Skip to main content

"24 எல்லாம் வேண்டாம் 4 சீட்டையாவது ஜெயிக்க சொல்லுங்க பாப்போம்...பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா..." - கே.சி. பழனிசாமி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 

ப

 

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்; தேவைப்பட்டால் சந்திப்போம், வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். 

 

நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இருக்கும் வரையில் அந்தக் கட்சிக்குக் கேடுதான். இவர்கள் கட்சியிலிருந்து என்றைக்கு வெளியேறுகிறார்களோ அன்றுதான் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் நல்லது நடக்கும். இவர்கள் பதவி சண்டையில் கட்சியை அடகு வைத்துவிட்டார்கள். அதை மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு தொண்டனும் விரும்புகிறான். இவர்கள் பதவி வேண்டும் கட்சி வேண்டும் என்று அடித்துக்கொள்வதைத் தவிர கட்சிக்காக இவர்கள் செய்த ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைத்தான் செய்தேன் என்று இவர்களால் கூற இயலுமா என்றால் நிச்சயம் முடியாது. ஏனென்றால் எதையும் இவர்கள் செய்யவில்லை. 

 

தமிழகத்தில் பாஜகவால் எந்தக் காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த தேர்தல் அல்ல, இன்னும் ஐந்து தேர்தல் வந்தாலும் அவர்களால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. இது அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். அடுத்த தேர்தலில் தமிழக பாஜக 24 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அவர்கள் தலைவர் கூறியதாகக் கேட்கிறீர்கள். கனவிலும் இது சாத்தியப்படாது. அப்படி ஜெயிக்காவிட்டால் அமித்ஷா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா? இல்லை அரசியலிலிருந்து விலகுவாரா? சும்மா கட்சியினரை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறு வாயில் வந்ததை எல்லாம் பேசியாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.

 

அதனால் தமிழகத்தில் இது நடக்காது, முடியாது என்று தெரிந்து வாயிக்கு வேலை என்ன என்று நினைத்து தொடர்ந்து உளறிக்கொண்டு இருக்கிறார்கள். கனவில் கூட இந்த வெற்றியை அவர்கள் பெற முடியாது. ஆகவே அவர்கள் பேசுவதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திமுக எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். அதிமுக வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்களே அந்தத் தகுதி பாஜகவுக்கு இல்லையா என்று பதிலுக்கு நீங்கள் கேட்கலாம். இவர்கள் இருபத்தி நான்கு அல்ல, வெறும் நான்கு சீட்டுக்களை ஜெயிக்க சொல்லுங்க பாப்போம். சும்மா எதார்த்தம் தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

Next Story

ஆஜருக்கு மேல் ஆஜர்; அதிமுக வட்டாரத்தை பரபரப்பாக்கிய நீதிமன்றங்கள்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Edappadi Palaniswami ordered to appear in person

அதிமுக கட்சியினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் தனக்கும், தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமி வழக்கை தள்ளுபடி செய்தது. அதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, தொடர்ந்து வழக்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கனவே மாற்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கும் நிலையில், மற்றொரு வழக்கில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சென்னை சார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Next Story

அதிமுக முன்னாள் எம்.பி. நீக்கப்பட்ட விவகாரம்; எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Former AIADMK MP deleted matter; Court orders action against Edappadi Palaniswami

 

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டையை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்திருந்த கருத்துகள் தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.