Skip to main content

நான்தானே உன் புருஷன்? திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்... காசியைப் பற்றி இளம்பெண் கூறிய பரபரப்பு தகவல்! 

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

suji


நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆறு நாட்கள் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ள காசியிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன், "ஏராளமான பெண்கள் என்னிடம் தாராளமாக பழகினார்கள். நானாகச் சென்று எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை. யாரையும் திருமணம் செய்தேனா? இந்தக் காசி யாரென்று, என் மீது புகார் அளித்த பெண்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்று கூறியதாக நாளிதழ்களில் செய்தி வெளிவர, நம்மைத் தொடர்புகொண்டார் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
 


"எனக்கு ஏற்பட்ட கொடுமைதான், மற்ற பெண்களுக்கும் நடந்திருக்கிறது. காசி கைதானவுடன், எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்கிறோம். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்கிறோம். அவனது முகத் தோற்றத்தையும், உடலமைப்பையும் மட்டுமே பார்த்து, காதல் மயக்கத்தில் எங்களைப் பறிகொடுத்தோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. பெண்களை ஏமாற்றுவதில் அவன் கை தேர்ந்தவன். பேசிப் பேசியே வசியம் செய்துவிடுவான். அவனுடைய பேச்சில்தான் கரைந்து போனோம். ஆண்களின் வசீகரப் பேச்சால் ஈர்க்கப்பட்டு, எங்களைப் போலவே, ஏமாந்து கொண்டிருப்பவர்கள் அனேகம் பேர். காசி போன்ற கபடவேடதாரிகளை அடையாளம் கண்டு, பெண்கள் ஒதுங்கிவிட வேண்டும். போலித்தனமான ஆண்களிடம் பெண்ணினம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் கற்ற வாழ்க்கைப் பாடத்தை, நக்கீரனிடம் சொல்கிறோம்''’ என்றார் குமுறலுடன்.

காசியால் பாதிக்கப்பட்டவர்களின் கசப்பான அனுபவத்தை, தன் கைப்பட எழுதியே தந்திருக்கிறார், அந்தப் பெண்!  அவர் எழுதியதை அப்படியே தந்திருக்கிறோம்…

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி (alias) சுஜி, 26 வயது ஆண், ‘அன்பே சிவம்’ என்ற போர்வையில் ‘Who is perfect, where is perfect = Suji’ எனக் கூறிக்கொள்வான். சமூக வலைத்தளத்தில் (Facebook, Instagram, Tiktok, Dating application) தனது பெயரில் கணக்குகளைத் தொடங்குவான். சமூக வலைத்தளத்தில் பல போலி கணக்குகள் தனது பெயரில் வலம் வருகின்றன எனத் தன்னிடம் பேசும் பெண்களிடம் கூறுவான். "என்னுடைய பெயரில் பல கணக்குகளை எனக்கு வேண்டாதவர்கள் சமூக வலைத்தளத்தில் துவக்கி பெண்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னைப் போல் நல்லவனாக பல ஆண்கள் இருப்பதில்லை'' என்று கூறுவான்.

தன் தாயின் மீது மிகவும் பாசமாக இருப்பது போன்றும், தன் தந்தை மாதிரி ஒரு நல்ல மனிதரைப் பார்த்ததில்லை எனவும், தன் சகோதரி மீது மிகவும் அன்பு வைத்திருப்பவர் போன்றும், பெண்களைத் தெய்வமாக மதிப்பவர் போன்றும், சமூக சேவை, பெண்ணியம் போற்றுதல், கடவுள் நம்பிக்கை மிக்கவர், நாகரிகம், தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பவர் போல, சமூகவலைத்தளங்களில் காட்டிக்கொள்வான்.
 

 

suji


காதலர் தினத்தன்று தனது பெற்றோரின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் upload செய்து, "பெண்களே! உங்களுக்கு ஒருவரைப் பிடித்து இருந்தால் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். உங்கள் பெற்றோரை மிகவும் நேசியுங்கள். ஒரு பையன் உங்களைக் காதல் செய்கிறேன் என்று சொன்னால், உடனே நம்பாதீர்கள். வெளித் தோற்றம் சில வருடங்கள் மட்டுமே, மனதைப் பார்த்து காதல் செய்யுங்கள். காதல் என்பது இதுவே'’ என்று அறிவுரை கூறுவான். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவன் போலவும், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாதவன் போலவும், தன்னை மிகவும் கருணை மிக்கவன் போலவும், பரந்த மனப்பான்மை உள்ளவன் போலவும், சமூக வலைத்தளத்தில் காட்டிக் கொள்வான். பெண்களிடம் கை ஓங்குபவன் ஆண் மகன் அல்ல என்பது இவனது சொற்பொழிவு.

சமூக வலைத்தளங்களில், இவற்றைப் பார்க்கும் பெண்கள் இவனை மிகவும் நல்லவன் என நம்பிவிடுவர். பெண்களிடம் நட்பாக பேச்சு கொடுப்பான். "நான் அவன் இல்லை'’ பாணியில் ஒவ்வொருவரிடமும் தன்னை ஒரு தொழிலதிபர், Pilot, Engineer, Lawyer, ஆழ்கடல் மூழ்காளர், Gym Trainer, Suguna Chicken Dealer என்று அறிமுகப் படுத்திகொள்வான்.

சமூகசேவை, பெண்ணியம் போன்ற கருத்துகளை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிடுவான். அதில் comment செய்யும் பெண்களின் கருத்துகளுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்துவான். பெண்களை, வயது வாரியாக, குடும்ப சூழ்நிலை, பணம், அப்பாவித்தனம், தொழில், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் என வகைப்படுத்துவான். மேலும், காதலில் தோல்வியுற்ற பெண்கள், மனதளவில் தனிமையில் இருப்பதாகக் கவலையில் உள்ள பெண்கள் என்றால், வளைப்பது இவனுக்கு மிகவும் சுலபம்.

அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வர, அந்தப் பெண்ணிற்கும் அவள் குடும்பத்திற்கும் உள்ள உறவைப் பற்றி தெரிந்து கொள்வான். இப்பெண்னை பெற்றோர் கண்காணிக்கிறார்களா? தப்பு செய்தால் அடிப்பார்களா? சக பெண்களின் நம்பிக்கையை இழந்தவர்களா? பெண்களிடம் நல்ல நண்பர்களாகப் பழகுகிறார்களா? என ஆராய்வான். மிரட்டினால் அப்பெண்ணோ, அவளது குடும்பத்தினரோ பயப்படுவார்களா? பிரச்சனை செய்வார்களா? என்று கணக்கு போடுவான். 98% அவன் போட்ட கணக்கு, பெண்களைப் பற்றி சரியாகவே இருக்கும்.
 

suji

 


அவர்களது நம்பிக்கையைப் பெற என்ன பேசினால் அந்தப் பெண்ணிற்கு பிடிக்குமோ, அதற்கு ஏற்றாற்போல பேசி, மனதில் இடம் பிடிப்பான். உடல் நலம், மன நலம், பாதுகாப்பு என அக்கறை செலுத்தி, உரிமை எடுத்துக் கொள்வான். அந்தப் பெண்ணிற்கு தாயோ, தந்தையோ இல்லையெனில், அவர்கள் ஸ்தானத்தில் இருந்து அக்கறை காட்டுவது போல பேசி மனதில் இடம் பிடிப்பான். அடுத்த கட்டமாக தொலைபேசி எண் வாங்குவான். தொலைபேசி எண் கொடுக்க மறுக்கும் பெண்களிடம், “என்னிடம் வேலை ரீதியாக உதவி கேட்டு வருபவர்களுக்கு, உங்கள் துறை சார்ந்தவராக இருந்தால், உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். அவர் குடும்பம் நன்றாக இருக்கும் என்று கூறி தொலைபேசி எண் வாங்குவான்.

சில மாதங்கள் நட்பாகப் பேசும் அவன், ஒரு நாள் அந்தப் பெண்ணிடம் "நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதம் என்றால் உங்கள் வீட்டில் பெண் கேட்கிறேன். உங்கள் பெற்றோர் தொலைபேசி எண் கொடுங்கள்'' என்பான். மேலும், "உங்களுடைய கடந்த காலம் எனக்குத் தேவையில்லை. கடந்த காலம் பற்றி யோசித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. இப்பொழுது எப்படி வாழ்கிறோம்? இனிமேல் எப்படி வாழப்போகிறோம்? என்பதுதான் முக்கியம்''’ என்பான்.

இவனுடன் பழகும் பெண்கள், இவனைப் பற்றி விசாரிக்கும் முன்பே, "எனக்கு தொழில்ரீதியாக என் ஊரில் ஆயிரம் எதிரிகள் உள்ளனர். நான்கு மாடி வீடு கட்டியதைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். நிறைய பேர் முதுகில் குத்தியவர்கள். ஊரில் பல பேர் பல விதமாகச் சொல்வார்கள். என்னை நம்பு'' என விசாரிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்.

சம்மதிக்கும் பெண்களிடம் அடுத்த கட்டமாக, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தன்னையும் இணைத்துக்கொள்வான். நான் அறிந்த வரையில் காசியின் நயவஞ்சகத்தைச் சொல்லியிருக்கிறேன். எனது புதிய தோழிகள் இருவரது ஆதங்கத்தை, அவர்களின் குரலாகவே எதிரொலிக்கிறேன்.

“நல்ல நண்பனாக சில மாதங்கள் பேசினான். ஒரு நாள், உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். பெற்றோர் கைபேசி எண் கேட்டான். காதலிக்க ஆரம்பித்து பின் ஒரு நாள் இரவு நேரத்தில் video call செய்து நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்றான். நான் மறுத்ததற்கு, "நான்தானே உன் புருஷன்? உனக்கும் எனக்கும் மனதளவில் திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்? என்னை நம்ப மாட்டாயா?'' என்று கேட்டான். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன்தானே என இவனை நம்பி video call செய்தேன். இந்தக் கொடூரன் அனைத்தையும் Record செய்துவிட்டான்.

இவனைப் பற்றி தெரிந்து நான் விலக ஆரம்பித்தவுடன் "என்னுடன் வந்து உல்லாசமாக இரு.. இல்லையென்றால் சமூகவலைத்தளங்களில் உன் ஆபாச புகைப்படங்களை upload செய்து நீ ஒரு விபச்சாரி என்று கூறுவேன்'' என்றான். இவன் மிரட்டலுக்கு என்னை அடிமையாக்கி பல தடவை உல்லாசமாக இருந்தான். ஒரு கட்டத்தில் இவனை block செய்துவிட என் பெற்றோருக்கு அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என்று மிரட்டினான். நான் மனம் உடைந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டேன்.’

அவன் என்னிடம், "நான் நாடகக் காதல் என்று பொய் சொல்லவில்லை. உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீ படித்து முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம். உன் கடந்த காலத்தில் உன்னை யார் வேண்டுமானாலும் காயப்படுத்தி இருக்கலாம். இனிமேல் உனக்கு எல்லாமே நான்தான். உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்'' என்றான்.
 

http://onelink.to/nknapp


காதலிக்க ஆரம்பித்த சில நாட்களில் இவனைப் பற்றி தெரிந்து விலக ஆரம்பித்தேன். இவனைச் சந்திக்க மறுத்த போது "இந்த நேரத்தில், இந்த இடத்திற்கு நீ வரவில்லையென்றால், உன் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன்'' என்று மிரட்டி, அவனுடைய காரில் என்னை அடித்து துன்புறுத்தி பலாத்காரம் செய்தான். மேலும் “நான் கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டும், இல்லையென்றால் சமூகவலைத்தளங்களில் உன் நிர்வாணப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவேன்'' என்று பயமுறுத்தினான். ஒரு சொட்டுக் கண்ணீர்கூட உன் கண்களில் இருந்து வரக் கூடாது என்று கூறியவன், என் வாழ்க்கையைச் சீரழித்து தினமும் கண்ணீர் விட வைத்து விட்டான்.

தன் மிரட்டலுக்கு பயந்த பெண்களின் Facebook, Instagram கணக்குகளை தன் பெயரில் மாற்றி, அவர்களுடைய பெண் தோழிகளிடம் பேசுவான், காசி. அவர்களிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நாசப்படுத்துவான். பெண்களிடம் காசி வாங்கும் பரிசுகளை, தன் நண்பனுக்கு “நம் நட்பின் இலக்கணமாக உனக்கு வாங்கி வந்தேன் எனக் கூறுவான். பெண்களை மிரட்ட தன் கைவசம் உள்ள நண்பர்களை இப்படியும் கவனிப்பான். ஒவ்வொரு வரியிலும் வலியையும் இயலாமையையும் வெளிப்படுத்தியிருந்தார், அந்தப் பெண்!


 

 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.