Skip to main content

ஜெயலலிதாவிடம் வாய் பொத்தி கைக்கட்டி நின்ற சீமான் தற்போது பேசுவது ஏன்..? - கே.எஸ் அழகிரி கேள்வி!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

d


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொடர்பாக சில கருத்துக்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறிய நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் கொதித்தனர். பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு... 

 

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், அதை சரி செய்யும் பொருட்டு அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து  ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைவர் இல்லை என்று தொடர்ந்து பொதுவெளியில்  சிலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்? தற்போது, சோனியா காந்தி தலைமை பொறுப்பை தொடர்வதாக தெரிவித்துள்ளார். இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? 

 

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை தான் தொடர்ந்து ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தி அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அதைப்பற்றி நாம் பேச வேண்டிய தேவை இல்லை. தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற கேள்விகளே இங்கு எழவில்லை. அவர் தலைமையில் காங்கிரஸ் மிகச் சிறப்பாக செயல்படும் என்பது மட்டும் நிச்சயம். எனவே தேவையில்லாத விவாதங்களை எழுப்புபவர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும். சோனியா, ராகுலை தவிர வேறு யாராவது கட்சி பொறுப்பில் இருந்தால் அவர்கள் நிரந்தர தலைவரா அல்லது தற்காலிக தலைவரா என்று கேள்வி எழுப்பலாம். இன்றைக்கு கோடான கோடி காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த தலைவராக அவர் இருக்கிறார், எனவே காங்கிரஸ் கட்சி என்றால் அவர்தான், அவரின் விருப்பத்துக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம். 

 

கடந்த தேர்தலில் இந்தியா முழுவதும் ராகுல் தீவிர பிரச்சாரம் செய்தார், காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவர் தகுதியானவர் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. உ.பி விவசாயிகள் பிரச்சனையில் பிரியங்கா காந்தி காட்டிய உறுதியை பல்வேறு கட்சியினரும் பாராட்டினார்கள். ராகுல், பிரியங்கா போன்ற இளம் தலைமுறையினர் இருக்கையில் மீண்டும் சோனியா காந்தி தலைமை என்பதை, இளையவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு கருத்து கூறப்படுகிறதே? 

 

உங்களுக்கு பஞ்ச தந்திர கதை தெரிந்திருக்கும். ஒரு முதியவர் ஒருவர் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாட்டுவண்டியை நடந்தபடியே அழைத்து செல்லுவார். அப்போது  சாலையில் நடந்து செல்பவர்கள் சிலர் வயதான காலத்தில் அவராவது வண்டியில் அமர்ந்து கொண்டு செல்லலாம் என்று கூறுவார்கள், அவர் அப்படி அமர்ந்து சென்றால், சிலர் குழந்தைகள் நடந்து வரும் போது இவர் வண்டியில் அமர்ந்து செல்கிறாரே என்று குறை கூறுவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்பதை வேறு ஒருவர் முடிவு செய்ய முடியாது. எங்களுக்கு தலைவர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் அடுத்தவர்கள் கருத்து தெரிவிப்பது என்பது ஆச்சரியமாக கூட இருக்கிறது. 

 

இன்றைக்கு பலர் எங்களை குறை கூறுகிறார்கள். ஆனால் யாரும் உண்மையாக நியாயத்தின் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. இலங்கை விவகாரத்தில் கூட இன்றைக்கு எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற சீமான் போன்றவர்கள், ஜெயலலிதா போர் என்று வந்தால் சிலர் சாகத்தான் செய்வார்கள், அதை எப்படி கொலை என்று கூறுவீர்கள் என்றார். அவரை எதிர்த்து இவர் வாய் திறக்கவில்லை, கைக்கட்டி வாய்பொத்தி மவுனமாக இருந்தார். தற்போது துடிதுடித்து பேசுகிறார். சீமான் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று ஏன் கூறுகிறோம் என்றால் பொருள் இல்லாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது, குறிப்பாக வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுவது என இருப்பவர்களை வேறு என்ன செய்ய சொல்ல முடியும். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவதூறாக பேசுவதை இந்திய அரசியல் அமைப்பு சட்டமே அனுமதிக்கவில்லையே, அதனால் தான் அப்படி கூறினோம்.

 

பல்வேறு வழக்குகளில் சிக்கி இருக்கும் ஹெச்.ராஜா போன்றவர்களே வெளியில் இருக்கும் போது, எதற்காக துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்புகிறாரே?

 

தகாத கருத்துக்களை யார் பேசினாலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். அப்படி என்றால் நாங்களும் ஹெச்.ராஜா போல அவதூறாக பேசுவோம், நீங்களே கேட்கக்கூடாது என்கிறாரா? அவதூறு கருத்து தெரிவிக்கும் ஹெச்.ராஜா போன்றவர்களையும் தான் நாங்கள் கைது செய்ய சொல்கிறோம். எனவே தவறாக பேசுபவர்கள் அனைவருக்கும் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்துதான் வருகிறோம். எனவே ஆளாளுக்கு ஒன்று என மாற்றி பேசும் பழக்கம் எங்களுக்கு இல்லை. கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

 

 

Next Story

‘அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும்’ - விஜய் அரசியல் வருகை குறித்து கே.எஸ். அழகிரி

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. மேலும் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம், ‘பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது’ என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார்.

இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அதே சமயம் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறையில் செல்வாக்கு மிக்கவராக கலைப்பணி ஆற்றும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ச்சை பேச்சு; கே.எஸ். அழகிரி கண்டனம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களையே கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை கூறிய இவரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடி வரலாறு படைத்த மகாத்மா காந்தி 1915 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்த போது, அவரது தலைமையை நாடு ஏற்றுக் கொண்டது. அவரது வழிகாட்டுதலின்படி அகிம்சை வழியில் சத்தியத்தை கடைபிடித்து ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களை திரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது.

Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938 இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள். அதேபோல, 1939 இல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரிட்டீசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது. அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரைவேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். 

150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர். சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாற்றை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.