Skip to main content

அதிமுக கூட்டணிக்கு ஆசைப்படுகிறாரா கே.எஸ்.அழகிரி? சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

   

KS Alagiri wants AIADMK alliance? Congress to raise doubts

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தில் (மே-21) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வருடாந்திர வழக்கம். தற்போது, கரோனா நெருக்கடி இருப்பதால் ராஜீவ் நினைவிடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வார்களா? அஞ்சலி செலுத்த அனுமதி கிடைக்குமா? என்கிற சந்தேகத்துடனேயே இருந்தனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

இந்த நிலையில் இன்று (மே-21) தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களான காங்கிரஸ் எம்.பிக்கள் டாக்டர் விஷ்ணுபிரசாத், டாக்டர் ஜெயக்குமார், வசந்தகுமார் உள்ளிட்டோர் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினர். இதற்காக கே.எஸ்.அழகிரி வாங்கிய அனுமதிதான் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கோபத்தை கிளற வைத்துக் கொண்டிருக்கிறது.

இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ‘’ கரோனா சூழலை விவரித்து அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை தமிழக அரசின் காவல்துறை மறுத்துவிட்டது. அனுமதிக் கேட்டு காங்கிரஸ் தரப்பில் எவ்வளவோ கெஞ்சியும் 21ந்தேதி காலை வரை போலீசார் அனுமதி தரவில்லை. அனுமதி தரப்படவில்லை என்ற தகவலை அறிந்த கே.எஸ்.அழகிரி, உடனடியாக, முதல்வர் எடப்பாடியை தொடர்புகொண்டு பேச, அடுத்த அரை மணி நேரத்தில் அனுமதி கிடைக்கிறது. அந்த அனுமதியை வைத்துக்கொண்டே அஞ்சலி செலுத்தினார் கே.எஸ்.அழகிரி.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி தர மறுத்த தமிழக அரசை கண்டித்து ராஜீவ் நினைவிடத்திலேயே அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்  திடீர் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். போராடுவதன் மூலம் தான் தமிழக அரசின் எதேச்சதிகாரத்தை அம்பலப்படுத்த முடியும். திமுக கூட்டணியில் நாம் இருக்கும் போது அதிமுக அரசின் தயவை நாம் எதிர்பார்க்கக்கூடாது. எடப்பாடி அரசினுடனான நட்பும் நமக்கு தேவைமில்லை. எடப்பாடி அரசை எதிர்ப்பதன் மூலம்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும். டெல்லியில் ராஜிவ் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கும் நிலையில், தமிழகத்தில்  அதற்கு அனுமதி மறுக்கும் எடப்பாடியை கண்டித்து போர்க்குரல் உயர்த்தியிருந்தால் இந்த விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்திருக்கும்.

இப்படிப்பட்ட அரசியலை செய்யத் தவறும் கே.எஸ்.அழகிரி, எடப்பாடியிடம் பேசி அனுமதி பெற்றது ஏற்புடையதல்ல ! அரை மணி நேரத்தில் எடப்படியிடமிருந்து அழகிரி அனுமதி பெற முடிவதால் எடப்பாடிக்கும் அழகிரிக்குமிடையே உள்ள அரசியல் என்ன ? திமுக கூட்டணியிலிருந்து விலகி எதிர்காலத்தில் அதிமுக கூட்டணியை கையிலெடுக்க இப்போதே எடப்பாடியுடன் நட்பை வளர்த்துக்கொள்கிறாரா ? அதற்காகத்தான் எடப்பாடிக்கு எதிராக போராட்ட குரலை உயர்த்தாமல் சமரச அரசியல் செய்கிறாரா ? அழகிரியின் இத்தகைய எடப்பாடி மீதான பாசத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றன ‘’ என்கிறார்கள்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.