Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்! அதிமுகவின் அதிரடி வியூகம்? சமாளிக்குமா திமுக?

Published on 07/11/2019 | Edited on 02/12/2019

 

அதிமுகவின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் நவ.6ஆம் தேதி புதன்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8.15 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

 

ops-eps


 

உள்ளாட்சித் தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டபோது, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் கடுமையாக பாடுபட்டீர்கள். அதற்கு நன்றி தெரிவிக்கிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் இருக்க வேண்டாம். அந்த இரண்டு தொகுதியிலும் எப்படி வேலை செய்தோமோ அதே உற்சாகத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் வேலை செய்ய வேண்டும். நாளையில் இருந்தே அதற்கான பணிகளை தொடங்குங்கள் என்றனர் தலைமைக் கழக நிர்வாகிகள்.


 

சென்னை மாநகராட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள தேர்தல் பணியினை மும்முரமாக செய்ய வேண்டும் என்றும், திமுகவுக்கு நிகராக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் தலைமை விரும்புகிறது. ஆகையால் இதில் கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள். 


 

 

தொடர்ந்து பேசிய நிர்வாகிகள் சிலர், கூட்டணிக்கு எந்தெந்த இடங்களை ஒதுக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள், ''அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர்களை சமாதானம் செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு. இப்போதைக்கு மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பகுதியில் எந்தெந்த பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று பட்டியல் தயார் செய்து தலைமைக்கு அனுப்புங்கள். அதனை கட்சி தலைமை பரிசீலித்து உங்களிடமும் ஆலோசனை நடத்தி வேட்பாளரை தேர்வு செய்வோம்'' என்று மாவட்டச் செயலாளர்களை அனுப்பி வைத்தனர். 
 

கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளை அனுப்பிவிட்டு, கட்சியின் சீனியர்கள் மட்டும் வைத்துக்கொண்டு பின்னர் ஆலோசனையில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆலோசனையில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் அதிமுக வெற்றி வாய்ப்புக்கு இரண்டு யோசனையை தெரிவித்திருக்கிறார்கள். அது என்னவென்றால், உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டாம். இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு கட்டங்களாக நடத்தலாம் என்பதுதான் அது. அப்படி நடத்தினால்தான் சுலபமாக திமுகவை தோற்கடிக்க முடியும். அதிமுக வெற்றி பெற இதுவே வழி என்று கூறினாராம்.


 

 

மேலும் இன்னொன்று, மேயர் பதவி மற்றும் நகராட்சி தலைவர் பதவியை தற்போது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை மாற்றி மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்க வைக்கலாம். இந்த முறையை கொண்டு வந்தால் நமக்குத்தான் நல்லது. அதிமுக அதிக இடங்களை பிடிக்காவிட்டாலும், சுயேட்சை வேட்பாளர்கள் உதவியோடு மேயர் பதவி மற்றும் நகராட்சி தலைவர் பதவியை நாம் கைப்பற்றலாம் என்று கூறினாராம்.
 

இதற்கு கட்சியின் சீனியர்கள் பலர் சம்மதம் தெரிவித்திருக்கின்னர். இதே விசயத்தை அடுத்த நாள் நவ.7ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சீனியர் அமைச்சர்களிடம் விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு அமைச்சர்களும் இந்த முறையை நடைமுறைப்படுத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ளனராம். 
 

dmk


 

அதிமுகவின் இந்த வியூகம் குறித்து திமுகவுக்கு எட்டியிருக்கிறது. அதிமுகவின் இந்த வியூகத்தை முறியடிப்பது குறித்து வரும் 11ம் தேதி நடக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.