Skip to main content

அனலை கிளப்பும் ஊட்டி பாலிடிக்ஸ்! பின்வாங்கிய எல்.முருகன்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
L. Murugan who withdrew from ooty and nominated from Madya Pradesh

தொகுதிக்குள் வீடு, இரண்டு வருடங்களாக சுணக்கமில்லாத தேர்தல் வேலை என ஜரூராக வலம் வந்த நிலையில், நீலகிரி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை விட்டு ராஜ்யசபா எம்.பி. ஆகியிருக்கின்றார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன். அதன் பின்னணியை அலசினால் ஊட்டி குளிரைத் தாண்டி அனலடிக்கின்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுடன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவிநாசி மற்றும் ஈரோடு மாவட்டத்தினைச் சேர்ந்த பவானிசாகர் சேர்ந்து மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி நாடாளுமன்றம். இதில் கூடலூர் மற்றும் பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தனித் தொகுதிகள். பொதுவாக மேற்கு மண்டலங்களில் அ.தி.மு.க. செல்வாக்குமிக்க கட்சியாக கட்டமைத்திருந்தாலும், மலைப் பகுதிகளான ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செல்வாக்கு மிக்கவையாகவும், சமவெளிப் பகுதிகளில் உள்ள மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் செல்வாக்கு மிக்கவையாகவும் திகழ்கின்றன.

L. Murugan who withdrew from ooty and nominated from Madya Pradesh

“தாராபுரம் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராஜ்யசபா எம்.பி.யாகி மத்திய இணை அமைச்சர் ஆனதிலிருந்தே தனித் தொகுதியான நீலகிரி தொகுதி மீது எல்.முருகனுக்கு ஒரு கண் இருந்து வந்தது. இந்த முறை நீலகிரி தொகுதியில் சீட் வாங்க வேண்டும் என்பதற்காக, ஈராண்டிற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் வேலைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவங்கிவிட்டார். மத்திய அரசின் பல திட்டங்களை கூடலூர், மேட்டுப்பாளையம், காரமடை, உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் துவக்கி வைத்து, தனது இருப்பை காட்டிக்கொண்டார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம்தான் பா.ஜ.க. வேட்பாளர் என அவர் தொகுதிக்குள் வீடுகள் எடுத்து தேர்தல் வேலையை பார்க்கலானார். வேறு எந்த வேலைக்கு தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றாலும் நீலகிரிக்கு கட்டாயம் வந்துவிடுவார். கல்யாணம், விருந்து, துக்க வீடுகளில் அவ்வப்போது தலையைக் காட்டி, தான் தொகுதிக்காரன் என்ற நினைவை மக்களிடம் பதியவைத்தார். 

அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியும் நீலகிரியை பெற்று, அதில் களம் இறங்கத் திட்டமிட்டு காய்நகர்த்தி வந்தார் எல்.முருகன். இதை உறுதிப்படுத்திடும் வகையில், அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்தார். அதுபோல், 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் இருமுறை பா.ஜ.க. சார்பில் மாஸ்டர் மதனின் வெற்றி, அ.தி.மு.க.வுடனான கூட்டணி ஆகிய கணக்கீட்டில் எளிதாக வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். தனக்கு போட்டி, தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா என்றே களத்தினை எதிர்கொண்டார். இருப்பினும், இன்று அவர் ம.பி.யில் ராஜ்யசபா சீட்டை உறுதிப்படுத்திக் கொண்டார். இனி இங்கு அவர் போட்டியிடும் சூழல் இல்லை என்பதே உண்மை” என்கின்றார் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவணக்குமார்.

L. Murugan who withdrew from ooty and nominated from Madya Pradesh

தொகுதியில் படுகர்கள், பழங்குடியினர்கள், பட்டியலின சமூகத்தினர்கள், கவுண்டர்கள் மற்றும் ஒக்கலிகர்கள் உள்ளிட்டோர் கணிசமான எண்ணிக்கையில் இருப்பினும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைப்பகுதி சட்டமன்றத் தொகுதிகளில் தமிழர்கள், படுகர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களாக மாறுபடுகின்றனர். இதேவேளையில், சமவெளிப்பகுதி சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின சமூகத்தினர்கள் மற்றும் கவுண்டர்கள் வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றனர்.

மாங்கோடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான ராஜாவோ, “இங்கு தி.மு.க.விற்கு யாரும் போட்டியில்லை. நீலகிரி தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்பதாலேயே எல். முருகன் விலகினார் என்றே கூறலாம். நீலகிரி மாவட்டத்தில் பெரு மழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பேரிடர் பாதிப்புகளை பார்வையிட்ட ராசா, சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டார். இந்த முறையும் நீலகிரியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசாதான் களம் இறங்குவார். அதுபோல் டான் டீ தேயிலைத் தொழிலாளர்கள் விவகாரத்தில் நேரடியாக நின்று தொழிலாளர்களைக் காத்தவர். வெற்றி எளிதானது. அதே வேளையில் பா.ஜ.க.விற்கு என தனிப்பட்ட செல்வாக்கு இங்கு இல்லை” என்றார் அவர்.

L. Murugan who withdrew from ooty and nominated from Madya Pradesh

இது இப்படியிருக்க, வியாழனன்று நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான பா.ஜ.க. பிரதிநிதிகள் மாநாடு ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளரான நந்தகுமார், “ஆ.ராசாவிற்கு எதிராக செல்வாக்குமிக்க வேட்பாளரை கட்சி அறிவிக்கும், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்” என்றார் அவர். இதே வேளையில் ஆ.ராசாவை எதிர்க்க அனைவரும் ஒதுங்கிய நிலையில், “எனக்கு சீட் கொடுங்கள். நான் வெற்றி பெறுவேன்” என சீட் வேண்டி டெல்லிக்கு பறந்திருக்கின்றார் வழக்கறிஞரான சௌந்திரபாண்டியன்.

மாவட்ட உளவு அதிகாரி ஒருவரோ, “மேட்டுப்பாளையம், பவானிசாகரில் அ.தி.மு.க. ஓட்டு கை கொடுக்கும் என மலைபோல் நம்பியிருந்தார் முருகன். ஆனால், கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்கவில்லை. இதனால், தோல்வி நிச்சயம் என்பதை கணித்த எல்.முருகன், கோவையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் உதவியுடன் சைலண்டாக சர்வே ஒன்றை எடுத்தார். அதிலும் தேறமாட்டோம் என்பது தெரியவர வேறு வழியில்லாமல் தன்னுடைய டெல்லி லாபி மூலம் ராஜ்ய சபா சீட்டை வாங்கி தன்னைக் காத்துக்கொண்டார்” என எல்.முருகன் பின்வாங்கிய பின்னணியை எடுத்துரைத்தார்.

தேர்தலுக்கு முன்னரே நீலகிரி தி.மு.க. வசமாகியுள்ளது. என்ன செய்யப்போகின்றது பா.ஜ.க?

-நா.ஆதித்யா
படங்கள்: விவேக்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Strong room CCTV camera malfunction; Sensation in Erode

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இதனையடுத்து வாக்கு இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி செயலிழந்தது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், நீலகிரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, “ வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (27.04.2024) மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டன. அந்தக் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை.

அதாவது அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு சிசிடிவி கேமராவில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. மேலும் இது குறித்து சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 3 கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாட்டுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் இதுபோல் எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Strong room CCTV camera malfunction; Sensation in Erode

இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிர்ஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.