Skip to main content

கர்நாடகத்தையும் தமிழகம் போல மாற்றுமா பாஜக?

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

ஒருவழியாக ஜனநாயகப் படுகொலையை நிறைவேற்றிவிட்டது பாஜக. பாஜகவின் முயற்சி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் பதவிவெறிதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 20 எம்எல்ஏக்களை விலைபேசி வாங்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி எப்படி விட்டது என்ற கேள்வி எழுகிறது. அவர்களை பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு பாஜகவிடம் எப்படி பணம் வந்தது என்ற கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள்.

 

கூட்டணி என்பது ஒருமித்த மனதுடன் எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைய வேண்டும். ஆனால், மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வந்து காங்கிரஸ் முதல்வராகவே பொறுப்பேற்ற சித்தராமையாவின் ஆதரவாளர்களும், பூர்வீகமாகவே காங்கிரஸில் இருந்து பழந்தின்று கொட்டை போட்ட சீனியர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒட்டவே இல்லை.

 

 

karnataka formula bjp applied in tamilnadu state

 

தனது குடும்பத்தின் நலனுக்காகவே கட்சியை நடத்திய தேவகவுடாவும், குமாரசாமியும் அடித்த கூத்துகள் அந்தக் கட்சியினரையே வெறுப்படையச் செய்தது. சித்தராமையா முதல்வராக வேண்டும் என்று காங்கிரஸுக்குள் உருவான கோஷ்டிகளை அவரே அடக்கி வைக்கவில்லை. அமைச்சர் சிவக்குமாரின் முதல்வர் கனவுக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்கள் ஒருபக்கம் ஆட்டம் போட்டார்கள்.

 

இதன் விளைவு தான் கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு. ஆனால், இப்போதும் கூட ஒரு 20 எம்எல்ஏக்களை கோடிக்கணக்கான ரூபாய் பணம்கொடுத்து சந்தைச் சரக்கைப்போல விலைக்கு வாங்கி, அவர்களை சுதந்திரமாக நடமாட விடாமல், தனது ஆட்சி நடைபெறும் மும்பையில் போலீஸ் பாதுகாப்புடன் சிறை வைத்திருந்த பாஜக, கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றதாக கூறுவது கேலிக்கூத்து. பாஜக அப்படிக் கூறுவதையே செய்தியாக்குவது மீடியாக்கள் நடத்தும் கேலிக்கூத்து என்கிறார்கல் அரசியல் விமர்சகர்கள்.

 

சரி ஆட்சி கவிழ்ந்துவிட்டது. இனி கர்நாடகத்தில் என்ன நடக்கும்?

 

நிச்சயமாக, சொந்தக் கட்சியின் கொறடா உத்தரவை மதிக்காத காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வார். அவருடைய உத்தரவை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள்.

 

karnataka formula bjp applied in tamilnadu state

 

இந்த வழக்கின் முடிவு பாஜகவின் விருப்பத்தை பொறுத்ததே என்பதற்கு ஏற்கெனவே தமிழகம் சாட்சியாக இருக்கிறது. வழக்கை உடனடியாக முடித்து, 20 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த பாஜக நிச்சயமாக உடன்படாது. ஏனெனில் அப்படி தேர்தல் நடத்தினால், தனித்துப் போட்டியிட்டு இரண்டு கட்சிகளும் வென்ற அந்த 20 தொகுதிகளிலும் கூட்டணியாக போட்டியிடும் நிலை உருவாகும். அப்படி ஒருவேளை போட்டியிட்டு மீண்டும் 20 தொகுதிகளை கைப்பற்றினாலோ, 15 தொகுதிகளை கைப்பற்றினாலோ பாஜக ஆட்சி கவிழ்வது உறுதி.

 

ஆகவே, நிச்சயமாக தமிழகத்தைப் போல கர்நாடகத்திலும் உடனடியாக தேர்தலை நடத்த பாஜக ஒப்புக்கொள்ளாது. தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படியே இயங்குகிறது என்று ஐஏஎஸ் அதிகாரிகளே ஆதாரங்களோடு நிரூபித்துள்ள நிலையில், நிச்சயமாக 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்தாமலே பாஜக மிச்சமுள்ள ஆண்டுகளை கடத்திவிடும். அதை ஒரு அசிங்கமாகவே பாஜக கருதாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

 

 

 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.