Skip to main content

“அதிமுக கட்சி பிளவுக்கு காரணம்; தினகரனிடம் கெஞ்சிய எடப்பாடி” - கவிஞர் கண்ணன்ஜி

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Kavingar Kannanji  interview

 

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு மற்றும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கவிஞர் கண்ணன்ஜி பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் கூறியதாவது: “கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 23 தொகுதிகளில் தோற்பதற்கு அமமுக காரணமாக இருந்துள்ளது. அதிமுகவில் எந்தப் பிளவும் இருக்கக் கூடாது என்கிற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து சொல்லி வந்தார். எடப்பாடி பழனிசாமி தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். குழப்பங்கள் அனைத்தையும் நீக்கி கழகத்தை வலுவாக்க ஓபிஎஸ் எடுத்துள்ள முயற்சிதான் இந்த சந்திப்பு. இது சாதிக்கான சந்திப்பு அல்ல. சாதிப்பதற்கான சந்திப்பு. 

 

ஜெயக்குமார் ஒரு அரசியல் பபூன். காமெடி பீஸ். அவர் இந்த சந்திப்பை விமர்சிக்கிறார். மோசமான நபரான ஜெயக்குமார் விமர்சிப்பது தெருவில் குரைப்பது போன்றது தான். கட்சியின் நலனுக்காக நாங்கள் பழசை மறந்துவிட்டு ஒன்றாக இணைந்துள்ளோம். பதவியிழந்த ஜெயக்குமாருக்கு பதவியை வழங்கியவர் சின்னம்மா. எடப்பாடியை முதலமைச்சராக்கியவர் சின்னம்மா. "இப்போது நான் தான் முதலமைச்சர் என்று அறிவித்தால் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கையெழுத்து வாங்கிய பிறகு அறிவியுங்கள்" என்று டிடிவி தினகரனிடம் கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி. 

 

இவர்கள் நடத்துவது கட்சி அல்ல, கம்பெனி. இவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை வரப்போகிறது. துரோகம் செய்பவர்கள் ஒன்றாக இருக்கின்றனர். கட்சி நிச்சயம் மீட்கப்படும். சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது மரியாதை நிமித்தமானது தான். எடப்பாடி பழனிசாமியின் மகன் ஹோட்டலில் யார் யாரை சந்தித்தார் என்பது தெரியும். கே.பி.முனுசாமி அமைச்சர் துரைமுருகனோடு தொடர்பு வைத்துள்ளார். கோடநாடு வழக்கு பற்றி பேசினாலே நடுங்குகிறார் பழனிசாமி. நேரடியாக ஒருவரை சந்திப்பது என்பது மனிதப் பண்பு. 

 

ஆர்.பி.உதயகுமார் போல் ஒரு பச்சோந்தியை எங்குமே பார்க்க முடியாது. சின்னம்மா முதல்வராக வேண்டும் என்று மொட்டையடித்தவர் உதயகுமார். இந்தக் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமே உதயகுமார் தான். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஜால்ரா அடிப்பது உதயகுமாரின் வழக்கம். அவருக்கான பாடம் விரைவில் கிடைக்கும். அதிமுகவை மீட்டெடுப்பதற்கு ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் மிக முக்கியம். எட்டப்பனுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு செயல்படும் பழனிசாமி போன்றவர்கள் அதிமுக எனும் பாலில் விழுந்த விஷம். அந்த விஷத்தை நீக்கி அதிமுகவை வெற்றிபெற வைப்பது தான் நோக்கம். அதற்கான பணியை ஓபிஎஸ் தொடங்கியிருக்கிறார்.”

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.