Skip to main content

1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! நக்கீரனுக்கு நன்றி!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Land recovery worth 1000 crores

நக்கீரனில், 2022 செப்டம்பர் இதழில், 'வசமாய் மாட்டிக்கொண்ட மதுரை திருச்சபை' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். 1912ல் ஆங்கிலேய அரசு, அமெரிக்கன் போர்ட் மிஷினரிக்கு, ஆதரவற்ற குழந்தைகள் கல்விக்கூடமும், அவர்கள் தங்கும் விடுதியும் நடத்தக் கொடுத்திருந்தது. அதற்கான பராமரிப்புச் செலவுக்காக 31 ஏக்கரில் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்தது. இவை அனைத்தும் மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பில் இருக்கவேண்டுமென்றும், பள்ளியையும், விடுதியையும் நடத்தமுடியவில்லை என்றால் அதை மீண்டும் அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட்டுப் போகும்போது முறைப்படி இதை ஒப்படைக்காமல், தென்னிந்திய திருச்சபை 2005ல் அந்த இடத்தின் ஒரு பகுதியை கொல்கத்தாவை சேர்ந்த சிலருக்கு விற்றுவிட்டனர். அதில் தற்போது 'லோட்டஸ் அப்பார்ட்மெண்ட்' என்று மதுரையிலேயே மிகப்பெரிய அப்பார்ட்மெண்டை கட்டியுள்ளனர். மீதி இடத்தில் ரோட்டின்மேல் 200 கடைகளைக் கட்டியவர்கள், அந்த இடத்தில் 60 ஆண்டுகளாக ஓட்டு வீடுகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்போது அந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்க, நாம் இரு தரப்பினரையும் சந்தித்து செய்தியாக நக்கீரனில் கொண்டுவந்தோம்.

அதனைத் தொடர்ந்து, 2023 அக்டோபரில், அந்த திருச்சபையினரின் இடங்களில் இருந்த மக்கள், முறையான ஆவணங்களின் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் கொடுத்த ஆவணங்களின்படி தமிழ்நாடு நிலநிர்ணய ஆணையம் முறையாக விசாரணை செய்து, அந்த நிலத்தை அரசுக்கு திரும்ப ஒப்படைக்க ஆணை பிறப்பித்தது. அந்த உத்தரவை கடைபிடிக்காமல் காலம்கடத்துவதாக கிருஸ்தவ சீர்திருத்த மக்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட, நம் நக்கீரனில் '1000 கோடி நிலம் ஆக்கிரமிப்பு! சட்டச்சிக்கலில் தென்னிந்திய திருச்சபை!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியின் தொடர்ச்சியாக தற்போது சென்னை உயர் நீதிமன்றம், அரசாங்க இடம் நிபந்தனைகளை மீறி விற்பனை செய்யப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. அதன்படி, அரசு நிலமான 31 ஏக்கர் இடத்தை அரசு கையகப்படுத்தலாம் என்று உத்தரவு போட்டுள்ளது. அந்த உத்தரவின்படி வணிக வளாகம் மற்றும் லோட்டஸ் அடுக்குமாடிக் கட்டடத்தின் முன், "உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி விசாரணை செய்யப்பட்டு, நில நிர்வாக ஆணையரின் செயல் முறை ஆணை 11-1-2024ன் படி, நில ஒப்படைப்பானது ரத்து செய்யப்பட்டு, அரசால் அந்த நிலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தில் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற எச்சரிக்கை அறிவிப்புப் பதாகை அரசு சார்பில் வைக்கப்பட்டிருப்பது தென்னிந்திய திருச்சபையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 14 மாடி அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கியவர்கள் திருச்சபையின் பேராயரைப் போய் பார்க்க, அவரோ, "இதெல்லாம் எனக்கு முன்னால் இருந்த பெர்னாண்டஸ் இரத்தினராஜா காலத்தில் நடந்தவை. நீங்கள் மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள். லோட்டஸ் நிறுவனத்திடம் முறையிடுங்கள்'' எனக்கூறி அனுப்பிவைக்க, இது தென்னிந்திய திருச்சபைக்குள் இருக்கும் பொறுப்பாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கிருஸ்தவ சீர்திருத்த சங்கத்தின் தலைவர் தேவசகாயம் நம்மிடம், "ஆங்கிலேயர் மதுரை கிருஸ்தவ திருச்சபைக்கு ஏழை விதவைப் பெண்கள், மற்றும் ஏழை எளிய பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, அரசு நிபந்தனைகளின் பேரில் வழங்கிய 31 ஏக்கர் அரசு நிலத்தை, ஏழை எளிய பெண்களின் வயிற்றிலடித்து, சி.பெர்னாண்டஸ் ரெத்தினராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள், போலிப் பத்திரங்களைத் தயார் செய்து விற்பனை செய்து, ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து, பணத்தை அபகரித்து அள்ளிச்சென்றதும் பத்தாமல், அங்கு குடியிருந்த ஏழை மக்களின் குடிசையையும் காலி பண்ணத் திட்டம் செய்ததும் தான் எனக்கும் எங்கள் சங்கத்திற்கும் வருத்தமாக இருந்தது. அதனால்தான் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தோம். இந்த உத்தரவின்படி, அந்த 31 ஏக்கர் நிலத்தை, அரசாங்கமே மீள எடுத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, சி.பெர்னாண்டஸ் ரெத்தினராஜா மற்றும் அவரின் கூட்டாளிகளின் மீது, கிரிமினல் வழக்கு தொடுத்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து சிறையில் தள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உண்மையின் பக்கம் நின்ற நக்கீரனுக்கு இந்த ஏழை மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

நக்கீரன் என்றைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே ஒலிக்கும்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.