Skip to main content

"பொள்ளாச்சியிலிருந்து ஒருவர் வந்தார், வந்தவுடனேயே..." -மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கான வேலை, விருப்பமனு, நேர்காணல், இறுதிப் பட்டியல் என மும்முரமாக இருக்கும் வேளையில் நேற்று மாலை கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பொறுப்பாளர் குமரவேல் கட்சியிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டி. 

 

kumaravel


கட்சியில் இணையும்போது என்ன எதிர்பார்த்து இணைந்தீர்கள்?

தமிழ்நாடு இரண்டு கட்சிகளிடம் மாட்டி முழித்துக்கொண்டிருந்தது. ஒரு வெற்றிடம் இருந்தது. தமிழ்நாடு புது அரசியலுக்கும், இளைஞர்கள் மாற்று அரசியலுக்கும் விரும்பினோம். 1980களில் யாராவது லஞ்சம் வாங்கினவர்கள் என்று தெரிந்தாலே, அவர்கள் தலை குனிந்து செல்வார்கள். 2019ல் யாராவது லஞ்சம் வாங்கவில்லையென்றால் அவர்களை வீட்டில் சேர்க்க மாட்டார்கள். இந்த மாதிரியான நிலைக்கு நாம் ஆளாகிவிட்டோம். நமக்கே தெரியாமல் நாம் அனைவரும் கரெப்ட் ஆகிவிட்டோம். இதில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அது மாறவேண்டுமென்றால் மாற்று அரசியல் வேண்டும். யார் அந்தப் பூனைக்கு மணி கட்டுவார்கள் என்று பார்க்கும்போதுதான் கமல் சார் வரேன்னு சொன்னாரு. இத்தனை நாட்களாக நடிகராக பார்த்தவர், சமூக அடையாளமாக வந்தது, அவரின் பேட்டிகள், கட்டுரைகள் இதையெல்லாம் பார்த்தது, ஜெயலலிதா இருக்கும்போது எல்லாரும் பயந்துகொண்டிருந்தபோது சமூக ஊடகத்திலும், மற்றவையிலும் பேசினார். இவையெல்லாம் பிடித்திருந்தது. அவர் வரும்போது, அவர் தலைமையிலான மாற்று அரசியல் வரும் என எதிர்பார்த்து சேர்ந்தேன்.

 

கட்சிக்குள் புதியவர்கள் வந்தவுடன் கட்சியின் பாதை மாறிவிட்டது எனக் கூறியிருந்தீர்கள், யார் வந்தவுடன் அதை நீங்கள் உணர்ந்தீர்கள்..
 

டாக்டர் மகேந்திரன் பொள்ளாச்சியிலிருந்து வந்தார். வந்த முதல் நாளிலேயே துணைத் தலைவர் ஆகிவிட்டார், எனக்கு தெரிந்து அவர் இன்னும் இந்திய துணைத்தலைவர்தான் ஆகவில்லை. எனக்கு தெரிந்து யாரும் இப்படி ஆனதில்லை, இப்படியொரு கட்சியில். அதற்குமுன் பத்து மாதமாக படிப்படியாக கட்சியை வளர்த்து, ஒரே நாளில் இவர் வந்து இழுத்துக்கொண்டு சென்றால் எப்படி இருக்கும். அதேபோல்தான் கோவை சரளாவும், எட்டு நாளைக்கு முன்வந்து, நேர்காணலில் உட்காந்திருக்கிறார்.

 

அதற்கு என்ன காரணம்...
 

அவர் புதுமை விரும்பியாய் இருப்பார். புது ஆள், புது ஐடியா அது சில இடங்களில் அது நல்லதாகக்கூட இருக்கும். புது ஐடியா தேடும்போது அது நல்லதாக இருக்கும், புது ஆள் தேடும்போது, பழைய ஆட்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு போகவேண்டும். அது முடியவில்லையென்றால் இதுபோல் நடக்கும்.
 

ஒரு வருடம், இரண்டு மாதம் கட்சியில் இருக்கும் என்னிடம் கமல் சார் நம்பர்கூட இல்லை என கூறியிருந்தீர்கள். யார் தடுக்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
 

மரியாதை என்பது கேட்டு பெறுவதில்லை, அவர்களாகவே கொடுக்க வேண்டும். அவருக்கே தெரியும் பாதி பேரிடம்தான் இருக்கிறது, பாதி பேரிடம் இல்லையென்று. அவருக்கு வேண்டும் என்பவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். எங்களை ஒரு நாள் கூட ஃபோனில் தொடர்பு கொண்டதில்லை.

 

kumaravel

கட்சியில் இணையும்போது என்ன சொன்னார், இப்போது வெளியில் செல்கிறேன் என்றபோது என்ன சொன்னார்.
 

கட்சியைவிட்டு வெளியேறுகிறேன் எனக் கூறியபோது அவர் கூப்பிட்டுக்கூட பேசவில்லை. பொதுச்செயலாளர்தான் பேசினார். நீங்கள் போகக்கூடாது, நீங்கள் நல்லவர் என்றார்கள். நான் கட்சியை விட்டு செல்ல எனக்கு ஒரு சரியான காரணம் உள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கோ, கமல்ஹாசனுக்கோ நான் விசுவாசி கிடையாது, அவருடைய நேர்மை, அவருடைய குறிக்கோளுக்குதான் நான் விசுவாசி. அந்த குறிக்கோளே சென்றடையாதபோது, அதைவிட்டு வேறு பாதைக்கு செல்லும்போது, நான் அதைவிட்டு விலக வேண்டிய கட்டாயம் வருகிறது.
 

கட்சியில் சேரும்போது, அப்போது கட்சியும் புதிது, கட்சியில் சேருபவர்களும் புதிது, அவரும் புதிது. கட்சியில் யார் வந்தாலும் சேர்த்துக்கொண்டார்கள், அவர்களை நன்றாகதான் நடத்தினார்கள். கட்சி குறித்து எல்லோரும் இணைந்து பேசுவோம். எங்கள் யாருக்கும் அரசியல் பின்புலம் கிடையாது. அதனால் அவர்களுக்கு புரிந்தவகையில் நடந்தோம். அதற்குபின் மாறிவிட்டது.

 

நேர்காணலுக்கு சென்றேன் எனக்கூறியிருந்தீர்கள், அங்கு உங்களுக்கு அந்நியமாக பட்டது எது.
 

கோவை சரளா இருந்தது மட்டும்தான் அந்நியமாக இருந்தது. வேறு இருவரும் உட்கார்ந்திருந்தார்கள், அவர்கள் இருவரும் வல்லுநர்கள், மதன் சாரும், ராவ் சாரும் உட்கார்ந்திருந்தது ரொம்ப நல்லதாகவே தெரிந்தது. இவுங்க உட்கார்ந்திருந்ததுதான் ‘என்னடா இவுங்க இங்கே’ என்று இருந்தது.

 

சினிமாவிலும், அரசியலிலும் ஒரே நேரத்தில் பயணிக்கிறார் என்று கூறியிருந்தீர்கள். அது எந்த விதத்தில் குறையாக இருந்தது.
 

முக்கியமான நேரத்தில் அரசியலா, சூட்டிங்கா என வரும்போது அவர் சூட்டிங்கைத்தானே கவனிப்பார். அது பிக்பாஸாக இருக்கலாம், விஸ்வரூபமாக இருக்கலாம். இந்தியன் படம் இப்போது தள்ளிப்போய்விட்டது. இல்லையென்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா எனத் தெரியவில்லை.

 

கட்சிதான் எனக்கு முக்கியம் எனக் கூறுகிறாரே கமல்.
 

கண்டிப்பாக அவர் கட்சிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது போதாது. மக்கள் நீதி மய்யம் ஒரு சின்னக் குழந்தை அதை பதினெட்டு மணிநேரம் பார்த்துக்கொள்ளக்கூடாது, 24 மணிநேரமும் பார்த்துக்கொள்ள வேண்டும். நடந்து, ஓட ஆரம்பித்தவுடன் அதன்பின் ஆறு மணிநேரம் மட்டும் கூட பார்த்துக்கொள்ளலாம்.

 

 

 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.