Skip to main content

மார்க்ஸியமா மறைந்தது? - தோழர் நல்லக்கண்ணு

Published on 14/03/2019 | Edited on 14/03/2019
Marxism Nallakannu

கார்ல் மார்க்ஸின் 200வது பிறந்தநாளின்போது, நக்கீரனில் வெளிவந்த தோழர் நல்லக்கண்ணுவின்  கட்டுரை...

 

கார்ல் மார்க்ஸ் பிறந்து 200வது ஆண்டு துவங்குகிறது. அவர் வாழ்ந்தது 65 ஆண்டுகள்தான். ஆனால் இந்த 200வது ஆண்டிலும் கூட அவர் வழிகாட்டியாகத்தான் இருக்கிறார். அவரின் கொள்கைகள் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக, 2001ஆம் ஆண்டில் பி.பி.சி. ஒரு ஆய்வறிக்கை தயார் செய்தது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் அறிவியல் துறையிலும், ஆய்வுத்துறையிலும் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்தவர்களைக் கணக்கெடுத்தார்கள். அப்போது மார்க்ஸ் பற்றி 'THE GREATER THINKER OF THE HUMAN SOCIETY' (மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர்) என்று குறிப்பிட்டனர். இந்த 200 ஆண்டு சகாப்தத்திலும் அது இன்றும் உண்மையாக உள்ளது. அதாவது 2001ல் சிறந்த அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்து வெளியான அந்த அறிக்கை இந்த 2018லும் உண்மையாக இருக்கிறது. 
 

1990ம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு மார்க்ஸியம், கம்யூனிஸம் ஆகியவற்றுக்கு இனி எதிர்காலம் கிடையாது என்று உலக முதலாளிகளும், உலக ஏகாதிபத்திய நாடுகளும் உலகெங்கும் அறிவித்தன. இவற்றுக்குப் பின்தான் பி.பி.சி. ஆய்வறிக்கை 2001ல் தயாரிக்கப்பட்டது. அப்போதும் மார்க்ஸிய கருத்துக்கள்தான் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாய் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 'மார்க்ஸிய கருத்துக்கள்தான் சமுதாய மாற்றத்திற்கான அடிப்படைக் கருத்தாய் இருக்கிறது. சுரண்டலற்ற சமுதாயம் ஏற்பட வேண்டும் என்பதை வெறும் கருத்தாக மட்டும் இல்லாமல் அதற்கான செயல்முறையைக் கொண்டது மார்க்சியம்' என்று பி.பி.சி.யின் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது. அது இந்த 2018லும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

கம்யூனிஸம் வீழ்ந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று சொல்லப்பட்ட பின்பும், இப்பொழுதும் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது, கியூபாவிலும் ஆட்சி நடக்கிறது, நேபாளத்திலும் பிளவுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து ஆட்சி நடக்கிறது. நேபாளம் இந்தியாவைப் போன்றே பல பிரிவினைகள் உள்ள நாடு. அங்கு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆக இவையெல்லாம் மார்க்ஸின் கருத்துக்களுக்கு இன்றும் வலு இருக்கிறது, எதிர்காலத்திலும் அது நீடிக்கும் என்பதை காட்டக்கூடியதாக இருக்கிறது.

 

communism

 


1990ம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கை கொண்டுவரப்பட்டது. தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற கொள்கையை வைத்து இனி எதிர்காலம் முதலாளித்துவத்திற்குதான் என்று சொல்லி வந்தனர். ஆனால், இன்று அந்த உலகமயமாக்கல் கொள்கையே உலகளவில் முதலாளித்துவத்திற்கு நெருக்கடியைத் தந்திருக்கிறது. இப்போதுள்ள நெருக்கடி என்பது அவர்களுக்குள்ளானதல்ல. ஒட்டுமொத்த முதலாளித்துவ சக்திக்கே ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். கார்ப்ரேட் ஆதிக்கம் உலகம் முழுவதும் தலையிட்டு ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டிற்கும் கலகத்தை உண்டாக்கி, அமைதியற்ற சூழ்நிலையை உண்டாக்கும் நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. கார்ப்ரேட் ஆதிக்கம் இன்று சீரழிந்து வருகிறது என்பதும் உறுதியாகத் தெரிகிறது. கார்ப்ரேட் ஆதிக்கம் அழிந்து முதலாளித்துவம் ஒழிய மார்க்ஸியமும், மார்க்ஸிய கருத்துக்களும் உதவும். ஏனென்றால் மார்க்ஸியம் ஒரு விருப்பக் கருத்தோ, அனுமானக் கருத்தோ இல்லை. அது மாற்றத்திற்கான, ஆய்வின் அடிப்படையிலான ஒரு முற்போக்கான கருத்து, கோட்பாடு. வெறும் மூலதனம் மட்டுமே உற்பத்தியைப் பெருக்காது. மனித உழைப்புதான் உற்பத்தியை பெருக்குகிறது. உபரி மதிப்புதான் இலாபத்திற்கு அடிப்படை என்று SURPLUS VALUE என்ற தத்துவத்தை உருவாக்கினார்.

 

இந்தியாவை பற்றி மார்க்ஸ்

'தி நியூயார்க் ஹெரால்டு ட்ரிபியூன்' (THE NEWYORK HERALD TRIBUNE) என்ற பத்திரிகையில் 'பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா' (BRITISH RULE IN INDIA) என்ற தலைப்பில் இந்தியாவைப் பற்றியும், ஆசியாவின் மிகப்பெரிய நாடான இந்தியாவைத் தன் வசப்படுத்தியது, இந்தியா போன்ற மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி அதில் இந்தியர்களை வேலைக்கனுப்பியது போன்றவற்றை எழுதியுள்ளார். 'இந்தியாவில் வறட்சி, தொடர் ஆட்சி மாற்றம், முகலாய படையெடுப்புகள், இப்படி பல மாற்றங்கள் ஏற்பட்டும்கூட அடிப்படை சமூக மாற்றம் ஏற்படவில்லை. ஆக, இந்தியாவின் கட்டமைப்பு அவ்வளவு பிற்பட்ட சமூகக் கட்டமைப்பாக உள்ளது' என்பவை பற்றியெல்லாம் அந்நூலில் எழுதியுள்ளார். 200 வருட பிரிட்டிஷ் ஆட்சி அதற்கு முன் இருந்த கட்டமைப்பையே வலியுறுத்தியது. புதிதாக ஏதும் செய்யவில்லை. பிரிட்டனில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு முன்பே இங்கு இயற்கை வளங்கள் ஏராளமாக இருந்தது. இங்கு பருத்தி உற்பத்தி அதிகம். இந்தப் பருத்தி உற்பத்தியை வைத்து, அதை நூலாக்கி, சன்னமான ஆடையாக்குவதெல்லாம் இந்தியாவில் மட்டுமே இருந்தது. அதே போல் ஏலம், கிராம்பு போன்ற இயற்கை வளங்கள் இருந்தன. அதேபோல் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலங்களில் “அவுரி சாயம்” என்ற சாயம்தான் பயன்பட்டது. ஆக, ஒரு பஞ்சை நூலாக்கி, வண்ண ஆடையாக்குவதில் இந்தியாதான் முதன்மையாக இருந்தது. பிரிட்டனில்கூட அதை செய்யமுடியவில்லை. அப்படியிருந்த நாட்டை சாதி, சமூக பாகுபாட்டைப் பயன்படுத்திக்கொண்டு, வியாபாரம் செய்ய வந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர் என்று சொல்லியிருக்கிறார். 
 

இங்கிருந்த பருத்தியையெல்லாம் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து நூலாக, ஆடையாக மீண்டும் இங்கு இறக்குமதி செய்தார்கள். அதனால் இங்கிருக்கும் கைத்தறி நெசவாளர்கள் தொழில் நசுக்கப்பட்டது. டாக்கா, காஞ்சிபுரம் பட்டு ஆகியவை அழிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அமைக்கப்பட்டவுடன் இங்கிருக்கும் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கே தொழிற்புரட்சி ஏற்பட்டதைப் பயன்படுத்தி இங்கே இயற்கையாய் வளர்ந்த தொழில்களையெல்லாம் நாசம் செய்தார்கள் என்று மார்க்ஸ் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா நாடல்ல, துணைக்கண்டம். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழையும்போது பிரிட்டனின் மக்கள்தொகை நான்கு, ஐந்து கோடியிருந்தது. ஆனால் அப்போதே இந்தியாவில் 30 கோடிபேர் இருந்தனர். இதனால் அவர்களுக்கு இந்தியா ஒரு சிறந்த வியாபார இடமாக இருந்தது. இங்கிருக்கும் மக்களையும் சுரண்டியிருக்கிறார்கள், இயற்கை வளங்களையும் சுரண்டியிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். மேலும் வளர்ந்த விவசாயமும் அளிக்கப்பட்டது. அவர்களின் வியாபாரத்திற்கும் சுரண்டலுக்கும்தான் அவர்களின் ஆட்சி பயன்பட்டதே தவிர இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. சர்.ஆர்தர் காட்டன் என்பவர் கங்கை, காவிரி இணைப்பு பற்றியெல்லாம் கூறினார். அதற்காக அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்ப அழைத்துக்கொண்டு, அவருக்கு தண்டனையும் அளித்தார்கள். அவர்தான் கொள்ளிடம் கால்வாய் மற்றும் கோதாவரி அணையை கட்டியவர். அதேபோல் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிக்குயிக்கிற்கு நிதியளிக்காமல் எவ்வளவு அலைக்கழித்தார்கள்? இவையெல்லாம் 'பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா' கட்டுரையில் மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

கம்யூனிஸம் - மார்க்ஸ்க்கு முன், மார்க்ஸ்க்கு பின் 

 

marx

 

மார்க்ஸ்க்கு முன்பு கம்யூனிஸத்தின் நோக்கங்களும் விருப்பங்களும் பொதுவானவையாக இருந்தன. எல்லோரும் சேர்ந்து வாழவேண்டும், சமதர்மம் வேண்டும் என்று விருப்பமாக இருந்தது. ஆய்வின் அடிப்படையில் இல்லை. மார்க்ஸ் ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து தொழில் வளர்ச்சி எங்கு ஏற்பட்டிருக்கிறது, அது யாருக்கு இலாபமாக இருக்கிறது என்று ஆய்வு ரீதியாக பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்துவைத்தார். தொழில் முன்னேறுகிறதென்றால் அதற்கு மூலதனம் மட்டும் முக்கியமில்லை, உழைப்புதான் முக்கியம். மனிதன் உழைத்தால்தான் உற்பத்தி செய்ய முடியும் என்பதை வரலாற்று ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆய்வு செய்து மார்க்ஸ் கூறியதுதான் மனித குலத்திற்கு நிரந்தர வழிகாட்டியாக இருக்கிறது.

 

கம்யூனிஸம், மார்க்ஸிஸம், லெனினிஸம், மாவோயிஸம்...

அனைத்திற்கும் அடிப்படைப்பார்வை மார்க்ஸிஸம்தான். மார்க்ஸிஸம் என்பது வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம்தான். இது ஏதோ கற்பனையில் செய்தததல்ல, விருப்பத்தினால் விளைந்ததல்ல. எப்படி சமூகம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்து, ஒவ்வொன்றிற்கும் எதிர்கருத்துகளை, எதிர்மறை வாதங்களை வைத்து கண்டுபிடித்த பெருமை உண்டு. உலகம் பலதரப்பட்டது, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அடிப்படைக்  கருத்து ஒன்றுதான். அதை வைத்துதான் லெனின், ரஷ்யாவில் புரட்சியை ஏற்படுத்தினார். சைனாவில் மாசேதுங் புரட்சியை ஏற்படுத்தினார். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டனர், என்றாலும் அடிப்படை ஒன்றுதான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
 

இன்றும் இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு அவரது தத்துவங்கள் அடிப்படையாக உள்ளது. இன்றைக்கும் அது நிலைக்கிறது. என்றைக்கும் அவரது தத்துவங்கள் வழிகாட்டும். அறிவியல், தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிகளை முதலாளித்துவம் எப்படி அழிக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் மார்க்ஸ் விவரித்துள்ளார். மொத்தத்தில் சமுதாயத்திற்கான, தொடர்ந்து முன்னேறுவதற்கான, முதலாளித்துவத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான, மானிட வளர்ச்சிக்கான கருத்துகளை ஆய்வுப்பூர்வமாக அறிவித்த பெருமை மார்க்ஸ்க்கு உண்டு. மார்க்ஸியம் என்றும் மறையாது, முதலாளித்துவத்தின் வேடம்தான் கலைகின்றது, மறைகின்றது!     

 

 

 

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.

Next Story

வியப்பில் ஆழ்த்திய கேரள முன்னாள் நிதி அமைச்சர் சொத்து மதிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The property value of the former finance minister of Kerala surprised

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில், வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 

இதனால், காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், தேர்தல் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதில், கேரளா முன்னாள் நிதி அமைச்சர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில், சிட்டிங் எம்.பியாக இருக்கும் ஆன்றோ ஆன்றனியும், பா.ஜ.க சார்பில் அனில் ஆன்றனியும் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் நேற்று முன் தினம் (01-04-24) மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 

அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ரூ.9.26 லட்சம் மதிப்பிலான 20,000 புத்தகங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாகவும், சொந்தமாக வீடு மற்றும் நிலங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 - 2021 ஆகிய காலகட்டத்தில் கேரள மாநில நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த போதும், தனக்கென சொத்து சேர்க்காமல், புத்தகங்களை வாங்கி அறிவை மட்டும் சொத்துக்களாக சேர்த்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தாமஸ் ஐசக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.