Skip to main content

விவசாயிகளின் மாபெரும் பேரணி வெற்றி! - வழிநடத்திய விஜூ கிருஷ்ணனை தெரியுமா?

Published on 13/03/2018 | Edited on 14/03/2018
march

 

நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணி. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாசிக் மாவட்டத்தில் சில நூறுபேருடன் தொடங்கிய இந்தப் பேரணி, ஆசாத் மைதானத்தை வந்தடைந்த போது சுமார் 50ஆயிரத்திற்கும் அதிகமாகி இருந்தது. சுமார் 200 கிமீ தூரத்திற்கு நடந்தே மும்பையின் ஆசாத் மைதானத்திற்கு வந்து, அங்கு முகாமிட்டிருந்தனர் விவசாயிகள். தங்களுக்கு உணவளிக்க பாடுபடுபவர்களுக்கு மும்பைவாசிகளும், டப்பாவாலாக்களும் உணவளிக்க முன்வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

 

விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்தப் பேரணி, போராடிய விவசாயிகளுக்கு வெற்றியையும், புதிய உத்வேகத்தையும் தந்திருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் மாற்று அரசியலை முன்வைக்கும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பலருக்கும் இந்த வெற்றி புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. ஒருவேளை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தை முற்றுகையிடும் முடிவில் அமைதியாகக் காத்திருந்தனர். ஆனால், அதற்கு இடம் கொடுக்காத வகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தேவேந்திர பட்நாவிஸ் அரசு எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்திருக்கிறது.

 

கடந்த பல தசாப்தங்களாக நாடு பார்த்திராத ஒரு மாபெரும் பேரணி வெற்றிபெற்றதற்கு, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் அதில் கலந்துகொண்டவர்கள் கட்டுப்பாட்டோடு செயல்பட்டதே முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்தப் பேரணியை வழிநடத்திச் சென்ற விஜூ கிருஷ்ணனைத் தெரியுமா உங்களுக்கு?

 

vijoo

 

டிசம்பர் 20, 1946ஆம் ஆண்டு கேரளாவின் வடக்கில் அப்போது மலபார் என்று அழைக்கப்பட்ட மெட்ராஸின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியில் உள்ள குக்கிராமமான கரிவெல்லூரில், நிலம், உணவு மற்றும் சுதந்திரம் கோரி கர்ஷாகா சங்கம் எனும் விவசாயிகள் கூட்டணியின் சார்பில் மாபெரும் எழுச்சி உருவானது. இந்த எழுச்சிக்குக் காரணமாக இருந்த திடில் கண்ணன் மற்றும் கீநெரி குன்ஹாம்பு ஆகியோரை மலபார் சிறப்பு காவல்படை சுட்டுக்கொன்றது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே நாட்டின் மாபெரும் விவசாயிகள் எழுச்சி பிறந்த தருணம் அது.

 

சுமார் ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு அதே குக்கிராமத்தில் இருந்து வந்த விஜூ கிருஷ்ணனின் வழிநடத்தலில்தான் 50ஆயிரம் விவசாயிகளின் மாபெரும் பேரணி வெற்றிபெற்றுள்ளது. விஜூ கிருஷ்ணன் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர். தற்போது நடைபெற்ற மாபெரும் பேரணிக்கு வித்திட்ட அகில இந்திய கிசான் சபை என்ற விவசாய சங்கத்தின் இணை செயலாளராக இருக்கிறார். 

 

‘நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ராஜஸ்தானில் கூட இப்படி ஒரு பேரணி நடைபெற்றது. ஆனால், அதற்கு இப்போது கிடைத்திருப்பதைப் போன்ற ஊடகவெளிச்சம் கிடைக்கவில்லை’ என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் விஜூ கிருஷ்ணன். மேலும், ‘பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுமே தங்களது நவ-தாராளமய கொள்கைகளால் விவசாயிகளை துன்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பா.ஜ.க. தனது இனவாத செயல்பாடுகளால் வஞ்சிக்கிறது. இந்தப் போராட்டங்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் தொடரும் என்பதே எங்கள் எண்ணம். இந்த வெற்றி எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், அகில இந்திய கிசான் சபையின் வலிமையையும் உயர்த்தித் தந்திருக்கிறது’ என நம்பிக்கை ததும்பும் குரல்களில் சொல்லியிருக்கிறார்.

 

vijoo

 

தகிக்கும் வெயிலில் பாதங்கள் கொப்பளித்து, வெடித்து ரத்தம் வடிந்தும் ஓயாது நடந்து தங்களது உரிமையான வெற்றியை தங்களுக்கே உரியதாக்கி இருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களின் இந்த வெற்றி முற்றிலும் பாராட்டுக்குரியது. ‘நீங்கள் மலர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தினாலும், வசந்தம் வருவதை யாராலும் தடுக்க முடியாது’ என்ற பாப்லோ நெருடாவின் கவிதையை உணர்த்துகிறது இந்த வெற்றி.

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது.