Skip to main content

கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெறுவது உறுதி... நாராயணன் நம்பிக்கை

Published on 05/09/2020 | Edited on 06/09/2020

 

4444

 

கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரமான ப.சிதம்பரமும் டுவிட்டரில் பா.ஜ.க அரசுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார். 

 

இது தொடர்பாகவும், தமிழக அரசியல் குறித்தும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நம்மிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

 

இந்தியப் பொருளாதாரம் அடைந்திருக்கும் பின்னடைவுக்கு, மத்திய அரசின் மோசமான நிர்வாகமே காரணம். மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது. கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புற வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதால், வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. நம் நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குங்கள் என ராகுல்காந்தி கூறியுள்ளாரே? 

 

ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதேபோல் ஜி.எஸ்.டி வரி வருவாய் என்பது கடந்த ஆகஸ்ட் தொகையில் இருந்து 88% வந்திருக்கிறது. இதிலிருந்தே உற்பத்தி பெருகியிருக்கிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. கரோனா காலத்திற்கு முன்பே 13 கோடி வேலைவாய்ப்பு பறிபோய்விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தனர். தற்போது கரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் 13 கோடிபேரின் வேலை போய்விட்டதாகச் சொல்லுகிறார்கள் இப்படி ஒரு பொய்யை நூறுமுறை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடும் எனும் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு மலிவான அரசியல் செய்கிறார்கள். கரோனா காரணத்தினால் உலக பொருளாதாரம் பாதித்திருகிறது. நம்மைவிட வளர்ந்த நாடுகளான ஜப்பான், அமெரிக்காவும்கூட நம்மைவிட அதிகளவு பாதித்துள்ளது. பொருளாதாரத்தை சீர்திருத்தும் பணிகளை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. உற்பத்தி அதிகப்படுத்தினால்தான் வேலை வாய்ப்புகள் அதிகமாகும். வேலை வாய்ப்பு அதிகமானால் தான் வாங்கும் சக்தி அதிகமாகும். பொருளாதாரம் பலம் அடையும். 

 

ஊரடங்கின் நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே. 21 நாட்களில் கரோனா வைரஸை தோற்கடிப்போம் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, மற்ற நாடுகள் வெற்றி பெற்றதாகத் தோன்றும்போது இந்தியா ஏன் தோல்வியடைந்தது என்பதை விளக்கவேண்டும் என ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது குறித்து... 

 

எல்லா நாடுகளையும்விட கரோனாவைக் கட்டுபடுத்துவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஊரடங்கு என்பது நம்மை மருத்துவ ரீதியாகவும் மருத்துவக் கட்டமைப்பு ரீதியாகவும் தயார்படுத்திகொள்ள நாம் எடுத்துகொண்ட நேரம். 21 நாட்களில் கரோனா போய்விடும் என்று பிரதமர் சொன்னார் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம். கரோனா துவங்கிய காலத்தில் எப்படியொரு அபாயகரமான சூழ்நிலையை உணர்ந்தோம், தற்போது அதனை எதிர்க்கொண்டு வேகமாக சமாளித்து வருவதற்கு காரணமே, இந்தியா கரோனாவை எதிர்கொள்ள தற்காப்பு உபகரணங்கள் உற்பத்திசெய்வதை அதிகரித்திருப்பதுதான். முகக்கவசம், வெண்டிலேட்டர்கள், பரிசோதனை கருவிகள் இதுபோன்ற அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளையும் நாம் அதிகரிப்பதில் முதன்மையாக இருக்கிறோம். நாம் இதனை தற்போது ஏற்றுமதியும் செய்துவருகிறோம். இந்தநிலையில் சிதம்பரம் சொல்வது முழு பூசிணிக்காயை மறைக்கும் செயலாகத்தான் தெரிகிறது.    

 

வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என பலதரப்பிலும் சொல்கிறார்களே... 

 

வங்கியில் இருப்பது சாதாரண மக்களின் பணம். சாதாரண மக்களின் சேமிப்புப் பணம். அதனை வாங்கி கடனாக கொடுக்கிறோம். இப்படியிருக்க கடனை தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு எப்படி வட்டி கொடுக்க முடியும்? தற்சார்பு பாரதத்தின் மூலமாக பல திட்டங்களை அறிவித்திருக்கிறோம். 10 இலட்சம் கோடி ரூபாய்க்கு கடன்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து இலாபத்தை பெருக்கி, வருமானத்தைப் பெருக்கி, அதில் இருந்து வட்டியைச் செலுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது.   

 

Ad

 

கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு எப்படி இருக்கும்?

 

பா.ஜ.க உறுதியாக வெற்றி பெறும். 

 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தி.மு.க கூட்டணி பலமாக இருக்கிறதே?

 

அன்று இருந்த சூழ்நிலை வேறு. இன்று, எங்கள் கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது. இன்றைய கரோனா காலத்தில், மக்களுக்கு செய்திருக்கக்கூடிய விஷயத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் உறுதியாக பா.ஜ.க இந்த தேர்தலில் வெற்றி பெறும். எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டது. 

 

நயினார் நாகேந்திரன் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் எனத் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட்டுள்ளார். யார் வேட்பாளர் என்ற விவாதமும் பா.ஜ.க.வில் நடப்பதாகக் கூறப்படுகிறதே?

 

எந்த விவாதமும் நடைபெறவில்லை. கட்சியின் தலைமைதான் யார் வேட்பாளர் என்பதை முடிவுசெய்யும். கட்சியின் தலைமைக்கு எல்லோரும் கட்டுப்படுவார்கள். இதில் எந்தவித குழப்பமோ, பிரச்சனையோ எந்த நேரத்திலும் ஏற்படாது.  

 

கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் எங்களுக்குக் கட்டளையிட முடியாது என ஜெயக்குமார் சொல்கிறார். அ.தி.மு.க  - பா.ஜ.க கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறதா? 

 

Nakkheeran

 

யாரும் யாருக்கும் கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கூட்டணி ஸ்திரமாகவும் நிலையாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனால் சொல்லப்படும் வார்த்தைகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் 'எல்லாம்' அமைகிறது.

 


 

சார்ந்த செய்திகள்