Skip to main content

பொற்பனைக்கோட்டையில் கொத்தளம் அமைப்பு; அரண்மனையிலும் கோட்டையிலும் ஒரே மாதிரியான செங்கல்!

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Kothalam structure at Porpanaikottai

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக் கோட்டைகளில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. வட்டக் கோட்டை எப்படி சிறப்பு மிக்கதாக உள்ளதே அதே போல கோட்டையின் நுழைவாயில்களில் உள்ள பொற்பனைமுனீஸ்வரன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் வழிபாடுகளும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பெற்றது.

 

பொற்பனைக்கோட்டையில் இன்றும் அழிவில்லாத சங்ககால கோட்டையின் நடுவில் உள்ள அரண்மனைத்திடலில் தமிழ்நாடு அரசு அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையில் ஆய்வு மாணவர்கள் முன்னிலையில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அகழாய்வில் கருப்பு, சிவப்பு, பானை ஓடுகள், வட்டசில்கள், தங்க மூக்குத்தி, விளையாட்டு பொருட்கள், பாசி மணிகள் என ஏராளமான பொருட்கள் கிடைக்கப்பெற்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

 

Kothalam structure at Porpanaikottai

 

அரண்மனைத் திடலில் சுடு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டு வட்ட வடிவ கட்டுமானம், தண்ணீர் வெளியேறும் கட்டுமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வுப் பணியின் தொடர்ச்சியாக பிரமாண்டமாக இன்னும் உறுதியாக நிற்கும் கோட்டைச் சுவர், கொத்தளம் பகுதியில் கோட்டை சுற்றுச் சுவர் கட்டுமானம் பற்றி அறிய அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

 

கோட்டைச் சுவர் தொடங்கும் சுமார் 60 அடி சாய்வில் இருந்து 5 மீட்டர் நீளம் அகலத்தில் தேவைக்கேற்ற உயரத்தில் படிக்கட்டு வடிவில் அகழாய்வு செய்யத் தொடங்கி நடந்து வருகிறது. கோட்டை சுவரின் அடியில் இருந்து முழுமையாக எளிதில் கரையாத கடினமான மண் கொண்டு உயரமாக அமைக்கப்பட்டு சுவரின் மேலே நடுவில் ஒரு மீட்டர் உயரம், அகலத்தில் சுடுசெங்கல் வைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல பாதுகாப்பு வீரர்கள் நிற்க செங்கல் கட்டுமானத்தில் 'ப' வடிவத்தில் கொத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

கோட்டை சுவருக்கு அருகிலேயே அகழி வெட்டி அதிலிருந்து மண் எடுத்து நிரப்பியுள்ளனர் என்பது அகழியையும் கோட்டை சுவரில் உள்ள எளிதில் கரையாத கல் கலந்த கடினமான மண்ணைப் பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கோட்டை சுவரின் மேல் நடைபாதை, கொத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களும் அரண்மனைத் திடலில் உள்ள கட்டுமான செங்கற்களும் ஒரே மாதிரியாக உள்ளதால் கோட்டையும், அரண்மனையும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Kothalam structure at Porpanaikottai

 

இன்னும் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் இறுதிக்கட்ட ஆய்வறிக்கையிலேயே கோட்டை, அரண்மனைத்திடல் கட்டுமானம் ஆகியவை  எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது உறுதியாகத் தெரிய வரும். இந்த கோட்டைச் சுவரின் கட்டுமானத்தைப் பார்க்கும் போது இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக நிலைத்து நிலைத்து நின்று தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும்.

 

 

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.