புக்கு வந்து சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தல் சென்ற நாடாளுமன்ற தேர்தல். அதில் இந்தப் பகுதி முழுக்க திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிமுகவின் கோட்டையை திமுக சுக்கு நூறாக உடைத்தது என்பது உண்மைதான்.

 

eps


 

ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி என்பது எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அதிமுக முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மீது இந்த பகுதியில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் பாசம் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது.
 

கட்சியின் வெற்றி மட்டுமே ஒரே நோக்கம் என்று உழைக்காமல், சாதாரணமாக இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் அவர்களே தங்கள் வெற்றிக்காக உழைக்கட்டும் என ஒதுங்கி விட்டனர். இதனால்தான் இந்தப் பகுதியில் திமுக அதிகப்படியான தோல்வியை சந்தித்திருக்கிறது.


 

எடப்பாடி பழனிச்சாமி இந்த கொங்கு மண்டல பகுதியை சேர்ந்தவர் என்பதோடு அவர் மீது ஒருவகையில் இங்குள்ள திமுகவினர் இணக்கமான அணுகு முறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.
 

எடப்பாடி பழனிச்சாமி மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கட்சி என்று வந்துவிட்டால் கட்சிக்காக தானே உழைக்க வேண்டும். குறிப்பாக இந்த மண்டலத்தில் உள்ள 8 மாவட்டத்தில் நீலகிரி மாவட்டம் மட்டும் தான் திமுகவின் கோட்டையாக இப்போதும் விளங்குகிறது. மற்ற கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி இந்த 7 மாவட்டமும்  திமுகவிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதற்கு காரணம் இங்கு கட்சியை நிர்வாகம் செய்யும் முன்னணி நிர்வாகிகள் இந்த தேர்தலில் எந்தவித உழைப்பையும் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை. மா.செ.க்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், வருகிற சட்டமன்ற தேர்தல் அதில் சீட் வாங்கி வெற்றி பெற்று தி.மு.க.ஆட்சியில் அமைச்சராக வேண்டும் அதுதான் அவர்களின் ஒரே இலக்காக உள்ளது.


 

இதில் ஒரு ஆறுதலான விஷயம் ஈரோடு தெற்கு மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பாராட்டப்பட வேண்டியவர். அதற்கு  காரணம் இந்த தெற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மாவட்ட கவுன்சிலர் பதவியில் மூன்று தி மு க வுக்கு வந்துள்ளது. அதேபோல் ஐந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் 3 திமுகவுக்கு வந்துள்ளது. தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க.வை விட கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதே ஈரோடு மேற்கு மாவட்டத்தில் சொல்லும்படி எதுவுமே  இல்லை. அதே போல் தான் மற்ற பல மாவட்டங்களிலும் திமுக வெற்றி பெறாமல் நல்ல வாய்ப்பை இழந்துள்ளது. கட்சித் தலைமை இனிமேலாவது அ தி மு க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பாசம் வைத்துள்ள திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றனர். கொங்கு மண்டலத்தில் தி.மு.க.தோல்வியை ஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மை நிலை தி.மு.க. தலைமைக்கு தெரிய வரும் என்றனர். 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.