Skip to main content

உள்ளாட்சித் தேர்தலை குழப்பும் எடப்பாடி அரசு!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

 

ஒரு திடமான முடிவு எடுக்காமலும் உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமலும் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் போக்கு காட்டி வருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதில் முறையான இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை 2016 நவம்பர் 5-7 நமது நக்கீரன் இதழில் ''உள்ளாட்சி ஒதுக்கீடு இரட்டை நிலை'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். அதிலே உள்ளாட்சியில் முறையான இட ஒதிக்கீடு வரையரைகளை கடைபிடிக்கவில்லை என்பதை விரிவாகவே செய்தி வெளியிட்டோம். 

 

Opinion



அப்போது திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இப்போது வரை அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இழுத்தடித்து வந்தது. இப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்ற உத்தரவை அடுத்து, மீண்டும் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து உள்ளாட்சியில் தங்கள் கட்சிக்காரர்களை பதவியில் அமர்த்த துடியாய் துடிக்கும் முயற்சியாக செய்கிறது எடப்பாடி அரசு.
 

நடக்கப்போகும் தேர்தலில் குழப்பமோ குழப்பம் என்கிறார் கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியம் கீரனூர் செந்தில்குமார். இவர் மேலும் கூறுகையில், 'ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் ஆறு மாதம் கழித்து தேர்தல் நடத்தினால் இப்போது நடத்தப்போகும் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி பதவி காலம் முன்கூட்டியே முடியும் அப்போது மேற்படி ஒன்பது மாவட்ட உள்ளாட்சி பதவிகளில் உள்ளவர்கள் எங்களுக்கு இன்னும் ஆறு மாத  பதவிக்காலம் உள்ளது. அதை இழக்க முடியாது என்று நீதிமன்றம் செல்ல மாட்டார்களா? எனவே 38 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் நல்ல தீர்வாக அமையும். 
 

இது ஒரு பக்கம் என்றால் உச்ச நீதிமன்றம் 1995 விதி 6.ன் சட்டப்படி அனைத்து மட்டத்திலும்  தமிழக தேர்தல் ஆணையம் முறையாக சரியாக உள்ளாட்சி பதவிகளில் இட ஒதுக்கீடுகளை வரையறை முறைகளை சரியாக ஆய்வு செய்து திருத்தம் செய்து பட்டியலை வெளியிட்டு அதன் படிதேர்தல் நடத்த  பலமுறை முறைசொல்லியும் தமிழக தேர்தல் ஆணையம் உருப்படியாக எதையும் செய்யவில்லை. குளறுபடிகளை மட்டுமே செய்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

 

உதாரணத்திற்கு எங்கள் கீரனூர் ஊராட்சி சக்கரமங்கலம், கார்மாங்குடி, வல்லியம் ஆகிய நான்கு ஊராட்சிகள் சேர்ந்து ஒரு ஒன்றிய கவுன்சிலர் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதி பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி 1996 முதல் 2006 வரை தனித் தொகுதியாக (பட்டியல் இன மக்கள்) உள்ளது. அதில் பத்தாண்டுகள் பொது தொகுதியாகவும் அதன் பிறகு 10 ஆண்டுகள் தனி பெண்கள் தொகுதியாகவும் என 20 ஆண்டுகள் 2016 வரை இருந்தது. இப்போது மீண்டும் தனி பொது தொகுதியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இதை மாற்றியமைத்து திருத்தம் செய்து சுழற்சி முறையில் இதை பொதுத் தொகுதியாக மாற்றி இருக்க வேண்டும். 


இது மட்டுமல்ல ஒரு கிராம ஊராட்சியில் உள்ள இரண்டு வார்டுகளை பக்கத்தில் உள்ள ஒன்றிய கவுன்சில் தொகுதியில் மாற்றியுள்ளனர். உதாரணத்திற்கு ஓட்டிமேடு ஊராட்சி உள்ள ஒரு வார்டை சிறுவரப்பூர் ஒன்றிய கவுன்சிலர் தொகுதியுலும் இன்னொரு வார்டை கம்மாபுரம் ஒன்றிய கவுன்சிலர் தொகுதியிலும் என ஒரு ஊராட்சியை இரண்டாக கூறுபோட்டு பிரித்து வைத்துள்ளனர்.



அதேபோல் நல்லூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் உள்ளது. குடிக்காடு இது தனி வார்டு. இதை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கு மட்டும் தொளார் ஒன்றிய கவுன்சிலர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எப்படி மாறி மாறி வாக்களிப்பார்கள். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் திட்ட பணிகளை எந்த அடிப்படையில் செய்வது. இப்படி ஏகப்பட்ட குழப்படிகள் தமிழகம் முழுவதும் செய்துள்ளது எடப்பாடி அரசு. இப்படிப்பட்ட குறைகளை எல்லாம் நீக்கி விட்டு தேர்தல் நடத்தினால்தான் அது முறையான தேர்தலாக இருக்கும். இதை சுட்டி காட்டி தான் திமுக தலைவர் நீதிமன்றம் செல்ல வைத்தார் அவரை குறை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி' என்கிறார். 
 

திமுக பிரமுகர் செந்தில்குமார், சக்கரமங்கலம் வீர வன்னியன் என்ற இளைஞர் கூறும்போது, பல ஊராட்சி தலைவர் பதவிகள் 20 ஆண்டுகளாகவே மாற்றப்படவில்லை. கார்மாங்குடி, பவழங்குடி ஆகிய ஊர்களில் பழங்குடியின மக்கள் (எஸ்டி) வாழ்கிறார்கள். இவர்களுக்கு தலைவர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒரு வார்டு உறுப்பினர் பதவி கூட ஒதுக்கப்படவில்லை. இதுமட்டுமா? தேர்தல் நடைபெறாத புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது சங்கராபுரம் ஒன்றியம். இதிலுள்ள சோழம்பட்டு ஒன்றிய கவுன்சிலர் தொகுதி 20 ஆண்டுகளாக பட்டியலின தனி தொகுதியாகவே உள்ளது. அதேபோல் நெடுமானூர் ஒன்றிய கவுன்சிலர் தொகுதி 20 ஆண்டுகளாக பொதுத் தொகுதியாக உள்ளது. இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டாமா? 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி விட்டு மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு அடுத்துதேர்தல் நடத்தினால் நடந்து முடிந்த தேர்தலின் தாக்கம் அதில் பிரதிபலிக்கும்.
 

மேலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகாரர்கள் பல மாவட்டங்களிலிருந்து சென்று அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் பணம் என கொடுத்து வெற்றி பெறுவது போல் 9 மாவட்ட மற்றும் நகர்ப்புற தேர்தலில் தங்கள் வித்தையை காட்டி வெற்றி பெறவே இதுபோன்ற குளறுபடிகளை தேர்தல் ஆணையம் அரசின் துணையோடுசெய்து வருகிறது என்கிறார் இளைஞர் வீர வன்னியன்.
 

நாட்டுக்கு மூன்று அரசுகள் இருக்கவேண்டும். ஒன்று பஞ்சாயத்து அரசு, இரண்டு மாநில அரசு, 3 மத்திய அரசு. அரசியல் சட்டத்தின் கோட்பாடு என்னவென்றால் முதல் அரசை தங்கள் பிரதிநிதிகளை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள். மற்ற இரண்டு அரசுகளும் மக்களின் பிரதிநிதிகளை கொண்டு ஆட்சி செய்கிறார்கள். மேற்படி இரண்டு அரசுகளும் சேர்ந்து, மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முதல் அரசை நசுக்கும் வேலையை செய்து வருகிறது. இந்த புரிதல் ஆட்சியாளர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே முறையான வரைவுகள் ஒதுக்கீடுகள் செய்யப்படாமல் தேர்தல் நடத்தினால் பலர் மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளை தட்டி கொண்டு தான் இருப்பார்கள். நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்தின் தலையில் குட்டிக் கொண்டே தான்இருக்கும். இதுதான் நடக்கப் போகிறது என்கிறார்கள் மக்கள்.
 

 

 

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே!'-மோடி அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம்  தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?

தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.