Skip to main content

குஷ்பு சினிமா ஸ்டாராக இருக்கலாம்; ஆனால் மருத்துவர் எழிலன் அரசியல் ஸ்டார் - திருமா பேச்சு!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

ghf



தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரைகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது, "ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அதிகப்படியான விருப்பத்தின் பேரிலேயே இன்று இங்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளேன்.

 

அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதே நேரத்தில் தளபதி அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும். எழிலனுடைய தந்தை பேராசிரியர் நாகநாதன் பொருளியல் வல்லுநர். பொருளாதாரத்தில் ஆகச்சிறந்த வல்லுநர். மறைந்த நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான தோழர். காலையில் கலைஞர் அவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார் என்றால் அவரோடு சேர்ந்து நடக்கின்ற பாக்கியம் பெற்றவர் பேராசிரியர் நாகநாதன். அந்த அளவுக்கு நெருக்கமானவர். அவருடைய அருமை புதல்வர்தான் நம்முடைய மருத்துவர் எழிலன். நம்முடைய தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அவருடைய பிள்ளையாகவே இருந்து அவரை பார்த்துக்கொண்டவர் மருத்துவர் எழிலன். 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. 


கோபாலபுரமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் அவருடன் 24 மணி நேரமும் இருந்து அவரை கண்காணித்தார் என்ற பெருமை அவர் ஒருவரையே சாரும். அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருப்பவர் அல்ல. தனக்குப் பதவி வேண்டும் என்ற அடிப்படையில் தளபதியை அவர் கட்டாயப்படுத்தி வற்புறுத்தி இந்த வாய்ப்பை அவர் பெறவில்லை. இவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் கொள்கைகளை சட்டமன்றத்தில் பாதுகாக்கும் முக்கியப் பணியை சிறப்பாகச் செய்வார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. அதையும் தாண்டி அனைத்து காரியங்களையும் கொள்கை சார்ந்து சிந்திக்கக் கூடியவர். வெறும் கட்சிப் பற்று, தலைமைப் பற்று என்று இல்லாமல் தமிழக மக்களுக்காக ஒரே கோட்டில் அவர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தருகிறேன். பேரறிஞர் அண்ணா, பெரியாரின் கொள்கைகளையும் எப்போதும் காக்க வேண்டும், அதன்படி ஆட்சி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர் என்பதால் சமூகநீதி கருத்தைக் காப்பதில் யாரையும் விட அவருக்கு அதிக அக்கறை உண்டு. 


நாடு தழுவிய அளவுக்கு அவருக்குக் கருத்தியல் சார்ந்த தொடர்புகள் உண்டு. அப்படி இவர் ஆற்றிய பணிகளைக் கண்டு மனமுகந்து இவரை உங்களிடம் ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடியவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் சினிமா ஸ்டாராக இருக்கலாம், ஆனால் இவர் அரசியல் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. கருத்தியலில் இவரோடு அவர் போட்டியிட முடியாது. இவரின் விவாதத்துக்கு அவரால் பதிலளிக்க முடியாது. அவரையும் இவரையும் நாம் ஒப்பிடவே முடியாது. அவருக்கு சினிமா புகழ் உண்டு. அதை வைத்து அரசியலிலும் புகழ் தேட ஆசை. எனவே அவர் ஒரு கட்சியில் சேர்ந்த இங்கே போட்டியிட வந்திருக்கிறார். இவர் தமிழகத்தைச் சமூகநீதி பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். எனவே இந்த தமிழகம் அடிமையாகாமல் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல தீயசக்திகளைப் புறந்தள்ள வேண்டும். மருத்துவர் எழிலனை சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.


 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.