Skip to main content

குமரியில் கடுமையான போட்டியா ? - கள நிலவரம்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., அ.ம.மு.க. உட்பட இதர கட்சிகள், சுயேட்சைகள் என 15 பேர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர். பதினைந்து பேரில் நானா- நீயா என துவந்த யுத்தம் நடப்பது காங்கிரசின் வசந்தகுமாருக்கும் பா.ஜ.க.வின் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும்தான்.

 

ponnar



இதில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சில பாஸிட்டிவ் அம்சங்கள் இருக்கின்றன. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்திய அமைச்சரானவர். தற்சமயம் தமிழகத்தில் ஆட்சியமைத்திருக்கும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி. ஆனால் இரண்டு அரசுகளின்மீது ஆட்சிக்கெதிரான அலையிருப்பதுதான் அவரது பலவீனம்.

 

ponnar 1



குமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் பா.ஜ.க.வுக்கு அடித்தளம் போட்டு, கிராமம் கிராமமாக கட்சியை வளர்த்தெடுத்தவர் எம்.ஆர்.காந்தி. ஆனால் இன்றைக்கு அவரும் அவரது ஆதரவாளர்களும் பதவியின்றி குமுறலில் இருந்தனர். இந்தக் குமுறலையறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் தானே நேரடியாக எம்.ஆர். காந்தியைத் தேடிச்சென்று, அரவணைத்து எம்.ஆர்.காந்தி தரப்பினரின் குமுறலைக் குறைத்திருக்கிறார்.

 

vasanthakumar



பிரச்சார விவகாரத்திலும் கட்சியினரின் விருப்பப்படி போகாமல், அ.தி.மு.க.வினரின் போக்குக்கிணங்க பொன்னார் போவது விரிசலை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசுக்கு இணையாக கிறித்தவர்களின் வாக்கை வாங்கிவிடலாமென அ.தி.மு.க.வினர் கிறிஸ்தவப் பிரமுகர்கள், பாதிரியார்கள் நடுவில் அழைத்துச் செல்ல, தீவிர இந்து ஆதரவாளர்களும் பா.ஜ.க.வினருமே பொன்னாரை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். ஆரம்பத்தில் கிறித்தவ ஆலயம் பக்கம் தலைகாட்டிய பொன்னாரின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களை கிறித்தவர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

40 ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டங்களைக் கூறி பொன்னார் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகையில், "ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' என கேள்வியெழுப்புகின்றனர். "காங்கிரஸ்தான் அதற்கு முட்டுக்கட்டை போட்டது என்றால்... ஆட்சியிலில்லாத காங்கிரஸ் எப்படி முட்டுக்கட்டை போட்டது, அதை ஏன் உங்களால் சமாளிக்க முடியவில்லை' என எதிர்க்குரல்கள் எழுவது பா.ஜ.க.வினரை வேர்த்து விறுவிறுக்க வைக்கிறது.

கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் காங்கிரசில் 56 பேர் முட்டிமோதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மீண்டும் ஜாக்பாட் அடித்திருப்பது வசந்தகுமாருக்குத்தான். வசந்தகுமார் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஒதுங்கியே இருந்தார். அவரை தற்போதுதான் சரிக்கட்டியிருக்கிறார்கள். அதுபோல விஜயதாரணி எம்.எல்.ஏ. வசந்தகுமாருக்கு சால்வை போர்த்தியதோடு சரி, இதுவரை பிரச்சாரத்தில் தலையைக்கூட காட்டவில்லை.

சொந்தக் கட்சி மனக்கசப்பே மாறாத நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் இழுத்த இழுப்புக்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீட் அறிவித்ததிலிருந்து வசந்தகுமாருடன் இருந்த மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார், தி.மு.க.வினருக்கும், பூத் கமிட்டிக்கும் தன் மூலம் வைட்டமின்  சப்ளை நடக்குமென நம்பியிருந்தார். அதை தானே பார்த்துக்கொள்வதாக வசந்தகுமார் சொல்ல, ராஜேஷ்குமார் முகம் சுண்டிச் சுருங்கிவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

சீட் கிடைத்த வசந்தகுமாரைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை, என்ன தகுதிக் குறைச்சல் என மனசுக்குள்ளே மருகிக்கொண்டிருக்க, ஆரம்பத்திலிருந்தே வசந்தகுமார் ஜெயித்துவிடுவார் என்ற பேச்சு தொகுதி முழுக்கவும் ஓடுவதால் சென்ற முறை போலில்லாமல் தொண்டர்களிடையே கஞ்சத்தனத்தைக் காட்டுகிறாராம்.

இந்த ஏடாகூடங்கள் பிரச்சாரத்திலும் சுணக்கமாக வெளிப்பட, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இது சாதகமாகிவிடுமோ என உண்மையான தொண்டர்கள் கலங்கிநிற்கின்றனர்.ஆனால், தன்மீதும் வாக்காளர்கள் மீதும் நம்பிக்கை வைத்துப் பேசும் வசந்தகுமார், தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார். "ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்ததாகக் கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயாரா' என்கிறார் சவாலாக.

பரிசுப் பெட்டி புகழ் அ.ம.மு.க. வேட்பாளர் லெட்சுமணன், மக்களுக்கு பரிசு கொடுக்கிறாரோ… இல்லையோ… ரெண்டு பெரிய கட்சிகளுக்கும் பிரச்சாரத்தில் டஃப் கொடுக்கிறார்.. அ.ம.மு.க. தொண்டர்களும் மண்டைபிளக்கும் வெயிலிலும் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் ஆர்வம்காட்டிவருகின்றனர். தாமரை மலரப் போகிறதோ… கை ஓங்கப் போகிறதோ… என்கிற கவலையின்றி, கரன்ஸி வெள்ளம் எப்போது பாயப் போகிறது என்ற எதிர்பார்ப்பே பெரும்பாலானவர்களிடம் வெளிப்பட்டதையும் களத்தில் காணமுடிந்தது.

 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.