Skip to main content

குமரியில் கடுமையான போட்டியா ? - கள நிலவரம்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., அ.ம.மு.க. உட்பட இதர கட்சிகள், சுயேட்சைகள் என 15 பேர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர். பதினைந்து பேரில் நானா- நீயா என துவந்த யுத்தம் நடப்பது காங்கிரசின் வசந்தகுமாருக்கும் பா.ஜ.க.வின் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும்தான்.

 

ponnar



இதில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சில பாஸிட்டிவ் அம்சங்கள் இருக்கின்றன. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்திய அமைச்சரானவர். தற்சமயம் தமிழகத்தில் ஆட்சியமைத்திருக்கும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி. ஆனால் இரண்டு அரசுகளின்மீது ஆட்சிக்கெதிரான அலையிருப்பதுதான் அவரது பலவீனம்.

 

ponnar 1



குமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் பா.ஜ.க.வுக்கு அடித்தளம் போட்டு, கிராமம் கிராமமாக கட்சியை வளர்த்தெடுத்தவர் எம்.ஆர்.காந்தி. ஆனால் இன்றைக்கு அவரும் அவரது ஆதரவாளர்களும் பதவியின்றி குமுறலில் இருந்தனர். இந்தக் குமுறலையறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் தானே நேரடியாக எம்.ஆர். காந்தியைத் தேடிச்சென்று, அரவணைத்து எம்.ஆர்.காந்தி தரப்பினரின் குமுறலைக் குறைத்திருக்கிறார்.

 

vasanthakumar



பிரச்சார விவகாரத்திலும் கட்சியினரின் விருப்பப்படி போகாமல், அ.தி.மு.க.வினரின் போக்குக்கிணங்க பொன்னார் போவது விரிசலை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசுக்கு இணையாக கிறித்தவர்களின் வாக்கை வாங்கிவிடலாமென அ.தி.மு.க.வினர் கிறிஸ்தவப் பிரமுகர்கள், பாதிரியார்கள் நடுவில் அழைத்துச் செல்ல, தீவிர இந்து ஆதரவாளர்களும் பா.ஜ.க.வினருமே பொன்னாரை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். ஆரம்பத்தில் கிறித்தவ ஆலயம் பக்கம் தலைகாட்டிய பொன்னாரின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களை கிறித்தவர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

40 ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டங்களைக் கூறி பொன்னார் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகையில், "ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' என கேள்வியெழுப்புகின்றனர். "காங்கிரஸ்தான் அதற்கு முட்டுக்கட்டை போட்டது என்றால்... ஆட்சியிலில்லாத காங்கிரஸ் எப்படி முட்டுக்கட்டை போட்டது, அதை ஏன் உங்களால் சமாளிக்க முடியவில்லை' என எதிர்க்குரல்கள் எழுவது பா.ஜ.க.வினரை வேர்த்து விறுவிறுக்க வைக்கிறது.

கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் காங்கிரசில் 56 பேர் முட்டிமோதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மீண்டும் ஜாக்பாட் அடித்திருப்பது வசந்தகுமாருக்குத்தான். வசந்தகுமார் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஒதுங்கியே இருந்தார். அவரை தற்போதுதான் சரிக்கட்டியிருக்கிறார்கள். அதுபோல விஜயதாரணி எம்.எல்.ஏ. வசந்தகுமாருக்கு சால்வை போர்த்தியதோடு சரி, இதுவரை பிரச்சாரத்தில் தலையைக்கூட காட்டவில்லை.

சொந்தக் கட்சி மனக்கசப்பே மாறாத நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் இழுத்த இழுப்புக்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீட் அறிவித்ததிலிருந்து வசந்தகுமாருடன் இருந்த மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார், தி.மு.க.வினருக்கும், பூத் கமிட்டிக்கும் தன் மூலம் வைட்டமின்  சப்ளை நடக்குமென நம்பியிருந்தார். அதை தானே பார்த்துக்கொள்வதாக வசந்தகுமார் சொல்ல, ராஜேஷ்குமார் முகம் சுண்டிச் சுருங்கிவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

சீட் கிடைத்த வசந்தகுமாரைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை, என்ன தகுதிக் குறைச்சல் என மனசுக்குள்ளே மருகிக்கொண்டிருக்க, ஆரம்பத்திலிருந்தே வசந்தகுமார் ஜெயித்துவிடுவார் என்ற பேச்சு தொகுதி முழுக்கவும் ஓடுவதால் சென்ற முறை போலில்லாமல் தொண்டர்களிடையே கஞ்சத்தனத்தைக் காட்டுகிறாராம்.

இந்த ஏடாகூடங்கள் பிரச்சாரத்திலும் சுணக்கமாக வெளிப்பட, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இது சாதகமாகிவிடுமோ என உண்மையான தொண்டர்கள் கலங்கிநிற்கின்றனர்.ஆனால், தன்மீதும் வாக்காளர்கள் மீதும் நம்பிக்கை வைத்துப் பேசும் வசந்தகுமார், தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார். "ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்ததாகக் கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயாரா' என்கிறார் சவாலாக.

பரிசுப் பெட்டி புகழ் அ.ம.மு.க. வேட்பாளர் லெட்சுமணன், மக்களுக்கு பரிசு கொடுக்கிறாரோ… இல்லையோ… ரெண்டு பெரிய கட்சிகளுக்கும் பிரச்சாரத்தில் டஃப் கொடுக்கிறார்.. அ.ம.மு.க. தொண்டர்களும் மண்டைபிளக்கும் வெயிலிலும் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் ஆர்வம்காட்டிவருகின்றனர். தாமரை மலரப் போகிறதோ… கை ஓங்கப் போகிறதோ… என்கிற கவலையின்றி, கரன்ஸி வெள்ளம் எப்போது பாயப் போகிறது என்ற எதிர்பார்ப்பே பெரும்பாலானவர்களிடம் வெளிப்பட்டதையும் களத்தில் காணமுடிந்தது.

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.