Skip to main content

கர்நாடகா தேர்தல்; பாஜகவின் சறுக்கலும் சாமர்த்தியமும்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Karnataka Elections; BJP's slippage and skill

 

கர்நாடக அரசியல் சூழலின் அரிச்சுவடி அறிந்த யாருக்கும் தெரியும், அம்மாநிலத் தேர்தலில் லிங்காயத்துகள், ஒக்கலிகர்களின் ஆதரவு முக்கியம் என்று. கடந்த தேர்தலில் பா.ஜ.க. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெல்ல எடியூரப்பாவும் அவர் சார்ந்த லிங்காயத்து சமூகமும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

 

இந்தத் தேர்தலில் பா.ஜ.க. அணியின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா இல்லாவிட்டாலும், கட்சிக்கு ஆதரவாக லிங்காயத்துகளின் வாக்குகளைத் திரட்டித் தர எடியூரப்பாவை தம் வசமே வைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால் அதன் வேட்பாளர்கள் பட்டியலில் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு இடமளிக்க மறுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவின் வட பகுதிகளில் பா.ஜ.க.வை வளர்த்தெடுத்தவர். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ஷெட்டர், அதிருப்தியில் காங்கிரஸில் சேர்ந்து போட்டியிடுவது பா.ஜ.க.வுக்கு பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

ஜெகதீஷ் ஷெட்டர் ஆறு முறை நின்று வென்ற ஹூப்ளி தார்வாட் தொகுதியை காங்கிரஸ் அவருக்கு அளித்திருக்கிறது. ஷெட்டருக்கு இடம் தராததின் விளைவாக, இந்த ஒரு தொகுதியை மட்டுமின்றி இந்த வட்டாரத்தில் 20 முதல் 25 தொகுதிகளை பா.ஜ.க. இழக்கும் என ஒருசில கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப ஷெட்டருக்கு ஆதரவாக 16 கவுன்சிலர்களும், பா.ஜ.க. கட்சிப் பொறுப்பிலுள்ள 50 நபர்களும் தம் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

 

vKarnataka Elections; BJP's slippage and skill

 

ஷெட்டர், பா.ஜ.க.வில் இடம் கிடைக்காமல் போன ஒரே லிங்காயத் தலைவரல்ல. கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரான லட்சுமண் சவாதியும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இன்னொரு கர்நாடக முன்னாள் துணை முதல்வரான கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. இவரும் லிங்காயத்துதான். ஆனால், ஈஸ்வரப்பா காங்கிரஸுக்கு மாறவோ, சுயேட்சையாகப் போட்டியிடவோ இல்லை. கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டார்.

 

இப்படி பெருவாரியாக லிங்காயத் பெருந்தலைவர்களைப் புறந்தள்ளும் பா.ஜ.க. முடிவு குறித்து விளக்கும் அரசியல் நிபுணர்கள், “சில குறிப்பிட்ட தலைவர்கள் மட்டுமே பா.ஜ.க.வில் கோலோச்சுவதை அக்கட்சி விரும்பவில்லை. எடியூரப்பா இல்லையென்றாலோ, ஷெட்டர் இல்லையென்றாலோ கட்சி ஜெயிக்காது என்பதைவிட, கட்சித் தலைமை யாரை நிறுத்தினாலும் வெற்றிபெறுவார்கள் என்ற நிலைமை மேலோங்குவதையோ அக்கட்சி விரும்புகிறது. தொண்டர்களின் பலத்தை நம்பும் கட்சி பா.ஜ.க. வாக்குச் சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் அதன் பலம் அதன் அசாதாரண எண்ணிக்கையிலான உறுப்பினர்களையே நம்பியிருக்கிறது. பா.ஜ.க.வில் அடுத்தகட்டத் தலைவர்கள் வரவேண்டும் என்பதற்காகத்தான் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களாக இருந்த பலரையும் கழித்துக் கட்டியிருக்கிறது.

 

Karnataka Elections; BJP's slippage and skill

 

இது கொஞ்சம் சிக்கலான முடிவு என்றாலும், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சி என்ற அளவில் இருக்கும் எதிர்ப்புகளை சமாளிக்க விமர்சனத்துக்குரிய எம்.எல்.ஏ.க்களை ஓரம்கட்டவே தைரியமாக இந்த முடிவை எடுத்திருக்கிறது” என்கிறார்கள்.

 

இன்னொரு தரப்போ, “ஷெட்டர் உள்ளிட்ட தலைவர்களைப் பா.ஜ.க. புறக்கணித்திருப்பது லிங்காயத்துகளிடம் கொண்டுசெல்லும் சேதி, லிங்காயத்துகள் பா.ஜ.க.வுக்கு ஒரு பொருட்டில்லை என்பதுதான். பா.ஜ.கவின் தலைமை, மாநிலத் தலைவர்களை பொருட்படுத்தவில்லை என்ற சேதியையே அளித்திருக்கிறது. இதற்கான விலையை தேர்தலில் பா.ஜ.க. செலுத்த நேரலாம்” என்கிறார்கள்.

 

Karnataka Elections; BJP's slippage and skill

 

ஆனால் இதற்கு நேரெதிராக, இவர்களுக்கு சீட் கொடுக்கப்படாததால் பா.ஜ.க.வுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். எடியூரப்பாவுக்கு இருக்கும் செல்வாக்கு, வேறெந்த லிங்காயத் தலைவருக்கும் கிடையாது. அவரே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்கு கோருகிறார். இரண்டாவதாக, எடியூரப்பாவுக்கு மறுக்கப்பட்ட சீட்டுக்கு ஈடாக அவரது இளைய மகனுக்கு இடமளிக்கப்பட்டுவிட்டது. அதேபோல ஈஸ்வரப்பாவைக் கழட்டிவிட்ட பா.ஜ.க., அவரது தொகுதியை அவர் மகனுக்கு அளித்துவிட்டது. ஷெட்டர், ஒன்றும் ஒரு மாஸ் தலைவர் அல்ல. அவரால் சில ஆயிரம் வாக்குகள் இழப்பு ஏற்படலாம். அதை எப்படி ஈடுகட்டுவது என பா.ஜ.க. அறியும். எனவே, காங்கிரஸ் வெறுமனே மனக்கணக்கு போடாமல், அசல் அரசியல் கணக்குகளைப் போட்டு தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டவேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

 

 - க. சுப்பிரமணியன்

 

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.