Skip to main content

“எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா மறைந்த தினம் நல்ல நாள்தானே” - கே.சி. பழனிசாமி பொளேர் பேட்டி

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

,m


சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜெயலலிதா மறைந்த நன்னாளில் என்று உறுதி எடுத்துக்கொண்ட சம்பவம் தொலைக்காட்சிகளில் வைரலானது. யாருமே கவனிக்காமல் எப்படி இந்த உறுதிமொழி படிவம் தயாரிக்கப்பட்டுப் படிக்கப்பட்டது என்ற கேள்வியை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் எம்பி. கே.சி.பழனிசாமியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு," நிச்சயமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த நாள் நன்னாள் தானே, அவர் மறைந்த காரணத்தால் தானே இவர் நான்கு ஆண்டுகள் அவரால் முதல்வராக இருந்த முடிந்தது.

 

இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்து நான் கருத்து பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவுக்குக் கருத்து தெரிவித்த அதிமுக தொண்டர் ஒருவர், அண்ணா எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் உண்மையாகவே அந்த நாள் தான் அவர்கள் வாழ்க்கையில் பெரிய நன்னாள். இல்லை என்றால் ஒருநாளும் அமைச்சர் பதவியைத் தாண்டி நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அந்த வகையில் எடப்பாடி தவறுதலாக இதைப் படித்ததாக நான் கருதவில்லை, அவர் மனதில் உள்ளதை அப்படியே அவர் வெளிப்படுத்தியதாகவே நான் பார்க்கிறேன் என்றார். இவர் சொன்னது கூட உண்மைதான் போல என்று அவர் பேசியதற்குப் பிறகு நானும் நினைத்தேன். அந்த அளவுக்கு இவர்கள் பதவி வெறி பிடித்து ஆட்டம் போட்டுள்ளார்கள். 

 

கட்சி அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில், உண்மையான அதிமுக நாங்கள் என்று இவர்கள் இருவரும் சண்டை வேறு போட்டுக்கொண்டுள்ளார்கள். இதில் எடப்பாடிக்கு டெல்லியில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் நான்தான் உண்மையான அதிமுக, என்னைத்தான்  டெல்லி அங்கீகரித்துள்ளது என்ற பெருமை வேறு, மற்றொருவருக்குத் தன்னை  அழைக்கவில்லையே என்ற வருத்தம் வேறு வாட்டி வதைக்கின்றது. எப்படி இருந்த கட்சி அதிமுக., மோடியா லேடியா என்று கேட்ட அம்மா எங்கே, எனக்கு அழைப்பு வந்துள்ளது என்று சந்தோசப்படும் இவர்கள் எங்கே? இவர்கள் இருவரும் தான் அதிமுகவைக் காப்பாற்றப் போகிறவர்களா?

 

இவர்கள் இருவரும் கோழைகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்களால் தமிழக மக்களுக்கோ, கட்சிக்கோ  எவ்வித நன்மையும் எப்போதும் ஏற்படப் போவதில்லை. இத்தனை ஆயிரம் தொண்டர்களை அடிமைகளாக வைத்திருக்கலாம் என்று இவர்கள் இருவரும் நினைத்துள்ளார்கள். ஆனால் ஒருபோதும் அது நடக்காது. இவர்களைத் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் பாஜகவை அனுசரித்துப் போவதால் அவர்களுக்கு அதிகம் என்ன கிடைக்கப்போகிறது. சிறைக்குப் போவது தள்ளிப்போகும், அதிக பட்சம் ஒரு நியமன ராஜ்ய சபா எம்பி பதவி கிடைக்கும். அதைத்தாண்டி இவர்களாலும் எதுவும் செய்ய முடியாது; அவர்களும் அவர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்.

 

வரலாற்று வெற்றிகளைப் பதிவு செய்த இந்த அதிமுக என்னும் இந்த பேரியக்கத்தை தற்போது சிரச்சேதம் செய்து வைத்துள்ளார்கள். இதிலிருந்து இந்த இயக்கத்தை மீட்டு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவர்கள் கட்சி தொண்டர்களிடம் உண்மையாக இல்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களின் மனசாட்சியிடமாவது உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் அதைக்கூட இவர்கள் முறையாகச் செய்வதில்லை. மாற்றி மாற்றிப் பேசி தங்களின் பதவியைக் காப்பாற்றிக்கொண்டால் போதும், கட்சி போனால் போகட்டும் என்ற மனநிலையில் இவர்கள் இருவரும் இருப்பதே அதிமுகவின் சரிவுக்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.

 

 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.