Skip to main content

கலைஞரும் இல்லை... ஷாலினியும் இல்லை... வலியோடு பேசுகிறேன்! - கலங்கிய கனிமொழி

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

இளம் பத்திரிகையாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த ஷாலினி எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கவிதை எழுதுவதில் அதீத விருப்பம் கொண்டிருந்த அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட அவரின் ஊடக நண்பர்கள் முடிவு செய்தனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்புரையாற்றினார். கவிதையை பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்த அவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை நிறைவாக ஆட்சியாளர்கள் பற்றி கொஞ்சம்  காட்டமாகவே பேசினார். அவரது பேச்சு...

"ஷாலினியை பற்றி தெரிந்த, பழகிய நபர்கள் அதிகம் இருக்கும் இந்த இடத்தில், அவரை பற்றி பேச வேண்டிய நெகிழ்வான தருணமாகவே இதை பார்க்கிறேன். வார்த்தைகளை தேடித்தேடி பேச வேண்டிய நிலையில்தான் நான் உங்கள் முன் நிற்கிறேன். நான் இந்த அரங்கிற்குள் நுழைந்த போது ஷாலினி்யின் பெற்றோர்கள் என்னிடம் வந்து, ஷாலினி தலைவர் கலைஞரோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டாள் என்று கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறியதும், நான் கலைஞரிடம் கூட்டிச் செல்கிறேன் என்று கூற, என் உதடுகள் எத்தனித்தது. ஆனால், அதை சாத்தியமாக்க அவர்கள் இருவருமே இல்லை என்று அதன் பிறகே நான் உணர்ந்தேன். அவருடைய பெற்றோரின் வலி, வேதனை ஆகியவற்றை இங்கே பேசக்கூடாது. ஆனாலும், அதை என்னால் உணர முடிகிறது. யார் வேண்டுமானாலும் கலைஞரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில், ஷாலினி கலைஞரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாமல் போனதும், அந்த செய்தி எனக்கு தெரியாமல் போனதும் மிக வருத்தமான ஒன்று. எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் அதை ஷாலினிக்கு நிறைவேற்றிக் கொடுத்திருப்பேன். அவ்வாறு செய்ய முடியவில்லையே என்ற வலியோடுதான் நான் உங்கள் முன் நிற்கிறேன்.
 

  kanimozhi speaks about kalaigar karunanidhi




இத்தனை நண்பர்கள் ஒன்றுகூடி அந்த பெண்ணை பற்றிக் பேசக்கூடிய, அந்த பெண்ணின் புத்தகத்தை வெளியிடக் கூடிய வாய்ப்பு என்பது, ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்குக் கூட கிடைக்காது. அந்த வகையில் ஷாலினி நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அதற்கு அரங்கத்திற்கு வந்துள்ள அவளின் நண்பர்களே சாட்சி. இதைவிட ஒரு பெருமையான வாழ்வை யாராலும் வாழ்ந்திருக்க முடியாது. இதற்காக ஷாலினியின் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதைவிட அதிகமாக ஷாலினியின் பெற்றோருக்கு யாரும் செய்துவிட முடியாது. இன்று சமூகம் என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறது என்கிற சமூக அக்கறை இந்தப் பெண்ணுக்கு அதிகம் இருந்திருக்கிறது. ஷாலினி இன்று நம்மோடு இல்லாமல் இருப்பது நமக்கு நேர்ந்திருக்கின்ற பெரிய இழப்பு. ஷாலினி போல தமிழ் மீது அதிக பாசமும், சமூக அவலங்களை கலைய வேண்டும் என்ற நோக்கமும் பத்திரிகைதுறை நண்பர்கள் அனைவருக்கும் வர வேண்டும். இத்தகைய ஆர்வத்தை அவரின் எழுத்துக்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகத்தில் உள்ள சிறப்பான செய்திகளை அனைவரும் கூறினார்கள். நானும் சிலவற்றை மேற்கோள் காட்ட வேண்டும். அந்த வகையில், நட்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க அருகில் இருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்ற ஒரு வரியும், நாம் வாழ்வில் செய்யக்கூடாத ஒன்று பிறரை வேதனைபடுத்துவதுதான் என்ற மற்றொரு வரியும் முக்கியமானதாக நான் பார்க்கிறேன். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு வேறு வேலைகளில் நம்முடைய கவனத்தை திருப்பிக்கொண்டுதான் நாம் இருக்கிறோம். நம்மை தாக்கும் விஷயங்களை எல்லாம் நாம் எப்படி தாண்டிப்போய் கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் இந்தப்  புத்தகத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். நாம் மேஜையில் உணவுக்காக காத்திருக்கும் போது, நமக்கு கிடைக்கும் அந்த புல் மீல்ஸ் உணவில், உடைந்திருக்கிற அப்பளத்துக்காக மட்டுமே நாம் கவலை கொள்கிறோம். அது நம்முடைய கைக்கு வருவதற்கு கஷ்டப்பட்ட விவசாயிகளை நினைத்து பார்க்கவில்லை என்பதை ஒரு கவிதையாக இந்தப் புத்தகத்தில் ஷாலினி கூறியுள்ளார். சிலப்பதிகாரத்தை பற்றி்ய ஒரு கவிதையில் கண்ணகியிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். தவறு செய்த கோவலனை எரிக்காமல், மதுரையை எரித்தது எந்த விதத்தில் நியாயம் என கேட்டுள்ளார்.

இன்று இந்த சமூகத்தை எதிர்நோக்கி உள்ள அனைத்து கேள்விகளையும் தன்னுடைய இந்தப் புத்தகத்தின் வாயிலாக ஷாலினி கேட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு விடைகாண வேண்டும் என்ற கட்டுப்பாடு அனைவருக்கும் இருக்க வேண்டும். இங்கு பேசிய தோழர் ஒருவர் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சுடுகாடு என்று பேசிவிட்டார். ஒரே சுடுகாடு என்பதை அவர் தவறாக சொல்லியிருக்கக்கூடும். அதற்கு, இங்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. ஒற்றை சுடுகாட்டை இந்த ஆட்சியாளர்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். அவர்கள் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மனிதர்கள் பிரிந்து கிடப்பதையே விரும்புகிறார்கள்".

 


 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.