Skip to main content

கொடநாடு! சிக்கிய சாட்சியம்! கைதாகப்போகும் முக்கிய புள்ளி?

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதற்கட்டமாக ஒரு பெரிய கைதினை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் செய்யப்போகிறார்கள்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

கோவை ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளையும் அவர்களது வாக்குமூலங்களையும் ஊட்டி கோர்ட்டில் ரகசிய ஆவணமாகச் சமர்ப்பித்தார் ஐ.ஜி. சுதாகர். தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. போலீசார் எடுத்துவரும் நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்களில் என்ன இருந்தது என்பதை நிரூபித்து வருகிறது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டம் முதல் இன்றுவரை அவருக்கு மூன்று செக்யூரிட்டி ஆபீசர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பெயர் ரெட்டி. இரண்டாவது நபர் கிருஷ்ணராஜ். மூன்றாவது நபர் தர்மராஜ். இதில் ரெட்டி என்பவர் வழுக்கைத் தலையோடு இருப்பார். இரண்டாவது நபரான கிருஷ்ணராஜ் சேலத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் தர்மராஜ் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். எடப்பாடி எங்குச் சென்றாலும் இந்த மூவரும் உடன் செல்வார்கள். ரெட்டியும் தர்மராஜும் முறையே எடப்பாடிக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மூன்று அடி தொலைவில் நிற்பார்கள். கிருஷ்ணராஜ் அருகில் நிற்பார்.

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

விழாக்களில் கலந்துகொள்ளும் எடப்பாடி, யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிடமாட்டார். அவர் சாப்பிடும் தண்ணீரைக் கூட கிருஷ்ணராஜ் கொடுத்தால்தான் எடப்பாடி வாங்குவார். எடப்பாடிக்கு கிருஷ்ணராஜ் மீது அவ்வளவு நம்பிக்கை என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜின் குடும்பம், எடப்பாடிக்கு மிக நெருங்கிய குடும்பம். அவரிடம் எடப்பாடி மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் மிகவும் நெருங்கிப் பழகுவார்கள். எடப்பாடி மகன் மிதுன் மற்றும் உறவினரான சம்பந்தி ராமலிங்கம் ஆகியோருடன் நெருங்கிப் பழகுவார் கிருஷ்ணராஜ். சேலம் இளங்கோவன், கிருஷ்ணராஜ் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வார். ஆறுகுட்டி எம்.எல்.ஏ., அனுபவ் ரவி போன்றவர்களும் கிருஷ்ணராஜுவுடன் நன்றாகப் பழகுவார்கள். இந்த கிருஷ்ணராஜைக் குறிவைத்து தமிழக போலீஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது. “இவருக்கும் கொடநாடு வழக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. விரைவில் இவர் சிக்குவார்” என்கின்றது தமிழக காவல்துறை வட்டாரம்.

 

எடப்பாடி முதல்வராக இருந்தபோது, முக்கியமான விஷயங்களைப் பேசும்போது தனது செல்போனை உபயோகிக்கமாட்டார். அதேபோல் கொடநாடு கொள்ளை சம்பவத்தின்போது அந்தக் கொள்ளையை நடத்திய கனகராஜ் மற்றும் அந்தக் கொள்ளைக்கு பேருதவியாக இருந்த அனுபவ் ரவி, ஆறுகுட்டி ஆகியோரிடம் பேச, தனது பாதுகாவல் அதிகாரிகளாக இருந்தவர்களின் செல்போனை எடப்பாடி உபயோகித்துள்ளார். அதில் ரெட்டி, தர்மராஜ், கிருஷ்ணராஜ் ஆகியோரது செல்போன்களை உபயோகித்துத்தான் எடப்பாடி பேசியிருப்பார். அதில் கிருஷ்ணராஜின் செல்போன் எண்ணை எடப்பாடி உபயோகித்தார் என ஆறுகுட்டியும், அனுபவ் ரவியும் போலீசில் போட்டுக் கொடுத்துள்ளனர்.

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

கொடநாடு கொலை வழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களையாவது பெறவேண்டும் என, கோர்ட்டிலேயே சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் நடந்த வாய்தாவின்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது. அதில் எடப்பாடிக்கு செக்யூரிட்டி ஆபீஸராக இருந்தவர்களின் செல்போனும் ஒன்று என்கிறது காவல்துறை வட்டாரம்.

 

முதல்வரின் செக்யூரிடிகள், முதல்வரின் நடவடிக்கை குறித்து உளவுத்துறை தலைவரிடம் சொல்ல வேண்டும். அமைச்சர்களின் செக்யூரிட்டிகளை வைத்துதான் அமைச்சர்களின் நடவடிக்கைகளை உளவுத்துறை கண்காணிக்கும். அவர்களது செக்யூரிட்டி ஆபீசர்களை முதல்வருக்கு நெருக்கமானவர்கள்தான் தேர்ந்தெடுத்து அமைச்சர்களுக்கு நியமிப்பார்கள்.

 

எடப்பாடி முதல்வராக இருந்தபோது, உளவுத்துறை தலைவராக இருந்தவர் சத்தியமூர்த்தி. அவரும் முதல்வர் எடப்பாடியிடம் சொல்லவேண்டிய சில விஷயங்களை அவரது செக்யூரிட்டி ஆபீசர்கள் மூலமாகத்தான் சொல்வார். முதல்வர் பேசுவதை யார் டேப் செய்வார்கள்? டேப் செய்யும் பொறுப்பிலுள்ள சத்தியமூர்த்தியே நம்மிடம் பேசுகிறார் என்கிற தைரியத்தில் செக்யூரிட்டி ஆபீசர்கள் அலட்சியமாக இருந்தனர். ஆனால், எடப்பாடி கொடநாடு கொலை, கொள்ளை பற்றி முழுவதும் செக்யூரிட்டி ஆபீசர்களின் செல்போனை உபயோகித்துப் பேசியுள்ளார். எனவே, எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசர்கள் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிக்கியுள்ளனர்.

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த ஐ.ஜி. சுதாகர் டீம் இந்த உண்மை பற்றி ஸ்மெல் செய்து கண்டுபிடித்துவிட்ட நிலையில், விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசர்கள் போலீஸ் விசாரணைக்கு உள்ளாவார்கள். அவர்கள் கைது செய்யப்படலாம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

செக்யூரிட்டி ஆபீசர்கள் கைது செய்யப்பட்டால், எடப்பாடி மீதான பிடி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இறுகும். இது அரசியல் ரீதியான பழி வாங்கல் என எடப்பாடி பிதற்றுவார் என்பதால், அரசின் அனுமதி வேண்டிக் காத்திருப்பதாகக் கூறுகிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.