Skip to main content

காசியிடம் ரொம்பவும் க்ளோஸாக இருந்த பா.ஜ.க.வினர்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

bjp


பெண்கள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த காசியின் வழக்கில், நாகர்கோவில் காவல்துறை தனிப்படையினர் ஏற்கனவே விசாரித்தறிந்த புலனாய்வுத் தகவல்களை ஆய்வு செய்து, தங்களது விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர், சி.பி.சி.ஐ.டி. போலீசார்.
 


காசி வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கத்தினரும் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சுரேஷ்ராஜனும் தனது கருத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். "பெண்களிடம் இத்தனை கீழ்த்தரமாக காசி நடந்துகொண்டது, குமரி மாவட்டத்திற்கே அவமானம். காசி கைதுடன், இந்த வழக்கை முடித்து விட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. ஆனால், காசியின் கூட்டாளிகள் பலருக்கும், குற்றச் செயல்களில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. காசியின் கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

suji


காசி வழக்கில், தி.மு.க. தரப்பினரின் சந்தேகப்பார்வை பா.ஜ.க. மீது படர்ந்திருப்பதை அறிந்தோ என்னவோ, "காசியோடு பா.ஜ.க.வினர் யாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை...'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். இதற்கு, எதிர்வினை ஆற்றும் வகையில் கம்யூனிஸ்ட் தோழர்கள், "காசியிடம் ரொம்பவும் க்ளோஸாக இருந்த அந்த வழக்கறிஞர் பா.ஜ.க. ஆதரவாளர்தானே? எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலத்தான் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு இருக்கிறது''’ என்று சிரிக்கின்றனர்.
 


மனித பாதுகாப்புக் கழக நிறுவனர் டாக்டர் ஜெய்மோகனோ, "பல குடும்பங்களைச் சீரழித்து விட்டான் காசி. அவன் நடத்திய பணவேட்டையில், பினாமிகளுக்கும் பங்கு போயிருக்கிறது. காசியின் பினாமிகளைக் கைது செய்யாவிட்டால், போராட்டம் வெடிக்கும்'' எனச் சீறிவிட்டு, "சி.பி.சி.ஐ.டி.யில் உள்ள நேர்மையான அதிகாரியின் தலைமையில் இந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும். அதே நேரத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
 

suji


காசி தி.மு.க.வைச் சேர்ந்தவன் என, 2012-ஆம் ஆண்டு தரப்பட்ட, நாகர்கோவில் நகர 33-ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் உரிமைச் சீட்டை, பொதுவெளியில் பரப்பும் ஒரு தரப்பு, "பாலியல் வழக்கின் மீது அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் “உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் மட்டும் போதாது. கட்சியோடும், கட்சியினரோடும் நெருக்கமாக இருப்பவனே கட்சிக்காரன். இந்தக் காசி, தி.மு.க. கட்சியோடோ, கட்சியினரோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவன். அதுவும் அந்த உறுப்பினர் அட்டை, 8 வருடங்களுக்கு முந்தையது'' என்கிறார்கள்.

தொடக்கத்தில், எப்படியாவது காசியைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு, போலீஸ் அதிகாரிகளைச் சுற்றி வந்த அவனுடைய கூட்டாளிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் காசிக்கு எதிராகப் புகார் அளிப்பதைத் தடுக்கின்ற காரியத்திலும் ஈடுபட்டனர். தற்போது நிலைமை மாறிவிட்டது. தனிப்பட்ட முறையில், எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாத காசியை பலிகடா ஆக்கிவிட, கூட்டாளிகளே முடிவெடுத்து விட்டனர். ஆதரவு அளித்து வந்தவர்கள் திடீரென கைவிட்டது, காசியின் குடும்பத்தினரை 'அப்செட்' ஆக்கியிருக்கிறது.
 

bjp

 

http://onelink.to/nknapp


காசி பெண்களை வேட்டையாடியபோது, தாங்கள் உடனிருந்த தடயங்கள் மற்றும் சி.சி.டி.வி. பதிவுகளை அழிக்கும் முயற்சியில் கூட்டாளிகள் தீவிரமாக இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்த மிரட்சியான சூழ்நிலையில், காசியால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களிடமும் புகார் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரை வளைத்துவிடக்கூடிய அளவுக்கு வல்லமை பெற்றவர்களாக காசியின் கூட்டாளிகள் இருப்பதாகவும், திருமணம் ஆகிவிட்ட பெண்களும், திருமணத்தை எதிர்கொள்ள வேண்டிய பெண்களும், பாதுகாப்பற்ற நிலையில் புகார் தர மறுத்துவிட்டதாகவும், அரசியல் கட்சியினரே சந்தேகங்களை எழுப்புகின்றனர். இத்தனை குளறுபடிகளையும் களைந்து, காசி வழக்கின் விசாரணையை மிக நேர்மையாக நடத்துவதென்பது, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

- மணிகண்டன்

 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.