Skip to main content

அத்துமீறும் காவல்துறை; விலா எலும்பு, கிட்னி பாதித்த நபருக்கு தீவிர சிகிச்சை!

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Kanyakumar district vadasery police station issue

 

சூரியவள்ளி என்ற பெண்மணி மிரட்சியுடன் பேசும் ஒரு வீடியோ, நாகர்கோவில் பகுதியைப் பரபரப்பில் மூழ்கடித்து வருகிறது.

 

விசாரணைக்கு வந்தவர்களை சித்திரவதை செய்து, கற்களால் பற்களை உடைத்த அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் விவகாரத்தின் தகிப்பு எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள வடசேரி காவல்நிலையத்திலும் இதேபோன்ற சித்ரவதைச் சம்பவம் ஒன்று அரங்கேறியிருப்பதை அந்த வீடியோ பதிவு உறுதிப்படுத்தியது.

 

அந்த வீடியோவில் பேசிய சூரியவள்ளி, அந்தப் பகுதியில் உள்ள ராஜாவூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி. அவர் அந்த வீடியோவில், “இரும்பு ஆக்கர் கடை நடத்திவரும் என் கணவரைத் தேடி 11 ஆம் தேதி மதியம், மஃப்டியில் 6 போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது சாப்பிட்டு விட்டு படுத்திருந்த என் கணவரை, ‘கஞ்சா விற்கிறியா’ன்னு கெட்டவார்த்தையில் பேசி, ‘உனக்குக் கூட்டாளி யாரெல்லாம் இருக்காங்க... சொல்லு’ன்னு கேட்டு மாறி, மாறி அடிச்சாங்க. உடனே நான் சத்தம் போட... அதைப் பார்த்த, தரையில் உட்கார்ந்திருந்த மாற்றுத்திறனாளியான என் மகள் தங்கசெல்வியும் அழுது கதற, எங்க ரெண்டு பேரையும் அந்த போலீஸ்காரங்க மிரட்டி அடிக்க வந்தார்கள்.

 

பின்னர் என் கணவரைப் பிடித்துச் சென்ற அந்த போலீஸ்காரங்க, ‘விசாரிச்சிட்டு 5 மணிக்கு விட்டுருவோம். இதுபற்றி எந்த வக்கீல்கள்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னால் நடக்கிறதே வேற’ என்றும் எச்சரித்தனர். ஆனால், இரவு ஆன பிறகும் அவர்கள் என் கணவரை விடாததால் போலீசில் போய் கேட்டோம். ‘நாங்க யாரும் பிடிச்சிட்டு வரலைன்னும், ஸ்பெஷல் டீம் புடிச்சிருப்பாங்க’ன்னும் சொன்னாங்க. ஆனால், மறுநாள் மதியம் 12 மணிக்கு வடசேரி போலீசில் இருந்து ஃபோன் செய்து, ‘உன் கணவர் இங்குதான் இருக்கிறார். கஞ்சா கேஸ் போட்டிருக்கோம். ஸ்டேஷன் ஜாமீனிலயே விடுகிறோம். வந்து கூட்டிட்டுப் போ’ன்னு சொன்னாங்க. நானும், என் தங்கச்சியும் போலீஸ் ஸ்டேஷன் போய் அவரை கூட்டிட்டு வர்ற வழியிலேயே, என் கணவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தாரு. உடனே திருப்பதிசாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, போலீஸ் தாக்கியதில் என் கணவருக்கு 6 இடத்தில் விலா எலும்பு முறிந்துள்ளதும் அதேபோல் போலீசார் அடித்த அடியில் என் கணவரின் கிட்னி பாதிக்கப்பட்டிருப்பதும், அவர் காது கிழிந்திருந்ததும் தெரியவந்தது.

 

Kanyakumar district vadasery police station issue

 

இதற்கெல்லாம் தனியார் ஆஸ்பத்திரியில் செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லாததால், ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு என் கணவரைக் கொண்டு போனோம். அங்கு சரியான சிகிச்சையளிக்காததால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்” என்று பதற்றம் மாறாமலேயே பேசியிருந்தார் அவர்.

 

அந்தப் பேச்சே, என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்தியது. இதே போல் தாக்குதலுக்கு ஆளான ஆறுமுகத்தின் மகள் தங்கசெல்வியும் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் அவர், “எங்க கண் முன்னையே போலீசார் பயங்கரமாக அப்பாவைத் தாக்கினார்கள். இதில் எங்க அப்பா பலத்த காயம் அடைந்தார். அதனால் எங்களுக்கு நியாயம் வேண்டும்” என்று கண்ணீருடன் தேம்பி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஆறுமுகத்தின் மனைவி சூரியவள்ளியை நாம் தொடர்பு கொண்டபோது, தன்னுடைய தம்பி சுபாஷிடம் பேசும்படி சொன்னார். அதன்படி நாம் சுபாஷை தொடர்புகொண்டோம். அவரோ, “நாளை பேசுங்கள்” என்று ஃபோனை கட் பண்ணிவிட்டார்.

 

சொன்னது போலவே மறுநாள் அவரை, நாம் தொடர்பு கொண்டபோது, “வடசேரி இன்ஸ்பெக்டர் சமரசம் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய பதிலைக் கேட்டுவிட்டு, உங்களிடம் பேசுகிறோம்” என்றார் கவலையாக. மறுபடியும் அவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் நம்மைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். ஆறுமுகத்தை நேரில் சந்தித்து முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம் என்று அவரை சந்திக்க நாம் மருத்துவமனைக்குச் சென்றபோது, நம்மைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக சிகிச்சை பெற்ற அறையையே அவர்கள் மாற்றியிருந்தார்கள். இதுகுறித்து சுபாஷிடம் நாம் கேட்டபோது, ஏதேதோ சொல்லி மழுப்பப் பார்த்தார். ஏற்கனவே போலீஸ் தாக்குதல் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறியதையும் மறுத்துப் பேசியதில், காவல்துறையோடு ஏதோ சமரசத்துக்கு வந்திருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

 

பின்னர் ஆறுமுகத்தின் வழக்கறிஞரிடம் நாம் பேசியபோது, நாம் நினைத்தது போலவே அவரும் தெளிவுபடுத்தினார். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்றபடி தயக்கத்தோடு பேசிய அவர், “போலீசாரால் தாக்கப்பட்ட ஆறுமுகத்தை, தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு, அவர் மனைவி என்னிடம் பேசினார். அப்போது நான் புகார் கொடுப்போம் என்று சொன்னேன். இதைத் தொடர்ந்து, ஆறுமுகம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதற்கு ஆதாரமான சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் இருக்கிறது. அவரை வீட்டில் வைத்துத் தாக்கியதோடு நிறுத்தாமல், ஆலம்பாறை பகுதியில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டுபோய் வைத்தும் கடுமையாகத் தாக்கி, அவர் விலா எலும்பை முறித்திருக்கிறார்கள். அதன் பிறகும் விடாமல், அந்தப் பகுதியில் 100 கிராம் கஞ்சாவுடன் ஆறுமுகம் நின்றதாக செட்டப் செய்து, வடசேரி எஸ்.ஐ. ஜெசி மேனகாவை வைத்து கேஸ் போட்டிருக்கிறார்கள். இந்த ஜெசி மேனகா, ஆறுமுகத்தைத் தாக்கிய எஸ்.ஐ. மகேஷ்வரனின் மனைவி ஆவார்.

 

இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் ஏ.ஏஸ்.பி. விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை உடைத்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததால், ஆறுமுகம் சம்பவமும் அந்த மாதிரி போய் விடக்கூடாதே என்று பயந்துபோய், ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் டாக்டரிடம் பேசி, ஆறுமுகத்தின் உடம்பில் எந்தக் காயமும் இல்லை என்று போலீஸ் தரப்பு ரிப்போர்ட் வாங்கியிருக்கிறது. இதுவும் மோசமான குற்றச்செயலாகும். இது பற்றி மெடிக்கல் காலேஜ் டீனிடம் நாம் கேட்டபோது, “அது போலீஸ் விசயம் என்பதால் என்னால் தலையிட முடியாது” என்று சொன்ன டீன், இருந்தாலும் நான் விசாரிக்கிறேன்னு சொன்னார். இந்த விவகாரத்தை நான் கிளறியதால், போலீஸ் தரப்பில் இருந்து என்னிடம் சமரசம் பேசினார்கள். நான் இதற்கு சம்மதிக்க முடியாது என்றதால், நேரடியாக ஆறுமுகத்தின் மனைவி மற்றும் மைத்துனரிடம் டி.எஸ்.பி.யும், இன்ஸ்பெக்டரும் பேசி, அவர்களை சமாதானத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டனர். பின்னர், ஆறுமுகத்தை போலீஸ் செலவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்

 

கட்டப்பஞ்சாயத்து பாணியிலான இந்த சமாதானத்தில் எனக்கு உடன்பாடு இல்லாததால், இந்த விசயத்தில் இருந்து நான் ஒதுங்கிக்கொண்டேன். ஆறுமுகத்தின் மீது வேறுவேறு வழக்குகளைப் போட்டு, குண்டாசில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று போலீஸ் மிரட்டியதால்தான், ஆறுமுகம் குடும்பத்தினர் பயந்து போய் சமரசத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைக்கு விரோதமாக ஆறுமுகத்தைத் தாக்கி அவர் எலும்புகளை முறித்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல் நடிக்கிறது போலீஸ். இது மிகப்பெரிய கொடுமை” என்றார் வருத்தமாய்.

 

இதுகுறித்து நம்மிடம் ஏரியா முக்கியஸ்தர்கள் சிலர், “பாவம் அந்த ஆறுமுகம். அநியாயமாக அவரை அடித்து, உதைத்து எலும்பை நொறுக்கிவிட்டார்கள். இப்போது மருத்துவ செலவுக்காக மட்டுமே சில லட்ச ரூபாய்களைக் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். போலீஸுக்கு உடந்தையாக மருத்துவமனை நிர்வாகமும் செயல்பட்டிருக்கிறது” என்றார்கள். இது குறித்து வடசேரி விசாரணைக் காவலர்களோ, “ஆறுமுகத்தின் மீது ஏற்கனவே 6 கஞ்சா வழக்குகள் இருக்கின்றன. அன்றும் அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களோடு சுற்றித் திரிந்ததால்தான், நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தோம். அவரை நாங்கள் தாக்கவில்லை” என்றார்கள் அழுத்தமாக.

 

“ஏறத்தாழ இன்னொரு அம்பாசமுத்திரம் சம்பவம்தான் வடசேரி காவல்நிலையத்தில் நடந்திருக்கிறது. இதையும் விசாரிக்க வேண்டும்” என்கிறார்கள் ஏரியா வாசிகள்.

 

 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.