Skip to main content

பினராயி விஜயனின் மாஸ்டர் ஸ்டோக், காங்கிரஸின் சொதப்பல் கூட்டணி... கேரள உள்ளாட்சி தேர்தல் ஒரு பார்வை...

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

kerala com

 

 

அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பின் தற்போது கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பக்கம் அனைவரின் கவனமும் சென்றுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதால்தான் இந்த கவனம். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு, தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன்மாதிரி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு, சட்டமன்ற தேர்தலில் வெற்றி விகிதத்தை அதிகரிக்க இதைத் துறுப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

 

அந்த வகையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பின் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கடந்த வெற்றியைத் தக்க வேண்டும் அல்லது அதையும் தாண்டி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தனது வலுவை இழந்து வரும் நிலையில் அவர்களுக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது தேவையான ஒன்றாக இருந்தது. கேரள அரசியலுக்குள் நுழைய பாஜக, தனது ஆரம்பப் புள்ளியாக இதை மாற்ற களத்தில் இறங்கியது. இப்படி ஒவ்வொரு கூட்டணிக்கும் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகவே அமைந்துள்ளது.

 

கேரளாவில் கடந்த டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை இந்த தேர்தலில் முக்கியமான போட்டியாளர்களாக இருந்தன. நேற்று இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கான தேர்தலில்  கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி பெருவாரியாக முன்னிலை பெற்று வெற்றி விளிமில் உள்ளது. நகராட்சிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மாநகராட்சிகளுக்கான தேர்தலில் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் தலா 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பந்தளம், பாலக்காடு நகராட்சிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்குத் தடையாக பல சிக்கல்கள், சர்ச்சைகள் சவால்களாக முன்னிருந்தன. அவற்றில், பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கியது பெரும் பிரச்சனையாகவே பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை அவர்களின் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அவர்களின் தாக்குதலைத் தடுக்காமல் பினராயி விஜயன் வேறு பாதையில் சென்று அவர்களைச் சமாளித்தார். இதுவரை தங்கள் அரசு மக்களுக்குச் செய்த நலத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குத் தெரியவைத்தார் பினராயி விஜயன். 2018ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு சமயத்தில் அவரது அரசாங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகள், சேவைகள் என்னென்ன, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான செயல்பாடு என பாசிட்டிவ் விஷயங்களை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் லிஸ்ட் போட்டுத் தெரிவித்தார்கள். இதுபோன்ற அவரது ஆட்சியின் செயல்பாடுகள், அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பூதாகரமாக்காமல், மறைத்துவிட்டன. 

 

கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகராட்சியளவில் செல்வாக்கு இருப்பதைவிட கிராம பஞ்சாயத்திலும், ஊராட்சி ஒன்றியங்களிலும் செல்வாக்கு அதிகம் என்பது இத்தேர்தலின் மூலம் நிரூபனமாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைதானது, அதனால் அவரை கட்சியைவிட்டு ஒதுக்கிவைத்திருந்தது போன்ற விஷயங்களும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் சிக்கலாக இருந்தது. ஆனால், கிராம மக்களுக்குக் கல்வியையும், மருத்துவத்தையும் அவர்களுக்கு மிகவும் அருகிலேயே கிடைக்கச் செய்தது மற்றும் நகராட்சி, மாநகராட்சியில் உள்ளவர்களை மட்டுமின்றி கிராம மக்களுக்கு நெருக்கடியான சமயத்திலும் அரசாங்க நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது போன்றவை இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் , ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகளை மட்டும் அதிகமாகக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் செயல்பாடுகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் பக்கமே இருப்பதின் வெளிப்பாடுதான் இது. சில இடங்களில் காங்கிரஸ் கூட்டணி மிக நெருங்கிய வாக்கு எண்ணிக்கைகளில் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், 2010 மற்றும் 2015ஆம் ஆண்டில் யார் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமாக பகுதிகளை கைப்பற்றினார்களோ அவர்கள்தான் அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றியைக் கண்டுள்ளனர். 

 

பல வருடங்களாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கேரள காங்கிரஸைப் பிரித்து தனது கூட்டணியில் பினராயி சேர்த்தது இத்தேர்தலில் பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. மத்திய கேரளத்தில் அவருடைய அலையால் காங்கிரஸின் பகுதிகளாகக் கருதப்பட்டவை எல்டிஎஃப் வசமானது. ஊராட்சித் தேர்தலில் மக்களுடைய பிரச்சனையைப் பேசி பிரச்சாரம் மேற்கொள்ளாமல், தங்கக் கடத்தல் குறித்து மட்டுமே காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது மக்களுக்கு ஒட்டவில்லை. ஜே.ஐ.டபுள்யூ கட்சியைக் காங்கிரஸ் தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது, அவர்களின் கட்சியில் இருக்கும் கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையானது. கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் இதை விமர்சித்தது காங்கிரஸுக்கு மிகவும் பின்னடைவானது. ஜமாத் கட்சியை இணைத்தது சில இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணியில் ஐ.ஜே.டபுள்யூ கட்சியை இணைத்ததற்கு அதிருப்தியை வெளிக்காட்டியது.

 

இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பாஜக கனிசமாக பிரிக்கத் தொடங்கியுள்ளது காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து பந்தளம் நகராட்சியை வென்றிருக்கிறது பாஜக. இது எல்டிஎஃப் வசம் இருந்த தொகுதியாகும். பாலக்காட்டில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று அத்தொகுதியைத் தக்கவைத்துள்ளது. பத்தனம்திட்டாவில் பல வார்டுகளையும் பாஜக வென்றிருக்கிறது. அதேபோல, திருவனந்தபுர மாநகராட்சியில் எதிர்கட்சியாகியுள்ளது பாஜக.

 

இந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் முழுவதும் அறிவிக்கப்படவில்லை, ஆனாலும் முன்னிலை முடிவுகளின்படி, தங்களுக்கு வெற்றிவாய்ப்பு அமோகமாக இருப்பதால் செங்கொடிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் ‘இன்குலாம் ஜிந்தாபாத்’ என்னும் கோஷங்களுடன் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

 


 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.