Skip to main content

கவிஞரைக் கடத்திய கவிஞர்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

கவிக்கோ அப்துல்ரகுமானை அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழின் தலைசிறந்த தத்துவச் சிந்தனையாளரான அவர், உலக இலக்கியஙக்ளைக் கற்றவர். உலகின் புகழ்பெற்ற கவிதை வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே உண்டு. கஜலின் காதலரான அவரால்தான் இன்று தமிழ்க் கவிஞர்கள் பலரும், கஜலின் தாக்கத்தில் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 'கற்பனைகள் / என்னிடமிருந்து / என்னை /  இழுத்துச்செல்கின்றன. /- என்றெல்லாம் எழுதிய, கற்பனைக்கு எட்டாத கற்பனையாளர். இவரைக் கவிஞர்களின் கவிஞர் என்று சொல்லலாம். அவரோடு அவரது கடைக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 


கவிக்கோ கவிதையால் மட்டுமல்ல; தனிமனிதப் பண்பிலும் சிகரம் போன்றவர். சக கவிஞர்களின் மீது கொஞ்சமும் பொறாமை கொள்ளாதவர். சக இலக்கியவாதிகளையும் பேரன்பால் நனைத்தவர். அப்படிப்பட்ட அவர் ஒரு கவிஞரைக் கடத்தினார். கடத்தப்பட்டவரும் சாதாரணமானவரல்ல. அந்தக் கடத்தல் அராஜகக் கடத்தல் அல்ல; அன்புக் கடத்தல். அந்த நாள் அடிக்கடி என் நினைவில் சுழன்று இதயத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

kaviko abdul rahman story


ஒருநாள் இரவு கவிக்கோ கைபேசியில் வந்தார். பேச்சுவாக்கில், “இன்று கவிஞர் மு.மேத்தாவின் 70 ஆவது பிறந்தநாள். அவரை நேரில் சென்று வாழ்த்தினேன்” என்றேன். ”அப்படியா? என்றவர், ”நானும் வாழ்த்தவேண்டுமே” என்றார்.”கைபேசியில் அவரை அழைத்து வாழ்த்துங்கள் என்றேன்”. “இல்லை, நேரில் வாழ்த்தவேண்டும். நீங்களும் வாருங்கள்” என்றார். அப்போது மணி இரவு மணி 8-ஐ கடந்துவிடிருந்தது.“இந்த நேரத்தில் நான் கிளம்பி வரவேண்டுமா?”- என்று தயங்கிய என்னை, வற்புறுத்தி அழைத்தார். நான் கவிக்கோவின் திருவான்மியூர் கடற்கரைச் சாலை இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி 9.45.
 

கவிக்கோ உற்சாகமாகக் காத்திருந்தார். அவரது பேரனான டாக்டர் அசீமைக் கார் ஓட்டச் சொன்னார். பெசன்ட் நகர் ராஜராஜன் சாலையில் இருக்கும் மு.மேத்தாவின் இல்லத்திற்குச் சென்றோம். போகும் போதே கவிக்கோ வந்துகொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தகவல் கொடுத்தேன். இந்த நேரத்திலா? என்று மேத்தா தயங்கினார். ஏனெனில் அண்மையில்தான் அவர் இதய அறுவை சிகிச்சையை முடித்திருந்தார்.

kaviko abdul rahman story

(ஆரூர் தமிழ்நாடன்)

எனினும் வாசலில் காத்திருந்த மேத்தா, கவிக்கோவை வரவேற்றுவிட்டு, ’அண்ணே, இதற்காக இவ்வளவு தூரம் வரவேண்டுமா? உங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன்” என்றார். கவிக்கோ அவரை விடவில்லை. ”காரில் ஏறுங்கள் மேத்தா” என்றார். “எங்கே?” என மேத்தா கேட்க, ”அப்படியே ஒரு ரவுண்ட் பேசிக்கொண்டே போய் வருவோம்” என்றார் கவிக்கோ. அவரது வற்புறுத்தலில், வேறு வழியின்றி மேத்தா காரில் ஏறிக்கொண்டார். 

இப்படி அந்த இரவு நேரத்தில் கவிஞர் மேத்தாவை அன்பாகக் கடத்திய கவிக்கோ, காரை நேராக பெசன்ட் நகரில் இருக்கும் கேரள ஓட்டல் ஒன்றிற்கு விடச்சொன்னார். நாங்கள் மறுத்தும் கேளாமல் விதவிதமாக  அங்கே  உணவுவகைகளை வரவழைத்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சாப்பாட்டில் மிகுந்த கட்டுப்பாட்டைக்  கடைபிடித்து வந்த மேத்தா, கவிக்கோவின் உபசரிப்பில் மிரண்டுபோனார். எனினும் கவிக்கோ விடவில்லை. தன் அன்பால் எங்களை உபசரித்துத்  திக்கு முக்காட வைத்தார்.
 

பின்னர், கடற்கரையோரம் காரை நிறுத்தச் செய்து, கொஞ்ச நேரம் இதயம் குளிர இலக்கியம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, மேத்தாவை, அவரது வீட்டில் கொண்டுபோய்ச் சேர்ந்தபோது நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிட்டது. ஒரு சக கவிஞனைப் பேரன்பின்  மிகுதியால் இரவில் கடத்தில் சென்று, அவரது பிறந்தநாளைக் கொண்டாடிய கவிக்கோவின் மாண்பை, எண்ணிப் பார்த்தால், இதயத்தை ஏக்கம் வந்து தாக்குகிறது. இப்படியொரு கவிஞரை எப்போது பார்ப்பது?

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்... புன்னகை என்றும் தங்கட்டும்” - கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Poet Mamani Aroor Tamil Nadan Expressed his congratulations for pongal

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இனிய உதயம் பத்திரிகை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள கவிதையில்.,

பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்!
புன்னகை என்றும் தங்கட்டும்!
எங்கள் தமிழர் வாழ்கவென
இதயம் உரக்கச் சொல்லட்டும்!

கரும்பாய் நெஞ்சம் இனிக்கட்டும்!
கனவுகள் கண்முன் மலரட்டும்
அரும்பாய் இன்றி பேரன்பும்
அழகாய் பெரிதாய் மலரட்டும்!

மஞ்சள் இஞ்சி மணக்கட்டும்!
மகிழ்வே எங்கும் பெருகட்டும்!
வஞ்சம் சேரா வாழ்வினிலே
வளங்கள் எல்லாம் சேரட்டும்!

கழனிகள் எல்லாம் செழிக்கட்டும்!
கண்ணீர் நதிகள் மறையட்டும்!
உழவைச் சுமந்த முதுகெல்லாம்
உடனாய் மகிழ்வைச் சுமக்கட்டும்!

உள்ளம் என்னும் திடலினிலே
உணர்வுப் புழுதியும் பறக்கட்டும்!
ஜல்லிக் கட்டுக் கண்களிடம்
தக்கவர் எல்லாம் வீழட்டும்!

காற்றும் கவிதை பேசட்டும்!
காதலின் ஆழம் கூடட்டும்!
ஊற்றாய் பொங்கும் பேரன்பில்
உயிர்கள் சுகமாய் நனையட்டும்!  

மனிதம் ஒன்றே நம்கொள்கை!
மகிழ்ச்சி ஒன்றே நம்பாதை!
புனிதம் என்றால் ஈகைதான்!
புன்னகை வீதியில் நம் பயணம்!

சங்கம் கண்ட தமிழன்னை
சரிதம் தொடர்ந்து எழுதட்டும்!
பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலிது
பூவாய் வாழ்த்தை இறைக்கின்றேன்.!

Next Story

கொலையுண்ட மகனை உயிர்ப்பித்த சிவன்; ‘குஷ்மேஷ்வர் ஜோதி லிங்கம்’ சிவாலயத்தின் கதை

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

குஸ்மேஷ்வர் நாத் மந்திர் என்பதொரு சிவாலயம். இந்த ஆலயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஹேலா என்னுமிடத்தில் பிரதாப்காட் மாவட்டத்தில் இருக்கிறது. ‌வேத காலத்தில் கூறப்படும் "ஸை' என்னும் நதியின் கரையில் ஆலயம் உள்ளது. குட்ஸார்நாத் மந்திர் என்ற பெயரிலும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. சிவபுராணத்தில் இந்த கோவிலைப் பற்றிய கதை உள்ளது.

 

பரத்வாஜ வம்சத்தைச் சேர்ந்தவர் சுதர்மா. ஆற்றின் கரையில் இவரது வீடு இருந்தது. இவர் சிவபக்தர். எப்போதும் சிவனை வழிபட்டுக் கொண்டேயிருப்பார். இவருடைய மனைவியின் பெயர் சுதேஹா. வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்கும் அவள் தன் கணவருக்கு சேவை செய்வதிலும் மிகுந்த அக்கறையுடன் இருந்தாள்.

 

சுதர்மா அனைவரையும் மதிப்பார். தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பார். தினமும் "அக்னிஹோத்ரம்' என்னும் சடங்கைச் செய்வார். மூன்று நேரங்களிலும் பூஜையில் ஈடுபடுவார். சூரியனைப் போல் அனைவரையும் அவர் ஈர்ப்பார். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் பின்பற்றி நடப்பார். அவர் தன் சீடர்களுக்கு வேதத்தைக் கற்றுத்தந்தார். வசதி படைத்தவராகவும் தர்மப்பிரபுவாகவும் இருந்த அவர் நல்ல மனம் கொண்டவராகவும் இருந்தார்.

 

எனினும் அவருக்கு வாரிசில்லை.அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஆனால் அவரது மனைவி கவலைப்பட்டாள். தனியாக அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதாள். குழந்தையில்லாத அவர்களை கேலியும் கிண்டலுமாக பலரும் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து தன் தங்கையை இரண்டாவது மனைவியாக கணவருக்கு திருமணம் செய்துவைக்க அவள் தீர்மானித்தாள். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ள சுதர்மா மறுத்தார். அவள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்க, இறுதியில் அவர் சம்மதித்தார். அக்காவின் விருப்பத்திற்கு தங்கையும் ஒப்புக்கொண்டாள்.

 

அவளது தங்கைக்கும் கணவருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் மூவரும் தினமும் 100 சிவலிங்கங்களை களிமண்ணில் செய்து, அவற்றை அருகிலிருக்கும் குளத்தில் கொண்டுபோய் போடுவார்கள். இதையொரு சடங்காகவே அவர்கள் செய்து வந்தார்கள். தங்கை குஸ்மாவுக்கு சிவபெருமானின் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அதற்காக சந்தோஷப்பட்ட அக்கா சுதேஹா காலப்போக்கில் தன் தங்கையின் மீது பொறாமை கொண்டாள்.

 

சிறுவன் வளர்ந்து வாலிபப்பருவம் எய்தினான். அவனுக்கு திருமணம் நடந்தது. மணப்பெண் வீட்டிற்கு வந்ததும் அவளைப் பார்த்து சுதேஹா எரிச்சலடைந்தாள். ஒருநாள் யாருமில்லாத நேரத்தில் தன் தங்கையின் மகனை சுதேஹா பல துண்டுகளாக வெட்டி, ஆற்றில் கொண்டுபோய் போட்டாள்.  இப்படிப்பட்ட கொடூரச் செயலைச் செய்து விட்டு எதுவுமே தெரியாததைப் போல அவள் இருந்தாள்.

 

புதிதாக வந்த மணப்பெண் மறுநாள் கண்விழிக்கும்போது தன் கணவன் இல்லாததைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதறினாள். வீட்டில் சில இடங்களில் குருதிக்கறை இருப்பதை அவள் பார்த்தாள். எனினும் அதற்குப் பின்னணியில் நடந்திருக்கும் சதியை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் எதுவுமே நடக்காததைப் போல தினமும் சிவனுக்கு பூஜை செய்துகொண்டே இருந்தார் சுதர்மா. பூஜையில் கணவருக்கு உதவியாக இருந்தாள் குஸ்மா.

 

தன் மகன் படுத்திருந்த கட்டிலையே கவலையுடன் சுதர்மா பார்த்தார். தனக்கு குழந்தையை அளித்த சிவபெருமான் நிச்சயம் தனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். தான் எப்போதும் செய்யக்கூடிய 100 மண் சிவலிங்கங்களை நீரில் போடுவதற்காக அவர் சென்றார்.

 

அப்போது அங்கு கரையில் தன் மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. அனைத்துமே சிவனின் திருவிளையாடல்கள் என்று எண்ணிக்கொண்டார். அவருடன் குஸ்மாவும் அப்போதிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சிவபெருமான் ஜோதி வடிவத்தில் தோன்றி, "கொடூரச் செயலைச் செய்த சுதேஹாவை நான் வதம் செய்யட்டுமா?'' எனக் கேட்க, "வேண்டாம்'' எனக் கூறினாள் குஸ்மா.

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

மேலும், ஜோதி வடிவத்தில் சிவன் தோன்றிய இடத்திலேயே நிரந்தரமாக இருந்து மக்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க வேண்டுமென அவள் சிவனைக் கேட்டுக்கொண்டாள். அதற்கு சிவன் சம்மதித்தார். அந்த இடத்தில் தான் இப்போதைய ஆலயம் இருக்கிறது.

 

குஸ்மா கேட்ட வரத்தின்படி அமைந்த கோவில் என்பதால் அவளின் பெயரும் ஆலயத்தின் பெயருடன் சேர்ந்துகொண்டது. இதுதான் "குஸ்மேஷ்வர்நாத் மந்திர்' என்ற சிவாலயத்தின் கதை. இந்த ஆலயத்திற்கு வந்து நீராடிவிட்டு சிவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து பிரச்சினைகளும் தீருமென்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தைத் தேடி உலகமெங்குமுள்ள சிவபக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். அலஹாபாத் நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம்.