Skip to main content

கணவனை இழந்த பெண்கள்தான் டார்கெட்! குமரியை அலறவைக்கும் ராஜீவ்!

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

Kanyakumari Rajiv after Kasi

 

நாகர்கோவில் காசி அதிர்ச்சியிலிருந்தே அம்மாவட்டம் மீளாத நிலையில், கணவனைப் பிரிந்து வாழும் பெண்களைக் குறிவைத்து அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி தனிமையில் இருந்து அதை வீடியோ எடுத்து மிரட்டி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் குமரியைச் சேர்ந்த ராஜீவ் எனும் காமாந்தகன்.

 

கடந்த டிச. 31-ஆம் தேதி குழித்துறையை சேர்ந்த மஞ்சுளா, குளச்சலை சேர்ந்த சுதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் "மேல் புறத்தைச் சேர்ந்த ராஜீவ் என்பவன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அனுபவித்த தோடு, தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோக்களை காட்டி, தன்னைவிட்டு பிரிந்து செல்லுங்கள், இல்லையென்றால் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்'' என மிரட்டிவருவதாக புகார் கொடுத்தனர்.

 

இதுகுறித்து குழித்துறை மஞ்சுளா கூறும்போது, “2014-ல் ஜெஸ்டின் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடால் 2018-ல் அவரைப் பிரிந்து வயதான ஒரு தம்பதியினரைக் கவனித்துக்கொண்டு, அந்த வீட்டிலே தனியாக வசித்துவந்தேன். இந்த நிலையில் 2021-ல் எனது செல்போனுக்கு மூன்றுமுறை மிஸ்டுகால் வந்தது. அந்த நம்பருக்கு நான் திரும்ப தொடர்புகொண்டபோது ராஜீவ்னு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், வேற யாருக்கோ தொடர்பு கொண்டதாகவும், தவறாக இந்த எண்ணுக்கு வந்துவிட்டது எனவும் கூறி பேச்சைத் தொடர்ந்தார். "உங்கள் குரல் இனிமையா இருக்கே?... பாட்டு டீச்சரா?' என கேட்டு என்னையும் என் குடும்பச் சூழலையும் பற்றி தெரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினார்.

 

Kanyakumari Rajiv after Kasi

 

பிறகு அடிக்கடி தொடர்புகொண்ட ராஜீவ், ரியல் எஸ்டேட் நடத்திவருவதாகவும், என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதே லட்சியம் எனக்கூறி வலையில் வீழ்த்தினார். அதன்பின் அடிக்கடி தனிமையில் சந்தித்தோம். அப்படி தனிமையில் இருக்கும்போது வீடியோ எடுப்பதைத் தடுத்தேன். "நான்தானே உன்னை கல்யாணம் செய்யப்போறேன். என் மனைவியின் இந்த அழகான உடம்பை நான் எப்பவும் பார்த்து ரசிக்கணும். அதுக்குத்தான் வீடியோ' என பேசி, நாங்கள் அந்தரங்கமாக இருக்கும்போதெல்லாம் வீடியோவும் போட்டோவுமாக எடுத்து வைத்திருக்கிறார். அதுபோக என்கிட்ட இருந்த 15 பவுன் நகையையும் வாங்கிட்டார். இந்த நிலையில், “வீட்டில் திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும், ஆனால் உன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீட்டிலிருந்து என்னைத் துரத்திவிடுவார்கள். அதனால் அவர்கள் விருப்பத்துக்கு ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சிட்டு, உன்கூட குடும்பம் நடத்துவேன். கொஞ்ச நாள் பிரிஞ்சிருப்போம்” என்றார். அதற்கு சம்மதிக்காததால்தான் அந்த வீடியோக்களை வெளியிட்டுடுவேன்னு மிரட்டி என்னை துரத்தப் பார்க்கிறார்.


இந்த நிலையில் ராஜீவைப் பற்றி பல தகவல்கள் என் காதுக்கு வரத் தொடங்கியது. என் தூரத்து உறவுக்கார பெண்ணுடனும் இதேபோல் முகநூலில் இருந்து நம்பர் எடுத்து அவளை தொடர்புகொண்டு, இரண்டாம் திருமணம் செய்வதாகக் கூறி, நெருக்கமாக இருந்து கழற்றிவிட்டுள்ளார். இப்படி பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றியிருக்கிறார்” என்றார்.


சுதாவோ, “எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். ராஜீவ் என்னுடைய முகநூலிலிருந்து செல்போன் நம்பரை எடுத்து மிஸ்டுகால் கொடுத்துப் பழக்கமானார். ஆரம்பத்தில் நண்பராகப் பழகி, அதன்பிறகு அவருடைய ஆறுதலான பேச்சில் மயங்கி அவரிடம் என்னை இழந்தேன்.


என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாகவும், குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி கூறினார். நாங்கள் தனிமையில் இருக்கும்போது வீடியோ, போட்டோக்கள் எடுத்து வந்தார். என் கையிலிருந்த பணம், நகை எல்லாம் அவரிடம் கொடுத்துவிட்டேன். இந்த நிலையில் மெல்ல... மெல்ல என்னுடைய தொடர்பைக் குறைத்ததால் சந்தேகமடைந்து அவரின் செல்போனைப் பார்த்தபோது பல பெண்களிடம் அவர் தனிமையில் இருக்கும் வீடியோ, புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு பெண்ணின் பெயரில் ஃபோல்டர் போட்டு, அதில் அவர்களின் வீடியோக்களை பதிவுசெய்து வைத்திருந்தார்.


நான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவரிடம் கேட்டேன். “கணவரைப் பிரிந்து வாழும் பெண்களிடம் இந்த மாதிரி தொடர்பை வைத்துக்கொள்வதில் அதீத பிரியம். உங்களை மாதிரி பெண்கள்தான் ஈசியா விழவும் செய்வாங்க. அவர்களிடம் சொகுசா செலவு செய்வதற்கும் கறக்கவும் முடியும். ஏதாவது வம்பு பண்ணினா, உன் அந்தரங்க வீடியோவை உலகமே பார்க்கும்”னு மிரட்டினார்.


இதுகுறித்து விசாரணை நடத்திவரும் தனிப் படை போலீசார், “அந்த இரண்டு பெண்களும் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்ததையடுத்து அவர்களின் பெயர்களும் ரகசியமாக வைக்கப்பட்டது. அதேபோல் ராஜீவால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கவேண்டும்” என்றனர்.


இதுகுறித்து ராஜீவிடம் பேச நாம் முயற்சித்தபோது.... அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆஃப்பாக இருந்தது.

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.