Skip to main content

விசாரணைக்குச் சென்ற நீதிபதி மிரட்டப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை - இயக்குநர் கரு. பழனியப்பன் கோபம்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
,g

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் பதிலளிக்கிறார்.

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

எந்தக் குற்றமும் செய்யாத ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண் மக்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று கொலை செய்தார்கள் என்ற கோபமே தற்போது அனைவரின் மனதிலும் ஆறாமல் இருந்து கொண்டிருக்கின்றது.  இன்றைக்கு காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் எல்லாம் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதைப் போன்று எவ்வளவோ சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இவ்வளவு கொடூரமாக ஒரு சம்பவத்தை நாங்கள் இதுவரை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். உங்களுக்கும் எனக்கும் இது ஒரு செய்திதான். அதில் நாம் சம்மந்தப்பட்டவர்கள் இல்லை. காவல்துறை மூத்த அதிகாரிகளே அதிர்ந்து போகிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய மூர்க்கத்தனமான சம்பவமாக இருக்க முடியும்.

 

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளதே? 

 

உண்மை வெளியே வர வேண்டும். இதை நாம் அனைவரும் விடாமல் இந்த விஷயத்தை ஃபலோ செய்துகொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குற்றத்துக்குரிய நீதி கிடைக்கும். இந்த ஊடங்கள் இவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டு காட்டியதால்தான் அந்தப் பெண் காவலர் ரேவதிக்கு உரிய விடுப்பு கிடைத்துள்ளது. தற்போது காவலர் ஒருவர் அவரது வீட்டிற்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளார். அது எவ்வளவு காலம் நிலைபெறும் என்று தெரியவில்லை. அது நிலைபெறுவதற்கு என்ன வழி இருக்கிறது என்றால், இந்த ஊடகங்களும், பொதுமக்களும் இந்த வழக்கைக் கண்காணிப்பதும், அதைப் பின்தொடர்வதும்தான் அவர்கள் இருவருக்கும் உரிய நீதியைப் பெற்றுதரும்.

 

காவல்துறையும் ஆட்சியாளர்களின் கீழ்தான் வருகிறது. எனவே இந்த விஷயத்தில் அவர்களும் தொடர்பில் இருப்பார்கள் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

இந்தக் கொலையை வெளியே கொண்டுவந்ததில் ஊடகத்திற்குப் பெரிய பங்கு உண்டு. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் இவை இரண்டும் தொடர்ச்சியாக இதனைப் பேசிக்கொண்டே இருந்தார்கள். 'நக்கீரனில்' இது சம்பந்தமாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருந்து. பல ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை அம்பலப்படுத்திக்கொண்டே சென்றார்கள். அதுவே இந்த வழக்குப் பெரிய அளவில் பேசப்பட காரணமாக இருந்திருக்கிறது. உயர்நீதிமன்றக் கிளை வழக்கை நடத்துகிறது. நீதிபதி இதுதொடர்பாக விசாரணைக்குச் செல்கிறார். போனால் அங்கே அவருக்கு உரிய மரியாதைத் தரப்படவில்லை. விசாரணைக்குச் சென்ற நீதிபதி மிரட்டப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று அனைவரும் கூறுகிறார்கள். 

 

http://onelink.to/nknapp

 

அந்த அளவில் தான் காவல்துறை நீதிதுறையினருக்கு மரியாதைத் தருகிறார்கள். எந்த ஒரு சம்பவத்திலும் விசாரணை செய்யப் போகும் நீதிபதியிடம் கும்பிடு போட்டு தன் பங்கில் இருக்கும் நியாயத்தை எடுத்துக்கூறி தனக்குச் சார்பாக நோட் எழுத வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.  இந்த வழக்கில் மட்டும்தான் நீதிபதியை உட்கார வைத்துக்கொண்டு அவரை மிரட்டுவதும், அவரது பேச்சைக் கேட்காதது போல இருப்பதும் எனக் காவலர்கள் நடந்து கொண்டது இதற்கு முன் எப்போது நடக்காத ஒன்று. தங்களை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் தான் அவர்களைை இதை எல்லாம் செய்ய வைக்கிறது, என்றார்.
 

 

 

Next Story

“வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திமுக அரசு” - கரு.பழனியப்பன்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

karu pazhaniyappan talk dmk govt

 

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. கழக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. அராசா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், பெரியாரிய சிந்தனையாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் சுகிர்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இந்நிகழ்வில் பேசிய மதிமாறன், “திமுக மாணவர் அணிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்கள் இந்திக்காரர்களுக்கு எதிராக உள்ளோம் என்கிறார்கள். பாஜக கட்சியை எதிர்க்கும் கட்சிகள் 100 உள்ளன. தமிழ்நாடு முதல்வர் பிரதமராக வந்துவிடுவார்கள் என்கிறார்கள். அவர் வரட்டும். ஹிட்லரை வீழ்த்திய ரஷ்யாவின் ஸ்டாலின் போல், பாஜக ஆட்சியை திராவிட மாடல் கொண்டு வீழ்த்துவார் நம் தமிழ்நாடு முதல்வர். அதிமுக, திமுக எதிர்ப்பாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு கோமாளிகள். அன்று எமர்ஜென்ஸி இல்லாது இருந்திருந்தால் திமுக ஆட்சி காலம் காலமாக இருந்திருக்கும். ஸ்டாலின் கதையை முடிப்பேன் என்ற பன்வாரிலால், இன்று அவர் ஆட்சி வந்த பிறகு மிகச்சிறந்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்கிறார். காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இன்னும் 5 ஆண்டுகளில் மாணவர்கள் நன்றாக இருப்பார்கள்” எனப் பேசினார்.

 

இதையடுத்து பேசிய கரு.பழனியப்பன், “மற்ற கட்சிகள் எது பேசினாலும் திமுக பதில் சொல்லும். ஆனால், திமுக கேள்வி கேட்டால் மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்லத் தெரியாது. அண்ணாமலையைக் கேட்டால் கலைஞர் என்று சொல்லுகிறார். எந்தக் கட்சியை எதிர்க்கிறதோ அந்த கட்சியின் தலைவரையே தங்கள் கட்சித் தலைவர் என்று கூறுகிறது பாஜக. ஸ்டாலின் ஹீரோ ஆனது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி ஏற்ற நேரம். 20 நாட்களில் கொரோனா நோயாளிகளைச் சென்று நேரில் பார்த்தது தான் அவர் சூப்பர் ஹீரோ ஆன நேரம். ஆளுநர் ரவியை சட்டசபையை விட்டு ஓட வைத்தது தான் அவர் மாஸ் ஹீரோ ஆன நாள். கல்லூரிகளில் மாணவர் தேர்தல் வைக்க வேண்டும்.

 

பண்பாடு, இலக்கியம், மருத்துவம், கீழடியில் அருமையான ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று. மகாபாரதத்தை நம்புகிறவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யாமல் உள்ளனர். அண்ணாவிற்கு பிறகு கலைஞருக்கு மதுரையில் நூலகம் கட்டுகிறார். கலைஞர் நடமாடும் நூலகத்தை உதயநிதி அமைக்க உள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்துவது தான் இந்த திமுக அரசு. ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசினார். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அவர் அதில் வெற்றி பெற்றதன் மூலம் பதில் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும், தற்போது முதல்வராக இருந்த போதும் ஒரு நாளும் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசியது இல்லை. சட்டமன்றம் கட்ட மிக அருமையான இடம் உள்ளது” என்றார்.

 

 

Next Story

"அ.தி.மு.க காலகாலத்துக்கும் பா.ஜ.கவின் அடிமைதான்... தேர்தலுக்காக இந்த நாடகம்" - கரு.பழனியப்பன் பொளேர்

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

dfgj

 

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சி தேரதல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த சம்பவங்களும், அதன் காரணமாக அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க மாவட்டங்களில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.

 

அந்த வகையில் திமுகவை ஆதரித்து கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் திரைப்பட இயங்குநர் கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, " கடந்த 8 மாத திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். நிர்வாகம் தெரிந்த காரணத்தால் தான் கரோனாவில் இருந்து முதல்வரால் மக்களை காப்பாற்ற முடிந்தது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை கிண்டல் செய்த பாஜக, இன்றைக்கு உ.பியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்கு பாஜகவை விட வேறு ஒரு ஆள் உலகத்திலேயே இல்லை. எனவே மக்கள் பாஜகவை எப்போதும் போல புறக்கணிக்க வேண்டும். அதிமுக பாஜகவின் கொத்தடிமையாகவே காலகாலத்துக்கும் இருக்கும். கூட்டணியை விட்டு செல்வது எல்லாம் தேர்தலுக்கான நாடகம்" என்றார்.