Skip to main content

கொடநாடு விவகாரம்: மிரண்டுபோன 'நிழல்' இளங்கோவன்! மவுனம் கலைத்ததன் பின்னணி என்ன?

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Kodanadu case salem elngovan registered complaint on thanapal

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், ஜெயலலிதா, சசிகலாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்தார். இந்நிலையில், ஜெ., மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு பிப். மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, ஜெ.,வுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் 'மாஸ்டர் மைண்ட்' ஆக செயல்பட்ட கனகராஜை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். 

 

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஏப். 28ஆம் தேதி இரவு, சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி - சென்னை புறவழிச்சாலையில் விபத்தில் கனகராஜ் பலியானார். இந்த விபத்து தற்செயலானது அல்ல; திட்டமிடப்பட்டது என்று சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

Kodanadu case salem elngovan registered complaint on thanapal

 

இந்நிலையில், கனகராஜின் அண்ணன் தனபால், தன் தம்பி இறப்பதற்கு முன்பாக கொடநாடு எஸ்டேட்டில் இருந்து திருடிக்கொண்டு வந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய 5 பைகளை, நிழல் முதல்வர் போல வலம் வந்த சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் ஆகியோரிடம் கொடுத்து இருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சிகரமான குண்டை தூக்கிப் போட்டார். 

 

அந்தப் பைகளில்தான், ஜெ., ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த அனைவரின் சொத்து விவரங்கள் கொண்ட ஆவணங்கள் இருந்ததாகவும், அதைக் கைப்பற்றிய பிறகுதான் எடப்பாடி பழனிசாமி முன்பு ஆட்சியையும், பின்னர் கட்சியையும் கைப்பற்றிக் கொண்டதாகவும் தனபால் கூறியிருந்தார். 

 

கடந்த 2021ஆம் ஆண்டே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை நக்கீரன் புலனாய்வு இதழும், இணையமும் புலனாய்வு செய்தபோது, தனபால் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். தொடர்ச்சியாக எடப்பாடிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஒன்றுவிட்ட அண்ணன் உள்ளிட்ட பலர் கருத்து கூறியிருந்தனர்.

 

Kodanadu case salem elngovan registered complaint on thanapal

 

அப்போதெல்லாம் அசைந்து கொடுக்காத 'நிழல்' இளங்கோவன், ஆவணங்கள் அடங்கிய பைகள் பற்றிய விவகாரத்தில் மட்டும் பேசத் தொடங்கியிருக்கிறார். தனபாலின் இந்த ஸ்டேட்மென்ட் எடப்பாடி பழனிசாமி மற்றும் இளங்கோவன் கூடாரத்தை சற்று அசைத்துப் பார்த்ததாகவே சொல்கிறார்கள். 

 

இந்த நிலையில்தான் இளங்கோவன், செப். 9ஆம் தேதி, சேலம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து, எஸ்.பி., அருண் கபிலனிடம் தனபால் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து இளங்கோவன் கூறுகையில், “கனகராஜின் அண்ணன் தனபால், தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். கனகராஜ் இறப்பதற்கு முன்பு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே என்னிடம் சில பைகளை கொடுத்ததாக கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறானது. 

 

Kodanadu case salem elngovan registered complaint on thanapal

 

கனகராஜ் விபத்தில் இறந்தபோது, ஆத்தூர் காவல்நிலையத்தில் வைத்து இதே தனபால், கொடநாடு வழக்கில் கனகராஜிக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அப்போது என்னைப் பற்றியும் எதுவும் கூறவில்லை. இப்போது, திமுக அரசு மற்றும் அதன் 'பி டீம்' ஆக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலின் பேரில் தனபால் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். 

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான அவர் பிணை மனு தாக்கல் செய்தபோது, தனக்கு மனநிலை பாதிப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் சான்றிதழையும் இணைத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் அவருக்கு பிணையில் வெளியே செல்ல அனுமதி அளித்தது. 

 

மனநிலை பாதிக்கப்பட்ட தனபாலின் கருத்து பெரிதாக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி, சேலம் மாவட்ட எஸ்.பி.யிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தன் கணவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாகவும், அவரால் தனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

 

ஆகவே, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சிலரின் தூண்டுதலால் என் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதால், தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால், இதற்கு மேல் எதுவும் கூற முடியாது” என்றார் இளங்கோவன். 

 

எடப்பாடியின் நிழல் போல் வலம் வரும் இளங்கோவன் மவுனம் கலைத்திருப்பது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனபால் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு இளங்கோவன் திடீரென்று இறங்கி அடிக்க காரணம் என்ன என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். 

 

Kodanadu case salem elngovan registered complaint on thanapal

 

‘கொடநாடு விவகாரம் மற்றும் கனகராஜின் மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தனபாலிடம் செப். 14ஆம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள் குறித்த முக்கியமான பைகள் இளங்கோவன், எடப்பாடியின் மச்சான் வெங்கடேஷிடம் இருக்கலாம் என தனபால் கொளுத்திப் போட்டுள்ளார். 


இதை வைத்து, தனபாலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளங்கோவனை சிபிசிஐடி கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் உள்ள நிலையில், இளங்கோவனை முடக்கிப் போடுவதன் மூலமாக எடப்பாடியை சொந்த மண்ணிலேயே நிலை குலையச் செய்ய முடியும் என்று ஆளுங்கட்சியும் கணக்குப் போட்டுதான் காய் நகர்த்துகிறது. 

 

இதன்மூலம் கொங்கு மண்டலத்தில் இலை கட்சிக்கு கணிசமான சேதாரத்தை ஏற்படுத்த முடியும் என்ற கணக்கும் இருக்கிறது. தனபால் திடீரென்று இளங்கோவன், எடப்பாடியின் மைத்துனர், கொங்கணாபுரம் கரட்டூர் மணி மற்றும் எடப்பாடி, இளங்கோவனுக்கு நெருக்கமான சிலரை வரிசையாக கைகாட்டுவதன் பின்னணியில் ஆளுங்கட்சியினருக்கும், ஓ.பி.எஸ்.ஸூக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால்தான் இளங்கோவன் அதை உங்களிடம் (ஊடகங்கள்) பகிரங்கப்படுத்தி உள்ளார். எல்லாமே அரசியல் லாப, நட்டக் கணக்குதான்’ என்கிறார்கள்.

 

 

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கொடநாடு வழக்கு; மனோஜ் சாமிக்கு சம்மன் அனுப்பிய சி.பி.சி.ஐ.டி.

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
case of Kodanadu CbCID sent summons to Manoj Sami

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாக சேர்க்கப்ட்டடுள்ள சயான் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) மதியம் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தி இருந்தனர். இந்த விசாரணையின் போது அவர் 35 பக்கங்களுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் பூசாரியாக உள்ள மனோஜ் சாமி 9 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சயான் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மனோஜ் சாமிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அளித்துள்ளனர். அதில் வரும் 15 ஆம் தேதி (15.02.2024) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வகக் குழு தமிழகம் வருகை தந்திருந்தனர். அதன்படி இந்த குழுவினர் திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.