Skip to main content

பினராயி விஜயனின் மாஸ்டர் ஸ்டோக், காங்கிரஸின் சொதப்பல் கூட்டணி... கேரள உள்ளாட்சி தேர்தல் ஒரு பார்வை...

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

kerala com

 

 

அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பின் தற்போது கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பக்கம் அனைவரின் கவனமும் சென்றுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதால்தான் இந்த கவனம். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு, தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன்மாதிரி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு, சட்டமன்ற தேர்தலில் வெற்றி விகிதத்தை அதிகரிக்க இதைத் துறுப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

 

அந்த வகையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பின் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கடந்த வெற்றியைத் தக்க வேண்டும் அல்லது அதையும் தாண்டி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தனது வலுவை இழந்து வரும் நிலையில் அவர்களுக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது தேவையான ஒன்றாக இருந்தது. கேரள அரசியலுக்குள் நுழைய பாஜக, தனது ஆரம்பப் புள்ளியாக இதை மாற்ற களத்தில் இறங்கியது. இப்படி ஒவ்வொரு கூட்டணிக்கும் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகவே அமைந்துள்ளது.

 

கேரளாவில் கடந்த டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை இந்த தேர்தலில் முக்கியமான போட்டியாளர்களாக இருந்தன. நேற்று இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கான தேர்தலில்  கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி பெருவாரியாக முன்னிலை பெற்று வெற்றி விளிமில் உள்ளது. நகராட்சிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மாநகராட்சிகளுக்கான தேர்தலில் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் தலா 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பந்தளம், பாலக்காடு நகராட்சிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்குத் தடையாக பல சிக்கல்கள், சர்ச்சைகள் சவால்களாக முன்னிருந்தன. அவற்றில், பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கியது பெரும் பிரச்சனையாகவே பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை அவர்களின் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அவர்களின் தாக்குதலைத் தடுக்காமல் பினராயி விஜயன் வேறு பாதையில் சென்று அவர்களைச் சமாளித்தார். இதுவரை தங்கள் அரசு மக்களுக்குச் செய்த நலத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குத் தெரியவைத்தார் பினராயி விஜயன். 2018ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு சமயத்தில் அவரது அரசாங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகள், சேவைகள் என்னென்ன, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான செயல்பாடு என பாசிட்டிவ் விஷயங்களை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் லிஸ்ட் போட்டுத் தெரிவித்தார்கள். இதுபோன்ற அவரது ஆட்சியின் செயல்பாடுகள், அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பூதாகரமாக்காமல், மறைத்துவிட்டன. 

 

கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகராட்சியளவில் செல்வாக்கு இருப்பதைவிட கிராம பஞ்சாயத்திலும், ஊராட்சி ஒன்றியங்களிலும் செல்வாக்கு அதிகம் என்பது இத்தேர்தலின் மூலம் நிரூபனமாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைதானது, அதனால் அவரை கட்சியைவிட்டு ஒதுக்கிவைத்திருந்தது போன்ற விஷயங்களும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் சிக்கலாக இருந்தது. ஆனால், கிராம மக்களுக்குக் கல்வியையும், மருத்துவத்தையும் அவர்களுக்கு மிகவும் அருகிலேயே கிடைக்கச் செய்தது மற்றும் நகராட்சி, மாநகராட்சியில் உள்ளவர்களை மட்டுமின்றி கிராம மக்களுக்கு நெருக்கடியான சமயத்திலும் அரசாங்க நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது போன்றவை இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் , ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகளை மட்டும் அதிகமாகக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் செயல்பாடுகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் பக்கமே இருப்பதின் வெளிப்பாடுதான் இது. சில இடங்களில் காங்கிரஸ் கூட்டணி மிக நெருங்கிய வாக்கு எண்ணிக்கைகளில் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், 2010 மற்றும் 2015ஆம் ஆண்டில் யார் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமாக பகுதிகளை கைப்பற்றினார்களோ அவர்கள்தான் அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றியைக் கண்டுள்ளனர். 

 

பல வருடங்களாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கேரள காங்கிரஸைப் பிரித்து தனது கூட்டணியில் பினராயி சேர்த்தது இத்தேர்தலில் பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. மத்திய கேரளத்தில் அவருடைய அலையால் காங்கிரஸின் பகுதிகளாகக் கருதப்பட்டவை எல்டிஎஃப் வசமானது. ஊராட்சித் தேர்தலில் மக்களுடைய பிரச்சனையைப் பேசி பிரச்சாரம் மேற்கொள்ளாமல், தங்கக் கடத்தல் குறித்து மட்டுமே காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது மக்களுக்கு ஒட்டவில்லை. ஜே.ஐ.டபுள்யூ கட்சியைக் காங்கிரஸ் தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது, அவர்களின் கட்சியில் இருக்கும் கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையானது. கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் இதை விமர்சித்தது காங்கிரஸுக்கு மிகவும் பின்னடைவானது. ஜமாத் கட்சியை இணைத்தது சில இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணியில் ஐ.ஜே.டபுள்யூ கட்சியை இணைத்ததற்கு அதிருப்தியை வெளிக்காட்டியது.

 

இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பாஜக கனிசமாக பிரிக்கத் தொடங்கியுள்ளது காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து பந்தளம் நகராட்சியை வென்றிருக்கிறது பாஜக. இது எல்டிஎஃப் வசம் இருந்த தொகுதியாகும். பாலக்காட்டில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று அத்தொகுதியைத் தக்கவைத்துள்ளது. பத்தனம்திட்டாவில் பல வார்டுகளையும் பாஜக வென்றிருக்கிறது. அதேபோல, திருவனந்தபுர மாநகராட்சியில் எதிர்கட்சியாகியுள்ளது பாஜக.

 

இந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் முழுவதும் அறிவிக்கப்படவில்லை, ஆனாலும் முன்னிலை முடிவுகளின்படி, தங்களுக்கு வெற்றிவாய்ப்பு அமோகமாக இருப்பதால் செங்கொடிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் ‘இன்குலாம் ஜிந்தாபாத்’ என்னும் கோஷங்களுடன் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

 


 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.